சுந்தரபுத்தன்
சுந்தரபுத்தன் (பிறப்பு: ஜூன் 16 ,1972 )ஊடகவியலாளர், எழுத்தாளர். தன்னனுபவங்கள் கொண்ட கதைகளும் ரசனைக் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஓவியக்கலை சார்ந்த அழகியல் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஓவியர்களுடனான உரையாடல்களைத் தொகுத்துள்ளார்.
பிறப்பு, கல்வி
சுந்தரபுத்தன், திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் நகருக்கு அருகே உள்ள கண்கொடுத்தவனிதம் என்னும் கிராமத்தில் ஜூன் 16 ,1972 அன்று சு. நடராசன் - தமிழரசி இணையருக்கு மகனாய்ப் பிறந்தார். சுந்தரபுத்தனின் தந்தை நடராசன் சு.ஒளிச்செங்கோ என்கிற பெயரால் பரவலாக அறியப்படுபவர். திராவிடக் கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர். பெரியார், சி. பா. ஆதித்தனார் ஆகியோருடன் நேரடி அறிமுகம் கொண்டிருந்தவர்.
சுந்தரபுத்தன் கண்கொடுத்தவனிதம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையிலும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை ஊரிலுள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியிலும், பன்னிரெண்டாம் வகுப்பு வரை கொரடாச்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றார். பின்னர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் தனது முதுகலைப் பட்டம் பெற்றார்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் மக்கள்தொடர்பியலில்(Mass communication) பட்டயப் படிப்பும் மதுரை காமராசர் பல்கலையில் தொலைநிலைக் கல்வியில் முதுகலை இதழியலும் பயின்றார்.
தனிவாழ்க்கை
சுந்தரபுத்தனுக்கு ஜூன் 2, 2002-ல் சாந்தியுடன் திருமணமானது. ஒரே மகள் சங்கமி.
சுந்தரபுத்தன் தனது கல்வியை முடித்தபின் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியவர். தற்போது சென்னையில் OH DIGITAL MEDIA LLP நிறுவனத்தில் நிர்வாக ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறார்
இலக்கிய வாழ்க்கை
சுந்தரபுத்தனின் முதல் படைப்பு ’கற்பனைக் கடிதங்கள்’ 1997-ம் ஆண்டு வெளியானது. தொடர்ச்சியாக, ‘தமிழ் அரசி’ பத்திரிக்கையில் வெளியாகி அதே ஆண்டு புத்தக வடிவமும் பெற்றது. அதைத் தொடர்ந்து, தன்னுடைய சொந்த கிராமத்து மனிதர்கள் சார்ந்தும், மறந்து போன கிராமத்து அடையாளங்கள் சார்ந்தும் இரு புத்தகங்கள் எழுதினார். ’அக்கா குருவி கதை’ என்கிற தலைப்பில் சிறுவர்களுக்காக கதைகள் எழுதியுள்ளார். இவரது ரசனைக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மூன்று தொகுப்புகளாக வெளியாகியுள்ளன.
’பெருந்தலைவர்’ என்கிற தலைப்பில் காமராஜர் குறித்து எழுதிய தொகுப்பு நூலும், ’கடவுள் மறுப்பின் தொடக்கப் புள்ளி’ என்கிற தலைப்பில் பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் பற்றிய தொகுப்பு நூலும் வெளியாகியுள்ளன.
கவிதைகள் குறித்தும் ,கவிஞர்கள் மற்றும் இலக்கிய விமர்சகர்களுடனான இவரது உரையாடல்களும் தொகுக்கப் பட்டுள்ளன. ரஷ்ய இலக்கியத்தினையும், அதன் படைப்பாளிகளையும் தன்னுடைய எழுத்துக்கான அடிப்படைக் காரணிகளாக சுந்தரபுத்தன் குறிப்பிடுகிறார். ஜெயகாந்தன், தஞ்சை ப்ரகாஷ், கி. ராஜ நாராயணன், பிரபஞ்சன் போன்ற எழுத்தாளர்கள் எழுதுவதற்கான ஊக்கத்தைத் தந்ததாகக் குறிப்பிடுகிறார்
கலை அழகியல்
சுந்தரபுத்தனுக்கு தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக வாசிப்பின் வழியாகவும், சென்னையில் கலை விமர்சகர் இந்திரனுடன் ஏற்பட்ட நட்பின் விளைவாகவும் நவீன ஒவியங்கள் குறித்து ஆர்வம் உருவானது. அதன் தொடர்ச்சியாக இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஓவியக் கண்காட்சியில் பார்வையாளராகப் பங்கு பெற்றும் ஓவியர்களுடன் உரையாடியும், அவர்களின் வர்ணக்கலவை மற்றும் அழகியல் குறித்து எழுதிய கட்டுரைகள் 52 வாரங்கள் தொடராக 'புதிய பார்வை' இதழில் வெளியாகி, பின்னர் புத்தக வடிவம் பெற்றன.
சுந்தரபுத்தன் சிற்பக்கலைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். ஸ்தபதிகளுடனான உரையாடல்களைத் தொகுத்துள்ளார். கவிதைகள் குறித்தும் ,கவிஞர்கள் மற்றும் இலக்கிய விமர்சகர்களுடனான இவரது உரையாடல்களும் தொகுக்கப் பட்டுள்ளன.
விருதுகள்
சுந்தரபுத்தன் ‘இலக்கிய வீதி இனியவன்’ வழங்கும் சிறந்த எழுத்தாளருக்கான அன்னம் விருதினை 2015 ம் ஆண்டு பெற்றார்
இலக்கிய இடம்
பழைய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாய நிலம் மற்றும் மக்கள் சார்ந்தும் மேலும் அந்த நிலத்தில் வீச்சுடன் எழுந்து வந்த திராவிட இயக்கம் சார்ந்தும் சுந்தரபுத்தன் எழுதிய நினைவேக்கம் கொண்ட ரசனைக் கட்டுரைகள் அவற்றின் அழகியலுக்காக தொடர்ந்து வாசிக்கப் படுகின்றன.
நவீன இலக்கியத்தில் தன்னுடைய ஓவியம் மற்றும் சிற்பம் சார்ந்த புத்தகங்களுக்காக இவர் தொடர்ச்சியாக வாசிக்கப் படுகிறார். ”சுந்தரபுத்தன் நுண்கலைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஓவியம் சார்ந்த பயணங்கள் மேற்கொண்டும் அதன் முக்கியத்துவம் குறித்தும் வெகுஜன ஊடகங்களில் எந்த அங்கீகாரமும் எதிர்பார்க்காமல் தொடர்ச்சியாக பதிவு செய்தது பாராட்டத்தக்கது” என்று அவர் புத்தகங்கள் குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். சுந்தரபுத்தனின் 'வண்ணங்களின் வாழ்க்கை' நூலை நவீன ஓவியங்கள் குறித்த சிறந்த நூல்களில் ஒன்றாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நூல் பட்டியல்
கட்டுரை நூல்கள்
- கற்பனைக் கடிதங்கள் (கற்பனையாக எழுதப்பட்ட கடிதங்களின் தொகுப்பு)
- ஒரு கிராமமும் சில மனிதர்களும் (சொந்த கிராமத்து மனிதர்கள் பற்றிய குறிப்புகள்)
- நவீன தூரிகை ( ஓவியங்கள் குறித்த கட்டுரைகள் )
- கிராமத்து ஆட்டோகிராப் (மறந்துபோன கிராமிய அடையாளங்கள்)
- மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு
- யானை பார்த்த சிறுவன்
- அழகின் வரைபடங்கள்
சிறார் நூல்கள்
- அக்கா குருவி ( கதைத் தொகுப்பு )
தொகுப்பு நூல்கள்
- பெருந்தலைவர் ( காமராஜர் பற்றிய தொகுப்பு நூல்)
- கடவுள் மறுப்பின் தொடக்கப் புள்ளி ( பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் பற்றிய தொகுப்பு நூல்)
- வண்ணங்களின் வாழ்க்கை (நவீன ஓவியர்கள் - சிற்பிகளின் பேட்டித் தொகுப்பு)
- கவிதை ஓவியம் சிற்பம் சினிமா (கலை விமர்சகர் இந்திரனின் படைப்புகளின் தொகுப்பு)
- இந்திரன் - வஐச ஜெயபாலன் உரையாடல் (சமகால கவிதை குறித உரையாடல்)
உசாத்துணை
- எழுத்தாளர் சுந்தரபுத்தனுக்கு அன்னம் விருது
- ஓவிய நூல் குறித்து சுந்தரபுத்தன் உரை - எஸ்.ராமகிருஷ்ணன் - நற்றுணை கலந்துரையாடல்
- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பதிவு
- சுந்தர புத்தன் உரை காணொளி
- சுந்தர புத்தன் உரை ஓவியம் காணொளி
- சுந்தரபுத்தன் - காமதேனு செய்தி
- https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2020/11/89666/
✅Finalised Page