under review

சொ. சிங்காரவேலன்

From Tamil Wiki
Revision as of 21:51, 31 March 2026 by ASN (talk | contribs) (Page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சொ. சிங்காரவேலன்

சொ. சிங்காரவேலன் (புலவர் சொ. சிங்காரவேலன்; முனைவர் சொ. சிங்காரவேலன்; டாக்டர் சொ. சிங்காரவேலன்; பேராசிரியர் சொ. சிங்காரவேலன்) (20-ம் நூற்றாண்டு) தமிழறிஞர், கல்வியாளர், எழுத்தாளர், ஆய்வாளர். ‘செஞ்சொற்கொண்டல்' என்று அழைக்கப்பட்டார்.

பிறப்பு, கல்வி

சொ. சிங்காரவேலன், இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழறிஞர்களுள் ஒருவர். மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருச்சிற்றம்பலத்தில் பிறந்தார். தந்தை சொக்கலிங்க தேசிகர். சொ. சிங்காரவேலன், தருமபுர ஆதினக் கல்லுரியில் தமிழ் கற்று வித்துவான் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மொழியியலில் பட்டயம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ‘Linguicetics Approach Appar Thevaram’ (மொழியியல் அணுகுமுறையில் அப்பர் தேவாரம்) என்ற தலைப்பில்  ஆய்வு செய்து ஆங்கிலத்தில் ஆய்வேட்டைச் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சொ. சிங்காரவேலன், தருமபுரம் ஆதீனத்தின் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின் பேராசிரியராக உயர்ந்தார். முதல்வராகப் பணியாற்றினார். மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள ஏ.வி.சி. கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

மணமானவர். மனைவி: வடிவுக்கரசி.

இலக்கிய வாழ்க்கை

சொ. சிங்காரவேலன், ‘செந்தமிழ்’, ‘செந்தமிழ்ச் செல்வி’ போன்ற இலக்கிய இதழ்களிலும், ‘ஞானசம்பந்தம்’ போன்ற சமய, ஆன்மிக இதழ்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். தருமபுர ஆதீன ஆண்டு மலர்களில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். 400-க்கும் மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளை எழுதினார். ஆராய்ச்சி, உரை, வரலாறு, கவிதை, கட்டுரை, நாடகம் என 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவற்றுள், 'திருஞானசம்பந்தர் வரலாற்றாராய்ச்சியும் தேவாரத் திறனாய்வும்', 'வள்ளலார் வாழ்வியல்' போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தன. ஆய்வு மாணவர்கள் பலருக்கு முனைவர் பட்ட வழிகாட்டியாகச் செயல்பட்டு பல மாணவர்கள் முனைவர், முது முனைவர் பட்டம் பெற உதவினார்.

மேடையுரை

சொ. சிங்காரவேலன், 1958 முதல் ஆதீனங்களில் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றினார். தொடர்ந்து பல்வேறு இலக்கிய, ஆன்மிக, சமயக் கருத்தரங்குகளில் உரையாற்றினார். 1979-ல் நடைபெற்ற அகில இலங்கைச் சைவ மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றுச் சமயச் சொற்பொழிவாற்றினார். சிங்கப்பூர், மலேசியா சென்று பல்வேறு இலக்கிய சமயப் பேருரைகளை நிகழ்த்தினார்.

நாடகம்

சொ. சிங்காரவேலன், ஊமைக் குயில்', 'வெள்ளிவீதி’ உள்ளிட்ட சில நாடகங்களை எழுதினார். அவற்றில் சில கல்லூரிகளில் நாடகங்களாகப் பயிலப் பெற்றன.

இதழியல்

சொ. சிங்காரவேலன், ‘ஞானசம்பந்தம்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

விருதுகள்

  • தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
  • செஞ்சொற்கொண்டல் பட்டம்
  • தமிழாகரர்
  • திருமுறை உரைமணி

மதிப்பீடு

சொ. சிங்காரவேலன், சமய இலக்கியங்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். இலக்கிய, இலக்கண நூல்கள் சிலவற்றுக்கு உரை எழுதினார். தலவரலாற்று நூல்களைத் தொகுத்தார். நாடகங்கள் சிலவற்றை எழுதினார். கல்வியாளர், எழுத்தாளர், ஆய்வாளர், உரையாசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்

நூல்கள்

ஆய்வு/கட்டுரை நூல்கள்
  • திருஞானசம்பந்தர் வரலாற்றாராய்ச்சியும் தேவாரத் திறனாய்வும்
  • திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் தமிழ்
  • அப்பர் தேவாரத்தில் இலக்கியப் பண்புகள்
  • அப்பர் தேவாரத்திறன்
  • வள்ளலார் வாழ்வியல்
  • புதுமைக்கு
  • இக்காலத் தமிழியல்
  • சித்தர்க்காட்டில் மலர்ந்த சிவஞானம்: துகளறுபோத விளக்கம்
  • காஞ்சி ஸ்ரீ காமகோடிபீடாதிபதிகள் ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நான்மணிமாலை
  • காவிரி வளம்
  • புதுமைக்குறள்
  • கவிதை இன்பம்
  • தொல்காப்பியம்: எளிய உரை
  • தண்டியலங்காரம் உரை
  • அகப்பொருள் விளக்கம் உரை  
  • காரைநகர், கார்த்திகேயப்புலவர் இயற்றிய திண்ணபுர அந்தாதி செஞ்சொல் விளக்க உரை
  • திருமந்திரத் திருமாலை - தொகுப்பும் விளக்கக் குறிப்பும்
  • திருக்கோயில்களும் பண்பாடும்
நாடகம்
  • ஊமைக்குயில்
  • வெள்ளி வீதி
தொகுப்பு
  • சைவ சமயம் வரலாற்றுப் பார்வை
  • திருநீடூர்த் தல வரலாறு
  • திருஇந்தளூர் தான்தோன்றீசுவரர் திருக்கோயில் தலவரலாறு

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.