under review

புலவர் கா. கோவிந்தன்

From Tamil Wiki
Revision as of 10:08, 4 November 2023 by Jeyamohan (talk | contribs)
கா.கோவிந்தன்
புலவர் கா. கோவிந்தன்
அண்ணாத்துரையுடன்

புலவர் கா. கோவிந்தன் (ஏப்ரல் 15, 1915 - ஜூலை 1, 1991) தமிழறிஞர். சங்க இலக்கிய ஆய்வாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல்வாதி. தமிழக சட்டமன்ற தலைவராக பணியாற்றினார். சங்கப்புலவர்களை முழுமையாக ஆராய்ந்து தொகுத்தவர் என்ற முறையில் தமிழ் இலக்கியத்தில் நினைவுகூரப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

எம்.எல்.ஏ பதவியேற்றல்

செய்யாற்றில் காங்க முதலியார், சுந்தரம் இணையருக்கு ஏப்ரல் 15, 1915-ல் விவசாயக் குடும்பத்தில் கா. கோவிந்தன் பிறந்தார். கோவிந்தன் செய்யாறு திண்ணைப் பள்ளிக் கூடத்திலும், செய்யாறு அரசு பள்ளியிலும் பள்ளிக்கல்வி பயின்றார். வீரபத்திரப்பிள்ளை, அவ்வை சு.துரைசாமிப் பிள்ளையின் மாணவர். தமிழ் இலக்கிண இலக்கியங்கள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகியவற்றை சு.துரைசாமிப் பிள்ளையிடம் பயின்றார். அறிஞர் அண்ணா, கவியரசு வேங்கடாசலம் பிள்ளை,ஞானியார் அடிகள்,மறைமலையடிகள் உடன் பயின்றவர்கள்; நண்பர்கள். மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வில் வெற்றி பெற்று புலவர் பட்டம் பெற்றார். பி.ஓ.எல்., எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கோவிந்தன் 1937-ல் மாமன்மகள் கண்ணம்மாவை மணம் செய்துகொண்டார். வேலூர் திருப்பதி தேவஸ்தானம் நடத்திய வெங்கடேஸ்வரா உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக 1941-ல் பணியில் சேர்ந்தார். 1944 வரை பணியில் தொடர்ந்தார்.

அரசியல் வாழ்க்கை

கா. கோவிந்தன்

கா. கோவிந்தன் சிறுவயது முதல் தனித்தமிழ் இயக்கத்திலும் நீதிக்கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பத்தொன்பது வயதில் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். 1937-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆகஸ்ட் 27, 1944-ல் சேலம் திராவிடக்கட்சி மாநாட்டில் முக்கிய பங்கு வகித்தார். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்று அண்ணாத்துரை, திராவிட முன்னேற்றக் கழகத்தைத்(திமுக) தொடங்கிய போது அதில் இணைந்தார். அண்ணா அமைத்த முப்பது பேர் கொண்ட உள்வட்டக்குழுவில் இருந்தார்.

கோவிந்தன் 1952 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆதரவு வேட்பாளருக்காக செய்யாறு பகுதியில் பிரச்சாரம் செய்தார். 1958-ல் திருவத்திபுரம் (செய்யாறு) பேரூராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 சட்டமன்றத் தேர்தலில் செய்யாறுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1967, 1971 மற்றும் 1977 தேர்தல்களிலும் அதே தொகுதியிலிருந்து திமுக சார்பாகப் போட்டியிட்டு வென்றார். கோவிந்தன், தி.மு.க-வில் பல கட்சிப் பொறுப்புகளை வகித்துள்ளார். அக்கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறை சென்றார்

எம்.ஜி.ஆருடன்

பதவிகள்

புலவர் கா கோவிந்தன் 1967-69 -ல் சட்டமன்றத் துணைத்தலைவராகப் பணியாற்றினார். 1969-71 மற்றும் 1973-77 காலகட்டங்களில் சட்டமன்றத் தலைவராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

புலவர் கா. கோவிந்தனின் முதல் நூல் 'திருமாவளவன்' 1951-ல் வெளியானது. 1951 முதல்1991 வரை தொடர்ந்து எழுதினார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியர் சுப்பையா பிள்ளை சென்னையில் தெ.பொ.மீ.தலைமையில் கூட்டிய நற்றிணை மாநாட்டில் இவரை உரையாற்ற அழைத்தார். அச்சந்திப்பின் மூலம் நட்பு வளர்ந்து பல நூல்கள் கழகம் வழி வெளிவர உதவியது. மொழிபெயர்ப்பு உட்பட இவர் எழுதியவை ஐம்பத்தியொரு புத்தகங்கள். சங்ககாலப் புலவர்கள் பற்றியவை பதினாறு. சங்கப் பாடல்கள் தொடர்பாக இருபத்தியொரு நூல்கள். சைவசித்தாந்த நூல் பதிப்புக்கழகம் இந்நூல்களை வெளியிட்டது. இவரது பிற நூல்களை வள்ளுவர் பண்ணை, மலர் நிலையம், அருணா பதிப்பகம் போன்றவை வெளியிட்டுள்ளன. புலவர் கா. கோவிந்தன் 'கழுமலப்போர்'(1958), 'தமிழர் வணிகம்'(1959) 'தமிழர் தளபதிகள்'(1960), 'சாத்தான் கதைகள்'(1960), 'தமிழர் வாழ்வு'(1960) 'தமிழகத்தில் கோசர்' (1960) போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

சங்கப்புலவர் வரிசை நூல்கள்
கலிங்கம் கண்ட காவலர்

கா. கோவிந்தன் சங்கப்புலவர்களை முழுமையாக ஆராய்ந்து தொகுத்தார். சங்கப் புலவர்கள் பற்றிப் பல்வேறு தலைப்புகளில் 16 புத்தகங்களை எழுதியிருக்கிறார் கோவிந்தன். உவமையாகப் பெயர் பெற்றோர் (1953), பெண்பால் புலவர்கள் (1953), மாநகர் புலவர்கள் - மூன்று பகுதிகள் (1954), காவலர் பாவலர் (1953), கிழார் பெயர் பெற்றோர் (1954), வணிகப்புலவர்கள் (1954), உழைப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்றோர் (1955), குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள் (1956) என்னும் தலைப்புகளில் சங்கப்புலவர் வரிசை நூல்கள் வந்துள்ளன.சங்ககால அரசர்களைச் சேரர், சோழர், பாண்டிய வள்ளலார், அகுதை முதலிய 44 பேர், திரையன் முதலிய 29 எனும் ஆறு தலைப்புகளில் தொகுத்திருக்கிறார். சங்க காலத்தில் ஒளவையார் என்ற பெயரில் எழுதப்பட்ட பாடல்களையும் தொகுத்துள்ளார்.

மொழிபெயர்ப்பாளர்

1954-ல் டாக்டர் கால்டுவெல்லின் திராவிடமொழி ஒப்பியல் நூலைத் 'திராவிட மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்' என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்தார். பி.டி. ஸ்ரீனிவாச அய்யங்காரின் 'History of Tamil' நூலை 'தமிழர் வரலாறு' என்ற தலைப்பிலும் (1990), Pre Aryam Tamil culture' நூலை 'ஆரியருக்கு முந்திய தமிழ்ப் பண்பாடு' என்ற தலைப்பிலும் மொழிபெயர்த்தார்(1991). அவரின் 'Stone Age In India' நூலை 'இந்தியாவில் கற்காலம்' என்ற பெயரில் மொழிபெயர்த்தார்.

புலவர் கா. கோவிந்தன்

விருதுகள்

  • 1989-ல் அண்ணா விருது
  • 1980-ல் திரு.வி.க விருது
  • 1990-ல் பவளவிழா பாராட்டு

மறைவு

புலவர் கா. கோவிந்தன் ஜூலை 2, 1991-ல் தன் எழுபத்தி ஐந்தாவது வயதில் காலமானார்.

நாட்டுடைமை

புலவர் கா. கோவிந்தனின் நூல்கள் 2007-ல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன[1].

இலக்கிய இடம்

கா.கோவிந்தன் திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகளில் ஒருவர். நிர்வாகப்பதவிகளை வகித்தவர்.திராவிட இயக்கத்தின் தமிழறிஞர்களில் முக்கியமானவராக மதிக்கப்படுகிறார். திராவிட இயக்கப் பார்வையில் சங்ககாலத்தை வரையறை செய்து தொகுத்தவர் என கோவிந்தன் மதிப்பிடப்படுகிறார். தமிழரின் பண்பாட்டின் அடித்தளமாக சங்ககாலத்தை வகுத்துக்கொண்டு, அந்தப்பார்வையில் சங்கப்பாடல்களை ரசிக்கும் முறைமையையும் உருவாக்கினார்.

நூல்கள்

  • திருமாவளவன்
  • நக்கீரர்
  • பரணர்
  • கபிலர்
  • ஔவையார்
  • உறுப்பாலுல் சிறப்பாலும் பெயர் பெற்றோர்
  • அதியன் விண்ணத்தனார் முதலிய 65 புலவர்கள்
  • குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்
  • பேயனார் முதலிய 39 புலவர்கள்
  • சேரர்
  • சோழர்
  • பாண்டியர்
  • வள்ளல்கள்
  • கால்டுவெல் - திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
  • இலக்கிய வளர்ச்சி
  • அறம் வளர்த்த அரசர்
  • நற்றிணை விருந்து
  • குறிஞ்சிக் குமரி
  • முல்லைக் கொடி
  • கூத்தன் தமிழ்
  • கழுகுமலைப் போர்
  • மருதநில மங்கை
  • பாலைச்செல்வி
  • நெய்தற்கன்னி
  • கலிங்கம் கண்ட காவலர்
  • தமிழர் தளபதிகள்
  • சாத்தான் கதைகள்
  • மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்
  • தமிழர் வாழ்வு
  • பண்டைத் தமிழர் போர்நெறி
  • காவிரி
  • சிலம்பொலி
  • புண் உமிழ் குருதி
  • அடு நெய் ஆவுதி
  • கமழ் குரல் துழாய்
  • சுடர்வீ வேங்கை
  • நுண்ணயர்
  • தமிழர் வரலாறு
சங்கப்புலவர் வரிசை பெண்பாற் புலவர்கள்
சங்கப்புலவர் வரிசை நூல்கள்
  • உவமையாகப் பெயர் பெற்றோர் (1953)
  • பெண்பால் புலவர்கள் (1953)
  • மாநகர் புலவர்கள் - மூன்று பகுதிகள் (1954)
  • காவலர் பாவலர் (1953)
  • கிழார் பெயர் பெற்றோர் (1954)
  • வணிகப்புலவர்கள் (1954)
  • உழைப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்றோர் (1955)
  • குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள் (1956)
  • அகுதை முதலிய நாற்பத்து நால்வர்
  • திரையன் முதலிய இருபத்து ஒன்பதின்மர்
மொழிபெயர்ப்பு
  • திராவிட மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்
  • History of Tamil (1990)
  • Pre Aryam Tamil culture (1991)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page