பரிபாடல்
பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது ஒரு பண்ணிசை இலக்கியம். ‘பரிபாட்டு’ என்னும் பெயராலும் இது வழங்கப்பட்டிருக்கிறது.
பெயர்க்காரணம்
பரிபாடல் என்னும் பாவகையில் இயற்றப்பெற்றமையால் இந்நூல் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. பரிந்து செல்லும் ஓசையுடைய (வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பாக்களுக்கும், பல்வேறு அடிகளுக்கும் பரிந்து இடமளிக்கும்) தன்மையால் இப்பாவகை 'பரிபாடல்' எனப் பெயர் பெற்றது. பரி(குதிரை) போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்டதால் இப்பெயர் அமைந்தது என்றும் கருதப்படுகிறது.எட்டுத்தொகை நூல்களில் பாவகையால் பெயர் அமைந்தவை கலித்தொகையும் பரிபாடலும்.
தொல்காப்பியர் கூறும் பரிபாடலுக்கான இலக்கணம்
- நான்கு பாவின் உறுப்புகளும் கொண்ட பாடல்.
- வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும்.
- வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.
- கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும் கொண்டிருக்கும்.
- பாடுபொருள் அகத்திணை சார்ந்ததாக இருக்கும்
- 25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும்.
தொல்காப்பியர், இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் அனைவரும் பரிபாடல் என்னும் பாவகையில் தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலே பற்றிவரும் என்று குறிப்பிடுகின்றனர்.
சங்கத்தொகை நூலான பரிபாடல் பெரிதும் பெரிதும் தோத்திரப் பாடல்களாகவே அமைந்துள்ளன. அகப்பொருள் பேசப்படவில்ல. எனவே"பரிபாடலின் தொல்காப்பியர்க்குப் பிற்பட்ட காலத்தில் புறம்பற்றிய செய்திகளும் பரிபாடலில் பாடப்பெற்றன” என்பது இப்பாக்களால் தெரிகின்றது" என்று மா. இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார்.
காலம்
எஸ். வையாபுரிப் பிள்ளை அதிக வடசொற்கள் இடம்பெறுவது, பரிபாடல்களைப் பாடிய புலவருள் எவரும் பிற சங்கத்தொகை நூல்களில் பாடாதது போன்ற பல காரணங்களினால் பரிபாடல் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது என்று கருதினார். இரா. இராசமாணிக்கனார் 'தமிழ்மொழி -இலக்கிய வரலாறு' நூலில் இக்கருத்துக்களை மறுத்துரைத்து பரிபாடலும் கலித்தொகையும் பொ.மு. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார். பரிபாடல்களைப் பாடிய புலவர்கள் பிறதொகை நூற்பாக்களைப் பாடிய புலவரே எனக் கொண்டாலும், வேறானவர் எனக் கொண்டாலும், அவர்கள் காலம் பொ.யு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதி என்றும் அதனால் பரிபாடல் சங்க காலத்தில் இயற்றப்பட்டதே என்றும் குறிப்பிடுகிறார்.
பாடிய புலவர்கள்
பாடல்
எண் |
பாடியவர் | பாடுபொருள் | அடிகள் | இசை வகுத்தவர் | பண் |
---|---|---|---|---|---|
1 | அறிய முடியவில்லை | திருமால் | 65 | அறிய முடியவில்லை | |
2 | கீராந்தையார் | திருமால் | 76 | நன்னானகார் | பாலையாழ் |
3 | கடுவனிள வெயினனார் | திருமால் | 94 | பெட்டனாகனார் | பாலையாழ் |
4 | கடுவனிள வெயினனார் | திருமால் | 73 | பெட்டனாகனார் | பாலையாழ் |
5 | கடுவனிள வெயினனார் | செவ்வேள் | 81 | கண்ணனாகனார் | பாலையாழ் |
6 | நல்லந்துவனார் | வையை | 106 | மருத்துவன் நல்லச்சுதனார் | பாலையாழ் |
7 | மையோடக் கோவனார் | வையை | 86 | பித்தாமத்தர் | பாலையாழ் |
8 | நல்லந்துவனார் | செவ்வேள் | 130 | மருத்துவன் நல்லச்சுதனார் | பாலையாழ் |
9 | குன்றம்பூதனார் | செவ்வேள் | 130 | மருத்துவன் நல்லச்சுதனார் | பாலையாழ் |
10 | கரும்பிள்ளைப் பூதனார் | வையை | 131 | மருத்துவன் நல்லச்சுதனார் | பாலையாழ் |
11 | நல்லந்துவனார் | வையை | 140 | நாகார் | பாலையாழ் |
12 | நல்வழுதியார் | வையை | 102 | நந்தாகனார் | பாலையாழ் |
13 | நல்லெழினியார் | செவ்வேள் | 64 | - | நோதிறம் |
14 | கேசவனார் | செவ்வேள் | 32 | மருத்துவன் நல்லச்சுதனார் | பாலையாழ் |
15 | இளம்பெருவழுதியார் | திருமால் | 66 | மருத்துவன் நல்லச்சுதனார் | நோதிறம் |
16 | நல்லழிசியார் | வையை | 55 | மருத்துவன் நல்லச்சுதனார் | நோதிறம் |
17 | நல்லழிசியார் | செவ்வேள் | 53 | மருத்துவன் நல்லச்சுதனார் | நோதிறம் |
18 | குன்றம்பூதனார் | செவ்வேள் | 53 | மருத்துவன் நல்லச்சுதனார் | காந்தாரம் |
19 | நப்பண்ணனார் | செவ்வேள் | 106 | மருத்துவன் நல்லச்சுதனார் | காந்தாரம் |
20 | நல்லந்துவனார் | வையை | 111 | மருத்துவன் நல்லச்சுதனார் | காந்தாரம் |
21 | நல்லச்சுதனார் | செவ்வேள் | 70 | கண்ணகனார் | காந்தாரம் |
22 | அறிய முடியவில்லை | 45 | அறிய முடியவில்லை |
நூல் அமைப்பு
பரிபாடலில் திருமாலுக்கு 8, செவ்வேளுக்கு 31, வைகைக்கு 26, மதுரைக்கு 4, கொற்றவைக்கு 1 என 70 பாடல்கள் இருந்த்தாக இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது.
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்.
இன்றி இருப்பவை திருமாலுக்கு 6,முருகனுக்கு 8, வைகைக்கு 8 பாடல்கள் என 22 பாடல்கள். மேலும் தனிநிலையில் கிடைத்த 11 பாடல்கள் இந்த நூலினதாக இருக்கலாம் என்னும் கருத்தோடு ‘பரிபாடல் திரட்டு’ என்னும் தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. பரிபாடல் அகப்பொருளும் புறப்பொருளும் இணைந்த நூல்.
பரிபாடலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் (1, 22 நீங்கலாக) ஆசிரியர்பெயர், துறை, பண், பண் வகுத்தோர் பெயர் ஆகிய குறிப்புகள் உள்ளன. பரிபாடலில் அமைந்துள்ள பண்களின் அமைதி கருதியே பரிபாடலின் அமைப்புமுறை அமைந்துள்ளது.
மதுரை நகரையும், மதுரையையொட்டி ஒடுகின்ற வையை ஆற்றையும், திருபரங்குன்றத்தையும், திருமாலிருங் குன்றத்தையும் பாடுபொருளாகக் கொண்டு பரிபாடல் எழுந்துள்ளது என்பதனால் இந்நூலினை மதுரையைப் பற்றி எழுந்த நூல் எனலாம்.
சிறப்புகள்
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட் டாயிரு பாவினும் உரிய தாகும் என்மனார் புலவர் -அகம். : நூ. 51
என்கிற தொல்காப்பிய அகத்திணை நூற்பாலால் அகப் பொருள் செய்திகளை நாடக வழக்கினும், உலக வழக் சினும் பொருத்தி அழகுறப் பாடற்கு உரியன கலிப்பாவும் பரிபாடலுமே எனும் உண்மையினை அறியலாம்.
பிற்காலத்தில் சைவ சமயக் குரவர் நால்வர், ஆழ்வார்கள் ஆகியோர் பாடிய பக்தி இலக்கியங்களுக்கு பரிபாடலே முன்னோடியாகக் கருதப்படுகிறது.
பாடல் நடை
அனைத்தும் நீயே
பாடியவர் : நல்லெழுநியார்
சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடுபோர் அண்ணால்!
அவை அவை கொள்ளும் கருவியும் நீயே:
முந்து யாம்கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே:
மூன்றின் உணரும் தீயும் நீயே;
நான்கின் உணரும் நீரும் நீயே,
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே,
அதனால், நின்மருங்கின்று-மூ-ஏழ் உலகமும்,
மூலமும் அறனும் முதன்மையின் இகந்த
காலமும் விசும்பும் காற்றோடு கனலும்(13)
திருமால்
தொல்முறை இயற்கையின் மதியொ....
... ... ... ... ... ... ... ... மரபிற்று ஆக.
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல,
கருவளர் வானத்து இசையின் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;
செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுது.
செவ்வேள்
தெரியிழாய் செல்கென்றாய்! எல்லா! யாம் பெற்றோம்
ஒருவர்க்கும் பொய்யாநின் வாயிற்சூள் வெளவல்;
பருவத்துப் பன்மாண்நீ சேறலின் காண்டை,
எருமை இருந்தோட்டி எள்ளியும் காளை
செருவம் செயற்கென்னை முன்னைத்தன் சென்னி
அருள்வயினான் தூங்கும் மணிகையால் தாக்கி
நிரைவளை ஆற்றிருஞ் சூள்
உசாத்துணை
- தமிழ் இணைய கல்விக்கழகம், பரிபாடல் நூல்
- தமிழ்மொழி-இலக்கிய வரலாறு, இரா, இராசமாணிக்கனார், தமிழ் இணைய கல்விக் கழகம்
- பரிபாடல், உரை பொ. வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு
- பாட்டும் தொகையும்-தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.