first review completed

முதுமொழிக்காஞ்சி

From Tamil Wiki
Revision as of 20:17, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)

முதுமொழிக்காஞ்சி, சங்கம் மருவிய காலத் தொகுப்பான பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று. முதுமொழிக்காஞ்சி நூலை இயற்றியவர் மதுரை கூடலூர் கிழார்.

பெயர்க் காரணம்

முதுமொழிக்காஞ்சி எனும் பெயரில் உள்ள முதுமொழி என்பது பழமொழி மூதுரை, முதுசொல் எனப் பொருள் படும். காஞ்சித் திணை நிலையாமையை உணர்த்தும். [[புறப்பொருள்

வெண்பாமாலை|புறப்பொருள்
வெண்பாமாலையில்]]' முதுமொழிக் காஞ்சி என்று ஒரு துறை அமைந்துள்ளது. இதனை, 'மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி' என்றுதொகைச் சூத்திரத்தில் சுட்டியதோடு, பின்னர்,

'பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள்
 முடிவு உணரக் கூறின்று'

என்று விளக்கியும் இதன் ஆசிரியர் ஐயனாரிதனார் உரைத்துள்ளார். உலகியல் உண்மைகளைத் தெள்ளத் தெளிந்த புலவர் பெருமக்கள் எடுத்து இயம்புவது முதுமொழிக்காஞ்சி .

முதுமொழிக்காஞ்சியின் காலம் சங்கம் மருவிய காலமான ஐந்தாம் நூற்றாண்டு என கருதப்படுகிறது.

ஆசிரியர் குறிப்பு

முதுமொழிக்காஞ்சி நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர் கிழார். கூடலூர் இவர் பிறந்த ஊராகவும், மதுரை பின்பு புகுந்து வாழ்ந்த ஊராகவும் இருத்தல் கூடும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம். தொல்காப்பிய மரபியலில்,

"ஊரும் பேரும் உடைத் தொழிற் கருவியும்
யாரும் சார்த்தி அவை அவை பெறுமே"

என்ற சூத்திர உரையில் 'அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான் மாறன் என்பன வேளாளர்க்கு உரியன' எனக் குறிப்பிடப்படுகிறது. வரும் குறிப்பு மேற்கூறிய கருத்தை வலியுறுத்தும். தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உடைமைப்பெயர்க்கு உதாரணமாக அம்பர் கிழான், பேரூர்கிழான்' என்பவை காட்டப்பட்டுள்ளன. இது கொண்டு கூடலூரைத் தம் உடைமையாகக் கொண்டவர் கூடலூர்கிழார் என்றும் ஊகிக்கலாம்.

சங்க நூல்களில் குறிக்கப்பெறும் கூடலூர் கிழாரும் இவரும் ஒருவர் அல்லர். சங்கப் புலவர் 'புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்' என்று குறிக்கப் பெறுகிறார். இவ் இருவரையும் குறிக்கும் அடைமொழி வேறுபாடே இருவரும் வேறு வேறு புலவர் என்பதைப் புலப்படுத்தும். மேலும், முதுமொழிக் காஞ்சியில் வரும் விழைச்சு, சொன்மலை, மீப்பு முதலிய பிற்காலச் சொல்லாட்சிகளும் இவர் சங்கப் புலவர் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. டாக்டர் உ.வே.சாமிநாதையர் தான் பதிப்பித்த புறநானூறு நூலின் பாடினோர் வரலாற்றில், 'முதுமொழிக்காஞ்சியை இயற்றிய மதுரைக் கூடலூர் கிழார் வேறு, இவர் வேறு' என்று குறித்துள்ளார்.

நூல் அமைப்பு

முதுமொழிக்காஞ்சி நூல், பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகம் பத்து கொண்டது. அதாவது 100 பாடல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு பதிகமும் "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்" என்னும் தரவு அடியோடு தொடங்குகிறது. அடுத்து ஓரடிப் பாடல்கள் பத்து ஒவ்வொன்றிலும் தாழிசை போல அடுக்கி வருகின்றன. முதுமொழிக்காஞ்சி நூல், 18 நூல்களின் தொகுப்பான பதினெண்கீழ்க் கணக்கு நூல் தொகுதியில் மிகச் சிறியது. பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இப் பத்துப் பெயர்களும் வருமாறு:

  • சிறந்த பத்து
  • அறிவுப் பத்து
  • பழியாப் பத்து
  • துவ்வாப் பத்து
  • அல்ல பத்து
  • இல்லைப் பத்து
  • பொய்ப் பத்து
  • எளிய பத்து
  • நல்கூர்ந்த பத்து
  • தண்டாப் பத்து

முதுமொழிக்காஞ்சி நூலை நச்சினார்க்கினியர் முதலிய பழைய உரையாசிரியர்கள் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்கள். முதுமொழிக்காஞ்சி நூல் முழுமைக்கும் தெளிவான பழைய பொழிப்புரை உள்ளது.

உதாரணப் பாடல்

முதுமொழிக்காஞ்சி நூலில் ஏழாவது பதிகமாக எளிய பத்து அமைந்துள்ளது. அதன் பாடல்கள்;

  • ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் புகழ்வெய் யோர்க்குப் புத்தேள்நா(டு) எளிது (71)

பொருள்




ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து மக்களெல்லாருள்ளும், புகழ் விரும்பிய ஒருவர்க்கு சொர்க்கம் பெறுதல் எளிது.

  • உறழ்வெய் யோருக்கு உறுசெரு எளிது (72)

பொருள்




பிறரொடு கலகம் விரும்புவார்க்கு பெரும்போர் எளிது.

  • ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை எளிது (73)

பொருள்




பிறரிடம் அன்புள்ளவர் அவர் எதை விரும்பிக் கேட்டாலும் எளிதிற் கொடுப்பர்.

  • குறளைவெய் யோர்க்கு மறைவிரி எளிது (74)

பொருள்




கோட்சொல்லும் இயல்புடையோர் பிறருடைய இரகசியங்களை எளிதில் வெளியிடுவர்.(குறளை- புறங்கூறுதல்)

  • துன்பம்வெய் யோர்க்கு இன்பம் எளிது (75)

பொருள்




ஒரு காரியத்தைச் செய்வதில் உண்டாகும் துன்பத்தை பொறுத்துக் கொள்பவருக்கு அந்தக் காரியம் நிறைவடைதலைக் கண்டு இன்ப மடைவர்

  • இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது (76)

பொருள்




முயற்சியால் உண்டாகும் இன்பத்தை விரும்புவோருக்கு வறுமையால் உண்டாகும் துன்பம் ஒரு பொருட்டாகத் தோன்றாது

  • உண்டிவெய் யோர்க்குப் உறுபிணி எளிது (77)

பொருள்




உணவை மிகுதியும் விரும்பினார்க்கு பெருநோய் எளிதில் வந்தடையும்.

  • பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி எளிது (78)

பொருள்




பெண்டிர் மேல் மிக்க காமம் கொண்டவருக்கு பழி எளிதாக உண்டாகும்.

  • பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண் எளிது (79)

பொருள்

பிறர் பாரத்தைத் தாங்குபவர்களுக்கு, தன்னைச் சூழ்ந்தவர்களுடன் பகுத்துண்ணும் அளவிற்கு செல்வம் எளிதாக கிட்டும்.

  • சார்பு இலோர்க்கு உறுகொலை எளிது (80)

பொருள்




நன்னடத்தை இல்லாதவர் கொலை முதலிய தீச்செயல்களை எளிதில் செய்வார்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.