under review

நாளை மற்றுமொரு நாளே

From Tamil Wiki
Revision as of 15:54, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
நாளை மற்றுமொரு நாளே.க்ரியாவின் இரண்டாம் பதிப்பு. நன்றி s arun prasath

நாளை மற்றுமொரு நாளே (1974) ஜி.நாகராஜன் எழுதிய நாவல். குற்றவாழ்க்கையில் உழலும் கந்தன் என்னும் மையக்கதாபாத்திரத்தின் ஒரு நாளை இந்நாவல் சித்தரிக்கிறது

எழுத்து, வெளியீடு

ஜி. நாகராஜன் இந்நாவலை பல்வேறு பகுதிகளாக வெவ்வேறு ஊர்களில் எழுதி கைவிட்டிருந்தார். பின்னர் அக்கைப்பிரதிகளை திரட்டி தன் பித்தன்பட்டறை என்னும் பதிப்பகம் சார்பாக 1974-ல் வெளியிட்டார். அதிகம்பேரால் படிக்கப்படாத அந்நாவல் ஜி.நாகராஜனின் மறைவுக்குப்பின் 1986-ல் சுந்தர ராமசாமியின் முயற்சியால் க்ரியா பதிப்பக வெளியீடாக மறுபிரசுரமாகியது.

பின்னணி

'இந்தக்கதை ஒரு மனிதனின் ஒருநாள் வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், இவையே அவன் வாழ்க்கை. அவனுடைய அடுத்தநாளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம். ஏனென்றால் அவனுக்கும் நம்மில் பலருக்கும்போலவே நாளை மற்றுமொரு நாளே' என்று முகப்புக் குறிப்பில் ஜி.நாகராஜன் சொல்கிறார்.

மார்கரெட் மிச்சல் எழுதிய Gone With The Wind (1936) என்னும் நாவலில் வரும் இறுதி வரி Tomorrow is another day. அந்நாவலின் திரைப்பட வடிவிலும் இது கையாளப்பட்டது. அந்த புகழ்பெற்ற வரியின் தமிழாக்கம் இந்நாவலின் தலைப்பு.

கதைச்சுருக்கம்

கந்தன் நகரத்தின் குடிசைப்பகுதியில் வாழ்பவன். பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் வாழ்க்கை கொண்டவன். அவன் மனைவி மீனா ஒரு பாலியல்தொழிலாளி. கந்தன் போதையடிமையும்கூட. கந்தன் காலை எழும்போது தொடங்கும் நாவல் அவனுடைய குடும்பவாழ்க்கை, அவன் ஒருநாளில் சந்திக்கும் வெவ்வேறு மனிதர்கள் வழியாக அன்றிரவு நிறைவுறுகிறது. இச்சிறுநாவலில் ஜி.நாகராஜன் அரசியல், சினிமா, ஊடகங்கள், குடும்பவாழ்க்கை என அனைத்தையும் மெல்லிய பகடியுடன் விமர்சிக்கிறார்.

மொழியாக்கங்கள்

  • நாளை மற்றுமொரு நாளே மலையாளத்தில் ஆற்றூர் ரவிவர்மா மொழியாக்கத்தில் (நாள மற்றுமொரு நாள் மாத்ரம்) வெளிவந்துள்ளது
  • நாளை மற்றுமொரு நாளே ஆங்கிலத்தில் Tomorrow is One More Day என்ற பெயரில் A. Ziffren, A Jullie ஆகியோரால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது

இலக்கிய இடம்

ஜி.நாகராஜனின் முதன்மைப் படைப்பாக கருதப்படும் நாளை மற்றுமொரு நாளே குற்றப்பின்னணி கொண்டவர்களின் வாழ்க்கையை யதார்த்தமாகச் சித்தரித்தமையாலும், அதிலுள்ள சமூகவிமர்சனம் சார்ந்த பகடியாலும், உணர்வுகலவாத நவீனத்துவ நடையாலும் தமிழிலக்கியத்தில் சிறப்பிடம் பெற்ற ஒன்று.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Sep-2022, 11:46:16 IST