second review completed

பேராலவாயர்

From Tamil Wiki
Revision as of 08:46, 17 September 2024 by Jayashree (talk | contribs)

பேராலவாயர் (மதுரை பேராலவாயார்) சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஆறு பாடல்கள் சங்கத்தொகை நூல்களான அகநானூறு, நற்றிணை, புறநானூறு ஆகியவற்றில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

பேராலவாயர் சங்ககாலப் புலவர். மதுரையைச் சேர்ந்தவர். மதுரையில் கோயில் கொண்ட இறைவனை ஆலவாயர் என்றும் அழைப்பர். மதுரை சொக்கநாதரின் மீது கொண்ட பற்றால் இவரின் பெற்றோர்கள் இப்பெயரை இட்டனர்.

இலக்கிய வாழ்க்கை

பேராலவாயர் பாடிய ஆறு பாடல்கள் அகநானூறு (87, 296), நற்றிணை(51, 361), புறநானூறு (247, 262) ஆகிய நூல்களில் உள்ளன.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

அகநானூறு
  • அகநானூறு 87 - பாலைத் திணைப் பாடல். சிற்றூர்க் குரம்பை-வீட்டில் இரவில் தங்கி சேவல் கூவும் விடியலில் புறப்பட்டு மறவர் தண்ணுமை முழக்கும் பாலைநிலம் வழியே இல்லம் திரும்பும் தலைவனை நினைத்து தலைவி வருந்தும் சித்திரம் உள்ளது. விளக்குச் சுடருடன் விளங்கும் வானளாவிய மாடங்கள் இருக்கும் அகன்ற நகரைப் பற்றிய குறிப்பு உள்ளது.
  • அகநானூறு 296 - மருதத் திணைப் பாடல். காம்பு சிறியதாக இருக்கும், கொத்தாகப் பூக்கும் காஞ்சி மலர் சூடிய கூந்தல் கொண்ட தலைவியைப் பற்றிய குறிப்பு உள்ளது. மீன் பிடிக்கும் வலையில் முத்துச் சிப்பிகளும் வரும். இந்த முத்துக்களை நறவுக் கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும் கொற்கை மக்களின் அரசன் செழியன். அவன் கூடல் நகரில் நீண்ட காலம் தங்கி நாடாள்வது ஊருக்கெல்லாம் தெரியும். அதுபோல மற்றொருத்தியோடு நீ கொண்ட உறவு ஊருக்கெல்லாம் தெரியும் என தலைவியை சந்திக்க வாயில் வேண்டிச் சென்ற தலைமகனுக்கு வாயில் மறுக்கும் தோழி சொல்லியதாக பாடல் உள்ளது.
நற்றிணை
  • நற்றிணை 51 - குறிஞ்சித் திணைப் பாடல் தலைவன் கேட்கும்படி மின்னலை நிமிர்த்தி வைத்தது போல குறிஞ்சி நிலப் பூசாரி வேலன் தன் தலைமுடியை வெறியாக ஆட்டி வைத்தல் பற்றியும், தலைவன் தன் மனத்தை ஆட்டிப் படைப்பதையும் தோழிக்குத் தலைவி கூறுகிறாள். ”மலையில் மூங்கில் எதிரொலிக்கும்படியும், பாம்பு துன்புறும்படியும் மின்னி இடித்துப் பெருமழை பொழிகிறது. கொல்லும் வலிமை படைத்த ஆண்யானை குளவிப்பூவைத் தன் பரந்த அடிகளால் மிதித்துக்கொண்டும், சேற்றை அள்ளி நெற்றியில் வீசிக்கொண்டும், ஒன்றுமறியாத பேதை ஆசினி மரத்தை ஒடிக்கிறது. அதன்மீது வேங்கைப் பூக்கள் கொட்டுகின்றன” என குறிஞ்சி நிலத்தைப் பற்றிய செய்திகள் பாடலில் உள்ளன.
  • நற்றிணை 361 - முல்லைத் திணை - தோழி கூற்றாக உள்ளது. சிறிய மலரையுடைய முல்லையினது மணம் வீசுகின்ற மலரை தலைவனும், உடன்வந்த இளைஞரும் சூடினர். மழை பொழிந்த குளிர்ந்த காட்டின் வழி கலழணிந்த குதிரைகளின் மணியோசையுடன் தேரை அகன்ற மாளிகை முன் நிறுத்த, தலைவி விருந்தளிக்கும் காட்சி சொல்லப்பட்டுள்ளது.
புறநானூறு
  • புறநானூறு 247: பெருங்கோப்பெண்டு தன் கணவனுடைய ஈமத்தீயில் வீழ்ந்து உயிர் துறந்ததைப் பேராலவாயர் கண்டதாக இப்பாடலில் குறிப்புள்ளது. யானை காய்ந்த விறகினைக் கொண்டுவந்து தந்தது. அந்த விறகில் கானவர் மூட்டிய தீப்பந்தம் விளக்காக எரிந்தது. பெருங்கோப்பெண்டின் இளம் மனைவி வெளியே வந்தபோது மந்திக் குரங்கு அவள் கோலத்தைப் பார்த்துக் குரல் கொடுத்தது. அவள் தலையிலிருந்து ஈமச்சடங்கிற்கு ஊற்றப்பட்ட நீர் வடிந்து கொண்டிருந்தது” என அக்காட்சி பாடலில் சித்தரிக்கப்பட்டது.
  • புறநானூறு 262: வெட்சித் திணை போருக்குப்பின்னான உண்டாட்டு பற்றிய செய்திகள் இப்பாடலில் உள்ளன. வீரர்கள் ஆனிரைகளைக் கவர்ந்து ஓட்டிக்கொண்டு வருகையில் மீட்க வரும் எதிரிகளை எதிர்கொள்ள தலைவன் பின்னால் வருவான். உண்டாட்டின் போது நறவும் (கள்ளும்), ஆட்டுக்கிடாய்க் கறி சமையலும் உணவாக சமைப்பர். பச்சை இலைகளைப் பரப்பி பந்தல் போடுவர். ஈர இளமணலைப் பந்தலில் பரப்பி ஆற்று ஊற்றுநீரை அதில் கொணர்ந்து ஊற்றுவர்.

பாடல் நடை

  • அகநானூறு 87

(திணை – பாலை) (வினை முற்றி மீளும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது)

தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்,
கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை,
நல்கூர் சீறூர் எல்லித் தங்கி,
குடுமி நெற்றி நெடுமரச் சேவல்
தலைக் குரல் விடியற் போகி, முனாஅது,
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி,
அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென,

குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம்,
நனி நீடு உழந்தனை மன்னே! அதனால்
உவ இனி வாழிய, நெஞ்சே! மை அற

வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச்
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி,
தாழ் இருங் கூந்தல் நம் காதலி
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே.

  • அகநானூறு 296

(திணை: மருதம்)

கோதை இணர, குறுங் கால், காஞ்சிப்
போது அவிழ் நறுந் தாது அணிந்த கூந்தல்,
அரி மதர் மழைக் கண், மாஅயோளொடு
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி, இன்றும்
பெரு நீர் வையை அவளொடு ஆடி,
புலரா மார்பினை வந்து நின்று, எம்வயின்
கரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில்

பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி
நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும்
பேர் இசைக் கொற்கைப் பொருநன், வென் வேல்
கடும் பகட்டு யானை நெடுந் தேர் செழியன்,
மலை புரை நெடு நகர்க் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போல,
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே.

  • நற்றிணை 51

(திணை: குறிஞ்சி)

யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஓங்கு கழைக்
காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்
பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென,
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே;
பெருந் தண் குளவி குழைத்த பா அடி,
இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு
பேதை ஆசினி ஒசித்த
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே?

  • நற்றிணை 361

(திணை: முல்லை)

சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி
தானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்;
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா,
படு மழை பொழிந்த தண் நறும் புறவில்,
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப,
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த்
தந்தன நெடுந்தகை தேரே; என்றும்
அரும் படர் அகல நீக்கி,
விருந்து அயர் விருப்பினள், திருந்து இழையோளே.

  • புறநானூறு 247

(திணை: பொதுவியல்) (துறை: ஆனந்தப்பையுள்)

யானை தந்த முளிமர விறகின்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்
நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்
பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
தெருமரும் அம்ம தானேதன் கொழுநன்
முழவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமியள் ஆயினும்
இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே.

  • புறநானூறு 247

(திணை: வெட்சி) (துறை: உண்டாட்டு)

நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்;
பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்
புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்;
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்று
நிரையோடு வரூஉம் என்னைக்கு
உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.