under review

ராணி முத்து

From Tamil Wiki
Revision as of 18:31, 27 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected the links to Disambiguation page)
முத்து என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்து (பெயர் பட்டியல்)
அந்தநாள்,ராணிமுத்து-1970
ராணி முத்து

ராணி முத்து (1969) தமிழில் வெளிவந்த மாத இதழ். மாதம் ஒரு நாவலை வெளியிட்டது. மாதநாவல் என பின்னர் அழைக்கப்பட்ட வெளியீட்டுமுறையை தொடங்கிவைத்தது. தினத்தந்தி குழுமம் இந்த இதழை வெளியிடுகிறது.

வெளியீடு

மலிவு விலையில் புத்தகங்களை பரவலாக கொண்டுசேர்க்கவேண்டும் என்னும் நோக்கத்துடன் தினத்தந்தி குழுமத்தின் ராணி வாராந்தரி இதழின் ஆசிரியர்குழுவில் இருந்து ராணி முத்து மாத இதழ் வெளியிடப்பட்டது. இல்லம்தோறும் நூலகம் என்று சி.என்.அண்ணாத்துரை சொன்னதை நனவாக்கும் முயற்சி என அறிவிக்கப்பட்டது. ஜனவரி 1, 1969 முதல் ராணிமுத்து வெளியிடப்பட்டது. ஒரு ரூபாய்க்கு ஒரு நாவல் என அறிவிக்கப்பட்டது. முதல் இதழாக அகிலன் எழுதிய பொன்மலர் வெளியாகியது

விற்பனை

பொன்மலர் நாவல் ஐம்பதாயிரம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது என ராணி முத்து இதழ் 1977-ல் தன் வெற்றியை அறிவிக்கையில் குறிப்பிட்டது. கல்கி, மு. வரதராசன் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளும் புதுமைப்பித்தன், ஆர். சண்முகசுந்தரம், நீல பத்மநாபன் போன்ற இலக்கியப்படைப்பாளர்களின் நாவல்களும், க.பஞ்சாபகேசன், எம்.ஆர்.ராஜம்மா போன்ற அறியப்படாத எழுத்தாளர்களின் நாவல்களும் ராணிமுத்துவில் வெளிவந்தன. நூறாவது நாவலாக சாண்டில்யன் எழுதிய நாகதீபம் வெளிவந்தது. தொடக்க காலத்தில் ஏற்கனவே வெளிவந்த நாவல்கள் பக்க அளவுக்கேற்ப சுருக்கப்பட்டு வெளியிடப்பட்டன. பின்னர் வெவ்வேறு மாத நாவல் வெளியீடுகளுடன் போட்டியிடும்பொருட்டு புதிய மர்மநாவல்கள் மட்டும் வெளியிடப்பட்டன.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:18 IST