கு.அருணாசலக் கவுண்டர்

From Tamil Wiki
Revision as of 13:23, 18 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கு.அருணாசலக் கவுண்டர் ( ) கொங்குநாட்டின் வரலாற்றாசிரியர்களில் ஒருவர். நாட்டாரியல் ஆய்வாளர். பதிப்பாசிரியர். == பிறப்பு, கல்வி == கோபியை அடுத்த பங்களாபுதூரில் கு. அருணாசலக் கவுண்ட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கு.அருணாசலக் கவுண்டர் ( ) கொங்குநாட்டின் வரலாற்றாசிரியர்களில் ஒருவர். நாட்டாரியல் ஆய்வாளர். பதிப்பாசிரியர்.

பிறப்பு, கல்வி

கோபியை அடுத்த பங்களாபுதூரில் கு. அருணாசலக் கவுண்டர் பிறந்தார். கு.அருணாசலக் கவுண்டர் உ.வே.சாமிநாதையர் , சுவாமி விபுலானந்தர் ஆகியோரிடம் தமிழ்ப் பயின்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றினார்

பதிப்புப் பணி

கு.அருணாசலக் கவுண்டர் பல நூல்களை பதிப்பித்துள்ளார். அவருடைய கையெழுத்துப் படிகள் யாவும் தற்சமயம் தன்னிடம் உள்ளன என்று ஆய்வாளர் கு.மகுடீஸ்வரன் குறிப்பிடுகிறார். கு.அருணாசலக் கவுண்டர் தன் கையெழுத்துப் பிரதியொன்றில் பதிப்புப் பணியின் நிலை பற்றிக் குறிப்பு இவ்வாறு எழுதியுள்ளார். "வித்வான் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள், நெடுங்காலம் அரிதின் முயன்று சேகரித்த 300க்கு மேற்பட்ட அபூர்வ சுவடிகளின் புதையலிலே கிடைத்த தக்கை ராமாயணச் சுவடியைச் சென்ற ஏழு ஆண்டுகளாகவே பரிசோதித்துப் பெயர்த்தெழுதிப் பதிப்பித்து வருகிறேன். உ.வே.சா. பதிப்புகளுக்குப் பின் சுவடியினின்றும் அச்சாகும் தனிச் சிறப்பு வாய்ந்த பாரகாவியம் இதுதான். இதற்கு முன் அந்தாதி, பிள்ளைத் தமிழ் போன்ற சிற்றிலக்கிய நூல்களே வெளிவந்திருக்கின்றன. ஏடு கிடைத்தாலும் அதைப் படித்துப் பிரதி செய்வார் இல்லை என்பதால், தொல்பொருள் ஆய்வுத்துறை டாக்டர் நாகசாமி அவர்களைக் கொண்டு நாலைந்து ஆண்டுகளுக்கு முன் பேரூர் மடாலயத்தில் ஒரு பயிற்சி முகாம் பத்துநாள் நடத்தினேன். சுவடிகளைப் பதிப்பித்தாலும் அவற்றை அச்சிடுவதற்குப் புத்தக வெளியீட்டார் யாரும் முன் வருவதில்லை. இதனால் நான் அடைந்த சிரமத்தை அலைச்சல் அவதி அவமதிப்புகளைச் செய்யுள் ஒன்றிலே சொல்லியிருக்கிறேன். இலக்கியம் ஒன்றை அச்சிடுவது என்றால் புலவருக்கு வேண்டும் தகுதிகள்.

'தேயாத செருப்பும் ஒரு பையனும் வேண்டும்

சேர்ந்திருக்க இடம் வேண்டும் திரிய என்றால்

ஓயாத கால் வேண்டும், உண்ணும் சோற்றில்

உருகிக் கெட்ட நாவேண்டும், உலுத்தர்தம்மைக்

காயாத மனம் வேண்டும், புல்லருக்கும்

கனிவுடனே புகழ்மாலை சூட்ட வேண்டும்

தாயாகப் புலவருக்கு இத்துணையும் உண்டானால்

தக்கை இனிப் பதிப்பிக்கத் தொடங்கலாமே'."

நூல்கள்

  • அகலிகை வெண்பா (1934)
  • பழைய கோட்டைப் பட்டக்காரர் நாட்டுப் பாடலும் பூர்வ பட்டயமும் (1965)
  • சர்க்கரை மன்றாடியார் காதல் (1966)
  • பூங்காவனப் பிரளயம் (1977)
  • பாம்பண காங்கேயன் குறவஞ்சி (1978)

உசாத்துணை

பேரா மகுடீஸ்வரன் கட்டுரை