ஞானியார் அடிகள்
ஞானியார் அடிகள் (இயற்பெயர்: பழநியாண்டி; 17 மே 1873 - 2 ஆகஸ்ட் 1942) ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள். ஞானியார் அடிகள் என அழைக்கப்பட்டார். சைவ மறுமலர்ச்சிக்குப் பாடுபட்ட துறவி, பேச்சாளர், உரையாசிரியர். மதுரைத் தமிழ்ச்சங்கம் தோன்றுவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தவர்.
பிறப்பு
ஞானியார் அடிகள், தமிழ்நாடு, கும்பகோணத்திறகு அருகில் அமைந்துள்ள திருநாகேஸ்வரம் என்ற ஊரில் செங்குந்தர் வீரசைவ சமய முறையில், அண்ணாமலை ஐயர் - மற்றும் பார்வதியம்மை இணையருக்கு மகனாக மே 17, 1873 அன்று பிறந்தார். ஞானியார் அடிகளுக்கு பெற்றோர் இட்ட பெயர் பழனியாண்டி. வீரசைவ மதத்தை பின்பற்றியதால் இவரது தந்தை ஐயர் பட்டம் பெற்றார். அண்ணாமலை அய்யரும் பார்வதி அம்மையும், திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலய குருமூர்த்திகளைக் தங்கள் குல குருவாகக் கொண்டிருந்தவர்கள். பழநியாண்டி பிறந்த ஆறுமாதத்தில் பிள்ளைக்கு சிவலிங்க தாரணம் செய்து வைப்பதற்காக அப்போதைய ஞானியார் மடாலயத்து நான்காம் குருவிடம் பிள்ளையோடு வந்தனர். குருவின் விருப்பத்தின்படி தங்கள் குழந்தையான பழனியாண்டியை மடத்திலேயே விட்டுவிட்டனர்.
கல்வி
திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடத்திலேயே வளர்ந்த ஞானியார் அடிகளுக்கு எழுத்தறியும் காலம் வந்ததும், மடாலயத்தின் குருநாதர், சென்னகேசவலு நாயுடு என்பவரை வரவழைத்து, மடாலயதிதிலேயே தெலுங்கு மொழியைக் கற்பிக்கச் செய்தார். நான்கு ஆண்டுகள் ஞானியார் அடிகள் தெலுங்கு கற்றார். பின்னர், தாய்மொழி தமிழும், ஆங்கிலமும் பயிற்றப் பெற்ற பள்ளியில் சேர்ந்து பயின்றார். பள்ளிக்குச் சென்ற நேரம்போக மடத்தில் இதர பணிகளையும் மேற்கொண்டுவந்தோடு, விநாயகர் அகவல், திருவாசகச் சிவபுராணம், திரு அகவல்கள், திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா முதலியவற்றை பாராயணம் செய்துவந்தார்.
மடாலயத் தலைவர்
ஞானியார் அடிகளுக்கு பதினேழாம் வயது நடந்து கொண்டிருந்தபோது. மடாலயத்தின் நான்காம் குருவாகிய சிவசண்முக பரசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் உடல்நிலை கெட்டது. இதனால் அவர் ஞானியார் அடிகளை அடுத்த குருவாக நியமித்து உயிலில் எழுதிவைத்தார். மேலும் ஞானியார் அடிகளுக்கு சந்நியாச தீட்சையும் செய்து முடித்து, ஆசாரிய அபிஷேகம் செய்வித்து, முறைப்படி உபதேசம் செய்து வைத்தார். இதன்படி நவம்பர் 10, 1889 அன்று மடாதிபதியாக ஞானியார் அடிகள் பதவியேற்றார்.
பணிகள்
ஞானியார் அடிகள் தமிழையும் சைவத்தையும் பரப்புவதற்காகத் தொடர்ந்து பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். விரும்பி வந்தோர்க்கெல்லாம் சமய வேறுபாடில்லாமல் தமிழ் மொழியை போதித்தார். அடிகளின் ஆலோசனையின்படி தான் பாண்டித்துரைத் தேவர்ரும், அவர் சகோதரர் பாஸ்கர சேதுபதியும் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை 1901ல் இல் நிறுவினர்.
சைவ சமயத்தை பரப்பும் நோக்கில் ஜூலை 7, 1907- ல் சைவ சித்தாந்த மகா சமாஜம் என்ற அமைப்பு ஞானியார் அடிகளால் நிறுவப்பட்டது இந்த அமைப்பின் செயலாளராக மறைமலையடிகள் பல ஆண்டுகள் செயல்பட்டார். சாமாஜத்தின் சார்பில் சித்தாந்தம் என்ற இதழும், பல மாநாடுகளும் நடத்தப்பட்டன.
தமிழ்க் கல்விக்கு எனத் தமிழ்க் கல்லூரி எதுவும் இல்லாத காலமாக அக்காலம் இருந்தது. அக்காலத்தில் திருவையாற்றில் சரபோஜி மன்னரால் நிறுவப்பட்ட சமஸ்கிருதக் கல்லூரி இருந்தது. அது பிற்காலத்தில் தஞ்சை மாவட்ட ஆளுகைக் கழகத்தில் (DISTRICT BOARD) மேற்பார்வையில் இயங்கியது. அடிகளார் ஒருசமயம் அக்கல்லூரிக்கு சென்றிருந்தார். அக்கல்லூரியின் தோற்றம் வளர்ச்சி - அதன் பணிகள் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார். வடமொழி மட்டும் கற்பிக்கப்படும் அந்தக் கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அடிகளாருக்கு உருவானது.
திருவையாறு கல்லூரியை இயக்கி வந்த தஞ்சை மாவட்டக் கழகத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த உமாமகேசுவரம் பிள்ளையவர்களை ஞானியார் அடிகள் தம் இருப்பிடத்துக்கு அழைத்து திருவையாறு கல்லூரி அறக்கட்டளை பற்றி ஆராயத் தூண்டினார். மாவட்டக் கழகத்தின் தலைவராக சர். ஏ. டி. பன்னீர் செல்வம் இருந்தார். தஞ்சாவூர் சென்ற உமாமகேசுவரம் பிள்ளை திருவையாறு கல்லூரி உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் வடமொழி செப்பேட்டை எடுத்துக் கொண்டு, சர். ஏ. டி.பன்னீர் செல்வத்தையும் உடன் அழைத்துக் கொண்டு திருப்பாதிரிப்புலியூர் வந்தார். செப்பேட்டைப் படித்துப் பார்த்தபோது அந்த அறக்கட்டளையின் குறிக்கோள்பற்றி "கல்வி வளர்ச்சிக்குப் பணியாற்ற" என்று பொதுவாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே - தமிழையும் அக்கல்லூரியில் கற்பிக்கலாம் என்பதை ஞானியார் அடிகள் முன்னிலையில் இருவரும் தீர்மானித்தார்கள். அதன்படி திருவையாறு கல்லூரியில் தமிழ் வித்துவான் கல்வியும் கற்பிக்க ஏற்பாடு செய்தார்கள்! வடமொழிக் கல்லூரி என்னும் பெயரும் பொதுவான பெயராக அரசர் கல்லூரி என்று மாற்றியமைக்கப்பட்டது.
காங்கிரசை விட்டு விலகி சுயமரியாதை இயக்கம் தொடங்கிய ஈ.வெ.ராமசாமிப் பெரியார் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்காக குடியரசு இதழ் அலுவலகத்தைத் திறந்து வைக்க ஞானியார் அடிகளை அழைத்தார். அங்கு சென்ற ஞானியார் அடிகள் அலுவலகத்தைத் திறந்துவைத்து வாழ்த்துரை வழங்கினார்.
1938- ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி கட்டாயமாக்கப் பட்டபோது, ஞானியார் அடிகள் இந்தியை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்.
சொற்பொழிவுகள்
ஞானியார் அடிகள், தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், பலப்பல ஊர்களுக்கும் சென்று தமிழையும் சைவத்தையும் பரப்புவதற்காகத் தொடர்ந்து பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். வாணிவிலாச சபை என்ற சங்கத்தை அமைத்தார்கள். அடிகள் தாமேசொற்பொழிவுகள் ஆற்றுவதுடன், தம்மிடம் பயில்வோரையும் சொற்பொழிவு நிகழ்த்தச் செய்தார்.
ஞானியார் அடிகளது பேச்சின் சிறப்பு பற்றி திரு.வி.க. கீழ்காணுமாறு பாராட்டியுள்ளார்;
'அறிவு மழை நீர், தேங்கித் தேங்கிப் புரண்டு திரண்டு பன்முகங்கொண்டெழுந்து முட்டி முடுகி, வாயின் வழியே முழங்கி விரைந்து இடையீடில்லாச் சொற்றொடர் அருவியாக இழிந்து, பல திறச் சுவை நுட்பப் பொருள்கள் மிதந்து சுழல, அன்பு வெள்ளப் பெருக்காய்ப் பரவிப் பரந்து, அருள் அலை கொழித்துக் கொழித்து ஓடும். நீர் பருகப் போந்த புலி, கரடி, யானை, மான், பசு முதலியன அருவி முழக்கிலெழும் இன்னொலி கேட்டு அதில் ஈடுபட்டுத்தன்தன் பகைமை மறந்து மயங்கி நிற்கும். கரை நீராடுவோர் வெள்ளத்திலெழும் மின் விசையால் பிணி நீங்கப் பெறுவர். ஞானியார் சுவாமிகள் பேச்சால் விளைந்த நலன் அளப்பரிது’.
தோற்றுவித்த அமைப்புகள்
ஞானியார் அடிகள் தோற்றுவித்த அமைப்புகள்;
- 24.05.1901- மதுரை தமிழ்ச்சங்கம்.
- 1903 - வாணி விலாச சபை புலிசை, ஞானியார் அருளகம்
- 07.07.1905- சைவ சித்தாந்த மகா சமாஜம்
- ஞானியார் மாணவர் கழகம் ,புலிசை, திருக்கோவலூர்
- 20.09.1909- பக்த பால சமாசம் மணம்பூண்டி
- 24.10.1909- கம்பர் கலாமிர்த சங்கம் திருவெண்ணைநல்லூர்.
- 25.04.1910- வாகீச பக்தசனசபை நெல்லிக்குப்பம்
- 1911- கலைமகள் கழகம் புதுச்சேரி
- புதுவை செந்தமிழ் பிரகாச சபை
- ஞானியார் சங்கம், காஞ்சிபுரம்
- சன்மார்க்க சபை கடலூர்
- சோமாசுகந்த பக்தசனசபை வண்டிப்பாளையம்
- சரசுவதி விலாச சபை புலிசை
- சைவசித்தாந்த சபை உத்திரமேரூர்
- சமயாபி விருத்தி சங்கம் , செங்கல்பட்டு
- 1911- பார்க்கவகுல சங்கம் மணம்பூண்டி
- 1912- கோவல் சைவசித்தாந்த சமாசம் திருக்கோவலூர்
- 1915- சக்தி விலாச சபை திருவண்ணாமலை
- 02.02.1917- ஞானியார் பாட சாலை
- 03.01.1919- வாகீச பக்த பத சேகர சபை, வடமட்டம்
நூல்கள்
ஞானியார் அடிகளின் சில சொற்பொழிவுகள் நூல்களாகியுள்ளன. அவை;
- ஞானியார் அடிகள் ஆண்டுதோறும் புலியூரில் கந்தர்சஷ்டி நாளில் ஆற்றிய உரைகளை முத்து. இராசாக்கண்ணனார் 'கந்தர்சஷ்டி சொற்பொழிவுகள்' என்ற பெயரில் நூலாக்கியுள்ளார்.
- ஞானியார் அடிகள், ஈரோடு பெண்கள் கல்லூரியில் 'அன்பு' என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவுகள் குடியரசு இதழில் வெளிவந்தன.
- ஞானியார் அடிகள் கூறிய குறிப்புகளை இணைத்து 'கந்தரனுபூதி' நூலை க.ர. ஆதிலட்சுமி அம்மையார் வெளியிட்டார்.
மறைவு
ஞானியார் அடிகள், ஜனவரி 31, 1942 அன்று தைப்பூச தினதன்று, பழனி முருகன் கோயிலில் வழிபாடு செய்து திரும்பிவரும்போது சமாதியானார்
உசாத்துணை
- தமிழ் வளர்த்த பெருமக்கள், என். ஸ்ரீனிவாசன், அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு
- தவத்திரு ஞானியார் அடிகள், முனைவர் சுந்தர சண்முகனார், மணிவாசகர் பதிப்பகம் தவத்திரு ஞானியார் அடிகள், முனைவர் சுந்தர சண்முகனார், மணிவாசகர் பதிப்பகம்
- தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள், தமிழ் மின் நூலகம்
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.