திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயம்
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் திருவிதாங்கோடு ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் பிரதிபாணி லிங்க வடிவில் உள்ளார். ஆலய வளாகத்தில் சிவன் மற்றும் விஷ்ணு கோவில்கள் உள்ளன. சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரு சிவாலயங்களில் பத்தாவது ஆலயம்.
இடம்
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் திருவிதாங்கோடு நகரப் பஞாயத்தின் கீழ் உள்ள ஊர் திருவிதாங்கோடு. நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் தக்கலையிலிருந்து பிரிந்து கருங்கல் செல்லும் சாலையில் உள்ளது திருவிதாங்கோடு. பிரதான சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் கிழக்கு நோக்கி மகாதேவர் ஆலயம் உள்ளது.
திருவிதாங்கோடு பழமையான ஊர். ஆய் அரசர் காலத்தில் தலைநகருக்குரிய அந்தஸ்தைப் பெற்றிருந்தது. பண்டைய வேணாட்டின் தலைநகராக இருந்தது. ஸ்ரீவாழும்கோடு(திருமகழ் தங்கும் இடம்) திருவிதாங்கோடு என்று மருவியதாக கூறப்படுகிறது.
மூலவர்
கோவில் மூலவர் பிரதிபாணி, மகாதேவர் என்று பரவலாக அறியப்படுகிறார். திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயத்தில் சிவன் மற்றும் விஷ்ணு இருவருக்கும் கோவில்கள் உள்ளன. சிவன்கோவில் மூலவர் சிவன் லிங்க வடிவிலும் விஷ்ணு கோவில் மூலவர் விஷ்ணு சங்கு சக்கரங்களுடன் உள்ளார்.
கோவில் அமைப்பு
முன்மண்டபம்: கோவிலின் முன்வாசலில் எட்டு தூண்களை கொண்ட முன் மண்டபம் உள்ளது. தூண்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் இருபுறமும் திண்ணைகளும் நடுவில் வழிப்பாதையும் உள்ளது.
ஒன்றரை ஏக்கர் பரப்புடைய ஆலய வளாகத்தில் தெற்கே சிவன் கோவிலும் வடக்கே விஷ்ணு கோவிலும் உள்ளன.
சிவன் கோவில்
மகாதேவர் கோவில் கிழக்கு நோக்கி உள்ளது, கிழக்கு வாசல் எதிரே செம்புத் தகடு வேயப்பட்ட கொடிமரம் உள்ளது.
முகமண்டபம்(நந்தி மண்டபம்): சிவன் கோவிலில் பக்கத்துக்கு ஐந்து என பத்து தூண்களுடன் முகமண்டபம் உள்ளது. நடுவில் பாதையுடன் இருபக்க திண்ணைகளுடன் உள்ளது. இம்மண்டபத்தில் நந்தி உள்ளதால் நந்தி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. மண்டபத்தில் பலிபீடமும் வாடா விளக்கும் உள்ளன. முகமண்டபத்தில் சிவ அடையாளத்துடன் கூடிய துவாரபாலகர்கள் சிற்பங்களுடன் பிற சிற்பங்களும் உள்ளன.
நந்தி மண்டபம் எனப்படும் முகமண்டபத்தின் கட்டுமானம் பற்றி கல்வெட்டு செய்திகள் இல்லை எனினும் கட்டுமான அமைப்பை கொண்டு இது வேணாட்டரசன் காலத்தின் இறுதியில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது முனைவர் அ.கா. பெருமாள் அவர்களது ஊகம்.
கல்மண்டபம்:முகமண்டபத்தை அடுத்து 16 தூண்களை உடைய கல்மண்டபம் தெற்கு வடக்காக உள்ளது. மண்டபத்தின் நடுவே தரைமட்டத்திலிருந்து உயர்ந்து இருக்கும் கருவறைக்குரிய வழிப்பாதை உள்ளது.
கருவறை: மூலவர் இருக்கும் கருவறை வேசர விமானத்தைக் கொண்டது. கருவறையின் முன் சோபனப் படியும் சுற்றிலும் திருச்சுற்று மண்டபமும் உள்ளது. உள்பிராகாரம் சுற்றி வர வசதியாக தரைமட்டத்தில் அமைந்துள்ளது. கருவறையின் பழமை கி.பி. 9 ஆம் தூற்றாண்டு வரை கொண்டு செல்ல கோவில் கல்வெட்டும் கட்டுமான அம்மைப்பும் உதவுகின்றன.
திருச்சுற்று மண்டபம்: தரைமட்டத்திலிருந்து இரண்டடி உயரத்தில் 33 தூண்களுடன் உள்ளது. தூண்கள் சிற்பங்கள் இன்றி காணப்படுகின்றன. திருச்சுற்று மண்டபத்திற்கும் கருவறை கூரைக்கும் இடையே காற்று வருவதற்கு பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட இடைவெளி உள்ளது. திருச்சுற்று மண்டபம் கி.பி. 16-17 ஆம் நூற்றாண்டை சார்ந்தது என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது.
விஷ்ணு கோவில்
மகாதேவர் கோவிலை அடுத்து வடக்கு பகுதியில் விஷ்ணு கோவில் உள்ளது. கோவிலின் முன்புறம் கொடிமரமும் பலிபீடமும் உள்ளன. கோவிலின் முன்பகுதியில் கருடன் அனுமன் சிற்பங்களுடன் கூடிய முன்மண்டபமும் அதனை அடுத்து 12 தூண்கள் கொண்ட அரங்கும் உள்ளன. அரங்கின் வடக்கிலும் தெற்கிலும் வெளியே செல்ல வாசல்கள் உண்டு. அரங்கின் நடுவே வழிபாதை உண்டு.
பிற்காலத்தில் கட்டப்பட்ட தரைமட்டத்திலிருந்து 4 அடி உயரமுடைய நான்கு கால் மண்டபம் உள்ளது. அடுத்து கருவறை உள்ளது. கருவறையில் விஷ்ணு சிற்பம் சங்கு சக்கரத்துடன் உள்ளது. கருவறை விமானம் வேசர வகையை சார்ந்தது. சுதையால் ஆன வட்டவடிவ மண்டபத்தில் மரபுவழி உருவங்கள் அமைந்துள்ளன.
சிவன் கோவில் விஷ்ணு கோவில் இரண்டு தனி கோயில்க்ளையும் பிற்காலத்தில் கட்டப்பட்ட சுவர் இணைத்து ஒரே கோவில் போல் தோன்ற செய்கிறது. சிவன் மற்றும் விஷ்ணு கோவில்கள் எதிரில் செம்பு பொதியப்பட்ட கொடிமரங்கள் உள்ளன.
சிற்பங்கள்
முகமண்டப சிற்பங்கள்: சிவன் கோவில் முகமண்டபத்தின் முகப்பிலுள்ள நான்கு தூண்களில் நடுபக்கம் உள்ள இரு தூண்களில் சிவ அடையாளத்துடன் துவாரபாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. தெற்கு முகப்பு தூணில் அர்ஜுணன் சிற்பமும், வடக்கு முகப்பு தூணில் கர்ணனின் சிற்பமும் உள்ளன. அர்ஜுணன் மற்றும் கர்ணன் சிற்பங்கள் திருவட்டாறு ஆலயம், சுசீந்திரம் ஆலயம் மற்றும் கல்குளம் ஆலயம் அக்கியவற்றில் காணப்படும் அர்ஜுணன் கர்ணன் சிற்பங்கள் போன்றவை.
முகமண்டபத்தில் காணப்படும் பிற சிற்பங்கள்,
- மன்மதன்(கைகளில் கரும்பு, வில், தாமரை உள்ளன)
- கோவர்த்தன கிரியை தாங்கிய கண்ணன்(கண்ணனின் இடுப்பில் அரைச்சதங்கை; அருகில் கழுத்துமணிகளுடன் பசுக்கூட்டம்)
- கண்ணன் வஸ்த்ராபரணக் காட்சி(மரத்தின் உச்சியில் தவழ்ந்தபடி கண்ணன், மரத்தின் இரு பக்கங்களிலும் வஸ்த்திரமில்லாத பெண்கள்)
- கணேசினி சிற்பம்(நின்ற கோலம்; துதிக்கை, கிரீடாமகுடம்; மார்புகள்; புலிக்கால்கள்)
- கலவி சிற்பம்(பெண் மார்பில் ஆண் வாய் வைத்தபடி)
- வெண்ணை திருடும் கண்ணன்(உறியிலிருந்து)
- யசோதை(கையில் மத்துடன் கண்ணனை அடிக்க ஆயத்தமானபடி)
- கார்த்திகேயன்(மயில் மேல் அமர்ந்தபடி; கைகளில் வேலும் சக்தி ஆயுதமும்)
- அனுமன்
- ராமன்
- முனிவர்(ஆடையில்லாமல்)
- நடனமாடும் பெண்
- அகோர வீரபத்திரர்
- தவழும் கண்ணன்
- குறவன்(கொம்பை கையிலேந்தியபடி)
- குறவன்(இளவரசையை கவந்து செல்லும்படி)
- குரங்கு(பறவையை விழுக்கியபடி)
- யாளிகள்
கருவறைச் சிற்பங்கள்: சிவன் கோவில் கருவறையின் வடக்கு சுவரில் நரசிங்கன் இரணியனைக் கொல்லும் காட்சி சிற்பம் உள்ளது. பத்துகைகளுடன் நரசிம்மர் இருக்க மடியில் இரணியன் கிடக்கிறான். அருகே பிரகலாதன் சிற்பம் உள்ளது. நடராஜர், மத்தளம் அடிப்பவர், கங்காளநாதர் ஆகிய புடைப்பு சிற்பங்கள் மேல் காரை புசப்பட்டு பொலிவிழந்து காணப்படுகிறது.
விஷ்ணு கோவில் முகமண்டபத்தில் ஆளுயரம் கொண்ட கருடன் மற்றும் அனுமன் சிற்பங்கள் உள்ளன.
வெளிப்பிராகார திருச்சுற்று மண்டபத்தில் அமைந்துள்ள 61 தூண்களிலும் விளக்கேந்திய பாவை சிற்பங்கள் உள்ளன. பாவைச் சிற்பங்கள் கிழக்கு பிராகாரத்தில் 17, வடக்கு பிராகாரத்தில் 13, மேற்கு பிராகாரத்தில் 20, தெற்கு பிராகாரத்தில் 14 என அமைந்துள்ளது. இவை தீபலட்சுமிகள் என வழங்கபடுகின்றன.
தீபலட்சுமி சிற்பங்கள்: கிழக்கு பிராகாரத்தின் ஆரம்பத்தில் பெரிய மார்புகளுடன் துலிபங்க நிலையில் நிற்கும் பெண் சிற்பம் கையில் அகல் விளக்கு அல்லாமல் பிடி உடைய விளக்குடன் காணப்படுகிறது. குமரி மாவட்ட கோவில்களில் இதை போன்ற சிற்பம் வேறு இல்லை. பிற தூண்களில் கணப்படும் பாவை சிற்பங்களின் கைகளிலும் கைபிடி உடைய விளக்குகள் உள்ளன.
விளக்கு பாவைச் சிற்பங்கள் பெரும்பாலானவை பெரிய மார்புகள் உடையவையாக கட்டப்பட்டுள்ளன. பாவைச் சிற்பங்களின் ஒடுங்கிய இடையும் முக அமைப்பும் கொண்டை அலங்காரமும் மாரிபின் வடிவ அளவும் வயதை தரம் பிரித்து காட்டுகின்றன.
நிர்வாணப் பாவை: கிழக்குப் பிராகத்தில் விஷ்ணு கோவிலை ஒட்டிய தூணில் திரிபங்க நிலையில் உள்ள தீபலட்சுமி சிற்பம் உள்ளது. இடையிலுள்ள ஆடை அவிழ்ந்து கணுக்காலில் விழுந்து கிடக்கிறது. இடது கை ஆடையின் நுனியை பிடித்திருக்க வலது கையில் விளக்கு உள்ளது. விளக்கு விர்ந்த தாமரை மலர் போன்ற வேலைபாடு உடையது. சிற்பத்தின் ஒடுங்கிய இடையும் வயிற்றின் மடிப்பும் துட்பமாக காட்டப்பட்டுள்ளன. கழுத்தில் தொங்கும் மணிமாலை மார்புகளுக்கு இடையே நெருங்கி கிடக்கிறது. காதில் முத்துச்சரம் தொங்கியபடி கிடக்கிறது. சிற்பத்தின் கொண்டையை சுற்றில் முத்துக்கள் தொங்கும்படியான வேலைபாடு உடையது. கைகளில் வளையல், தோளில் வங்கி என ஆபரணங்கள் அணிந்துள்ளது. சிற்பம் நிர்வாணமாக இருந்தாலும் ஆபாசமாக இல்லை.
நிர்வாணப்பாவை சிற்பம் இருக்கும் தூணின் பின்புறம் ஒருவர் பின் ஒருவராய் நிற்கும்படி மூன்று ஆடையற்ற ஆண் சிற்பங்கள் உள்ளன. ஒரு ஆணின் சிற்பம் நிர்வாணப் பாவையை விழுந்து வணக்குவது போல உள்ளது.
நடனமாடும்ப் பாவை: கிழக்கு பிராகாரத்தில் ஓரத்து தூண் ஒன்றில் கால்களை அகல விரித்து துவிபங்கமாய் நடனமாடும் பாவைச் சிற்பம் உள்ளது. இடது கை விளக்கு ஏந்தியபடி உள்ளது. இவளது காலின் கீழ் அஞ்சலி ஹஸ்தமாய் ஒருவன் அமர்ந்திருக்க அவனது தலையில் மேல் இவளது வலது கை உள்ளது. பத்ரகுண்டலம், முத்துச்சரம் ஆகிய அணிகலன்களுடன் இருக்கிறாள்.
ஆலிங்கன நிலைப் பாவை: ஒரு கிரீடா மகுடத்துடன் கூடிய ஆண் தனது இடுப்பில் இருக்கும் பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள சிற்பம் உள்ளது. ஆணின் வலதுகை பாவையின் முகத்தை அன்போடு வருடுவது போல் தொட்டபடி உள்ளது. இவளது இடது கையில் விளக்கு உள்ளது. பவையின் இடையின் கீழ் ஆடை உள்ளது.
கிழக்கு பிராகார கடைசியிலிருக்கும் தூணில் உள்ள யாளியின் துதிக்கையின் கீழ் குனிந்தபடி வலதுகையில் அகல்விளக்குடன் அமர்ந்திருக்கும் பெண் சிற்பம் உள்ளதி.
வடக்கு பிராகாரப் சிற்பங்கள்: கோவிலின் வடக்கு பிராகாரத்திலும் கையில் விளக்குடன் துவிபங்கம், திருபங்கமாய் அமைந்த பெண் சிற்பங்கள் பெரிய மார்புகளுடனும் ஆடையை நழுவவிட்டபடியும் ஆபரணங்களுடன் உள்ளன. வடக்கு பிராகாரத்தில் முப்புரி நூல் அணிந்த ஆண் கழுத்தில் நீண்ட மாலையுடன் ஒரு பெண்ணை அணைத்தபடி நிற்கும் சிற்பம் உள்ளது. துவிபங்க நிலையில் பருத்த வயிற்றுடன் கர்பிணிப் பெண் விளக்கேந்தியபடி நிற்கும் சிற்பம் உள்ளது.
மேற்கு பிராகாரப் சிற்பங்கள்: ஆடையை நழுவவிட்டப் பெண், வயிறு பருத்த கர்ப்பிணி, தொங்கிய மார்புடன் நெகிழ்ந்த ஆடையுடைய பெண், குழந்தை ஏந்திய பெண், தொங்கிய மார்பும் கிழிந்த கன்னங்களுமாக வயதான பெண் போன்ற பல வகை சிற்பங்கள் உள்ளன. மேற்கு பிராகாரத்தில் வலது கையில் விளக்கும் இடது கையில் வெஞ்சாமரையுமாக இருக்கும் சிற்பம் உள்ளது.
பாண்டி நாட்டு சிற்பியின் தலைமையில் சிற்பங்கள் வடிக்கப்பட்டன என்பதும் இவன் திருவிதங்கோடு ஊரிலேயே தங்கி மலையாள பெண்ணை மணந்து அவளது வேண்டுகோள்ப்படி இச்சிற்பங்கள் செதுக்கப்ப்ட்டன எனபதும் வாய்மொழி செய்திகளாக உள்ளன.
பூஜைகளும் விழாக்களும்
தினசரி பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் மற்றும் விழாக்கள் நடக்கிறது. சிவன் மற்றும் விஷ்ணு கோவில்களில் மார்களி மாதத்தில் ஒரே நாளில் திருவிழா ஆரம்பமாகி பத்து நாட்கள் நடக்கிறது.
வரலாறு
சிவாலய ஓட்டம் நிகளும் ஆலயங்களில் மிக பழமையானது திருவிதாங்கோடு ஆலயம். கி.பி.866 ஆம் ஆண்டு ஆய் அரசன் கோக்கருநந்தடக்கன் காலத்திய நிபந்த கல்வெட்டு ஒன்று கோவில் சுவரில் உள்ளது. கோக்கருநந்தடக்கன் கால கல்வெட்டு இறைவனை மகாதேவர் என்று குறிப்பிடுகிறது. இக்கோவிலில் உள்ள பிற கல்வெட்டுகளிலிருந்து ஈசான சிவன், ஆலமரப் பொந்தில் இருந்த ஈஸ்வரன் என்ற பெயர்கள் இருந்தது தெரிகிறது. பரிதிப்பாணி என்று மூலவரை அழைக்கும் வழக்கம் பிற்கால நம்பூதிர்கள் செல்வாக்கால் ஏற்பட்டிருக்க்லாம் என்று முனைவர் அ.கா. பெருமாள் கூறுகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாப்படும் கல்வெட்டுகளில் பரவலாக திருவிதாங்கூர் என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது. அருவிக்கரை கிருஷ்ணன் கோவிலுக்கு திருவிதாங்கோடு ஊரை சார்ந்த பாலக்கோட்டு நாராயணன் நிபந்தம் அளித்த செய்தி அருவிக்கரை கல்வெட்டில் உள்ளது. இரணியல் மற்றும் திருவட்டாறு கல்வெட்ட்களில் திருவிதாங்கோடு குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 1803 ஆம் ஆண்டு உதயகிரி கோட்டை கல்வெட்டு திருவிதாங்கூர் ராஜ்யம் என்னும் அடைமொழியுடன் குறிப்பிடுகிறது.
கல்வெட்டுகள்
- கி.பி. 866 ஆம் ஆண்டு தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு(T.A.S. Vol. VI p. 142) மகாதேவர் கோவிலுக்கும் விஷ்ணு கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைத்துள்ளது. ஒமாய நாட்டு தலைவன் சிங்கன் குன்ற போழன் மகாதேவர் கோவில் சபையாரிடம் ஆறு கலம் நெல் கொடுத்து அதிலிருந்து வரம் வட்டியில் இரண்டு வேளை பூஜை செய்ய செய்த நிபந்த கல்வெட்டு. மொழி நடையும் இறுதியில் காணப்படும் அடையாளம் மூலம் கோக்கருநந்தடக்கன் கல்வெட்டு என அறியலாம்.
- கி.பி. 10 ஆம் நூற்றண்டு தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு(T.A.S. Vol. VI p. 79) கோவில் மேற்கு பக்க படியில் உள்ளது. நிலம் நிபந்தமாக அளிக்கப்பட்ட செய்தி உள்ளது.
- கி.பி. 11 ஆம் நூற்றண்டு தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு(T.A.S. Vol. VI p. 139) மகாதேவர் கோவில் உள்பகுதியில் தென்மேற்கு பாறையில் உள்ளது. பிற்காலச் சோழ அரசன் ஜடாவர்மன் காலத்திய கல்வெட்டு. திருநந்தா விளக்கு எடுக்க 20 களஞ்சு பொன் கொடையாக அளிக்கப்பட்டு தினமும் உழக்கு நெய் ஊற்ற கட்டளை இடப்பட்ட செய்தி உள்ளது.
- கி.பி. 12 ஆம் நூற்றண்டு தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு(T.A.S. Vol. VI p. 80) உள்ளது. ஒரு நந்தா விளக்கு எரிக்கும் நெய் எடுக்க ஐந்து எருமைகளை சபையாரிடம் நிபந்தம் அளித்த செய்தி உள்ளது. இக்கல்வெட்டு மூலம் தனிச்சபை இருந்தது தெரிகிறது.
- கி.பி. 1611 ஆம் ஆண்டு தமிழ் நிபந்தக் கல்வெட்டு துவாரபாலகர் இருக்கும் மண்டபத்தின் கிழக்கு பக்க திண்ணையில் உள்ளது.
- கி.பி. 1639 ஆம் ஆண்டு மலையாள லிபியில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு(T.A.S. Vol. VI p. 78) மகாதேவர் கோவில் வடக்கு மண்டப சுவரில் உள்ளது. வேணாட்டை ஆண்ட் ரவிவர்மன்(1626-1648) கோவில் மட்ராமத்து பணி செய்த செய்தி உள்ளது.
உசாத்துணை
- புகைப்படங்கள் உதவி நன்றி https://shivantemple.blogspot.com/2019/07/10.html
- சிவாலய ஓட்டம், முனைவர் அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2021.
- தென்குமரி கோவில்கள், முனைவர் அ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு 2018.
- https://490kdbtemples.org/about/kumari-shivalayam-ottam/
- https://shaivam.org/hindu-hub/temples/place/612/thiruvidhankodu-parithipani
- https://490kdbtemples.org/about/170th-kdb-169-arulmigu-thiruvithamcode-mahadevar-thirukkovil-thiruvithamcode-kalkulam-taluk-major-temple/
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.