under review

ஷாதிலீ மாலை

From Tamil Wiki
Revision as of 22:51, 26 April 2025 by ASN (talk | contribs) (Page Created: Para Added and Edited: Link Created: Proof Checked)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஷாதிலீ மாலை (பதிப்பு: 1999) இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் கா. அப்துல்கபூர்.

வெளியீடு

ஷாதிலீ மாலை, கா. அப்துல்கபூர் இயற்றிய ‘பாமாலை 18’ என்ற இஸ்லாமிய மாலை இலக்கியங்களின் தொகுப்பு நூலில், பிற மாலை இலக்கிய நூல்களுடன் இணைந்து இடம்பெற்றது. பாமாலை 18 நூலை தக்கலையில் உள்ள பொன்மொழிப் பதிப்பகம், 1999-ல் வெளியிட்டது.

நூல் அமைப்பு

ஷாதிலீ மாலை அடிதோறும் நான்கு சீர்களைக் கொண்ட 71 கண்ணிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ’ஷாதிலியே’ என்ற சொல் ஈற்றில் இடம்பெற்றது.

உள்ளடக்கம்

அபுல்ஹஸனுஷ் ஷாதிலீ என்பவர், இஸ்லாமிய இறைநேசர்களுள் ஒருவர். அவரைப் போற்றிப் புகழ்ந்தும், அவரது அருங்குணங்களை விளக்கியும் ஷாதிலீ மாலை பாடப்பட்டுள்ளது. ஷாதிலீ ஹிஜ்ரி 593-ல் மொராக்கோ நாட்டின் வடதிசையில் கிமரா எனும் ஊரில் பிறந்தார். இளமையிலேயே ‘ஹஜ்' எனும் புனித பயணத்தை நிறைவேற்றினார். எகிப்து நாட்டு அரசன் அய்யூப் மாலிக்சா நெறிதவறிச் செய்தப் பிழையை உணரச் செய்தார். அவரது நற்குணங்களும், கொடை உள்ளமும், சிந்தனைகளும் ஷாதிலீ மாலை நூலில் விளக்கப்பட்டுள்ளன.

பாடல்

மெய்ஞ்ஞான மேதைகளின் மேன்மையுறு மரபதனில்

அஞ்ஞானம் போக்கவந்த அரும்புகழின் ஷாதிலியே


நல்லோர்கள் நிறைந்திருந்த நலமான தூனிஸ் நகர்

வல்லோனின் வலீயாக வரவேற்ற ஷாதிலியே


நல்லடியார் எனச்சொல்லி நாடு சுற்றும் போலிகளைச்

சொல்லடியால் திருத்திவிட்ட சொல்லரசே ஷாதிலியே


அறிவில்லா எகிப்தரசன் ஐயூபு மாலிக்சா

நெறியில்லாப் பிழையுணர நெறிகாட்டும் ஷாதிலியே


பீதியினால் துன்புறுவோர் பிணிதீர்க்கும் மாமருந்தே

சோதியினால் சோர்வகற்றிச் சுகமளிக்கும் ஷாதிலியே


பாருலக மாந்தர்களின் பசிதாகம் போக்கிடுமோர்

ஊருணிபோல் பயன்விளைக்கும் உயர்ஷெய்கு ஷாதிலியே

மதிப்பீடு

ஷாதிலீ மாலை, இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இஸ்லாமிய இறைநேசரான அபுல்ஹஸனுஷ் ஷாதிலீ மீது பாடப்பட்டது. அபுல்ஹஸனுஷ் ஷாதிலீ மீது தமிழில் பாடப்பட்ட ஒரே மாலை இலக்கிய நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை

  • இந்திய இலக்கியச் சிற்பிகள்: கா. அப்துல்கபூர், எழுத்தாக்கம்: ஹ.மு. நத்தர்சா, சாகித்ய அகாதமி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2005.
  • பாமாலை 18, கா. அப்துல்கபூர், பொன்மொழி பதிப்பகம், தக்கலை, முதல் பதிப்பு: 1999

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.