under review

சே. ராமானுஜம்

From Tamil Wiki
Revision as of 08:38, 21 May 2023 by Logamadevi (talk | contribs)
Prof-s-ramanujam-1.jpg

சே. ராமானுஜம் (ஜூலை 04, 1935 - டிசம்பர் 07, 2015) நாடகவியலாளர், நாடக ஆசிரியர், நவீன நாடக இயக்குனர், பேராசிரியர். தமிழகத்தில் அழிந்த நிலையிலிருந்த கைசிக புராண நாடகத்தை மீட்டெடுத்தவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். கேரளத்திலும், தமிழகத்திலும் குழந்தை நாடகங்களை அரங்கேற்றிய முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

Prof-s-ramanujam-2.jpg

சே. ராமானுஜம் ஜூலை 04, 1935 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் சேஷன் - ரங்கநாயகி தம்பதியருக்குப் பிறந்தார். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும், நாடகத் துறை தேசிய நாடகப்பள்ளியில் முதுகலைப் பட்டத்திற்கு நிகரான நாடகப் பட்டயப் படிப்பில் 'குழந்தைகள் அரங்கம் பிரிவில்' தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

Prof-s-ramanujam-3.jpg

சே. ராமானுஜம் காந்தியின் ஆதாரக் கல்வித் திட்டத்தின் கீழ் ஆரம்பப் பள்ளியில் பணியாற்றினார். அதன் பின் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக 1956 முதல் 1964 வரை பணியாற்றினார். 1960-ஆம் ஆண்டு ஜீ. சங்கரப்பிள்ளை, எஸ்.பி. சீனிவாசன் இருவரின் அறிவுரைப் படி டெல்லி தேசிய நாடகப்பள்ளியில் சேர்ந்தார். அங்கே இந்திய நாடக ஆளுமையான இப்ராகிம் அல்காஜியின் கீழ் பயின்றார். 1967-ஆம் ஆண்டு கல்வியை முடித்த பின் பத்தாண்டுகள் மீண்டும் காந்திகிராமில் பணியாற்றினார். 1995-ல் ஓய்வு பெற்றார்.

நாடக வாழ்க்கை

Prof-s-ramanujam-4.jpg

சே. ராமானுஜம் 1977 முதல் 1985 வரை கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் துணை இயக்குனராகவும், திருச்சூர் நாடகப்பள்ளியின் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். 1985-ல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறையில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றினார். இக்காலத்தில் தஞ்சை, கோழிக்கோடு, புதுவை பல்கலைக்கழகங்களின் நாடகத்துறையின் பாடத்திட்ட வரைவினை உருவாக்கினார். சே. ராமானுஜம் தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி நாடகங்கள் மற்றும் சிறுகதைகளிலிருந்து எழுதப்பட்ட நாடகங்களை இயக்கினார். தானே பதினைந்திற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கினார்.

Prof-s-ramanujam-5.jpg

சே. ராமானுஜம் 1960-களில் கேரளாவில் ’நாடகக் களரி’ என்னும் முன்னெடுப்பில் ஜீ. சங்கரப்பிள்ளையுடன் இணைந்து பணியாற்றினார்.

FIR நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு நாடகங்களின் சோதனை முயற்சிகளைக் கற்பிக்கும் தலைமை அதிகாரியாக பணியில் இருந்தார். மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) சார்பில் பள்ளியில் நாடகங்களின் வழிக் கல்விக் குறித்து கணக்கெடுத்து, அறிக்கை சமர்ப்பிக்கும் துறையின் தலைவராக இருந்தார். தஞ்சாவூர் தென்மண்டல கலாசார மையம் வழியாக தமிழ்நாட்டில் தப்பாட்டம் (1992), பொய்க்கால் குதிரை ஆட்டம் (1994) ஆகிய நிகழ்த்துக் கலைகளைப் புதுப்பித்தார். பள்ளி மாணவர்களுக்கான மாலை நேர படைப்பாக்கத் திறன் திட்டத்தை செயலாக்கினார். 1988-ஆம் ஆண்டு FETE புதுச்சேரி கலைத் திருவிழாவின் வடிவமைப்பாளர், தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார்.

Prof-s-ramanujam-7.jpg

1996-ஆம் ஆண்டு திருக்குறுங்குடியில் நிகழ்ந்து வந்த கைசிக புராண நாடகத்தை மீட்டெடுத்து மறு உருவாக்கம் செய்தார். இன்று திருக்குறுங்குடியில் நிகழும் பத்து நாள் கைசிக புராண நாடகம் சே. ராமானுஜத்தால் நாடகக் கலைஞர். ந. முத்துசாமி, பரத நாட்டிய கலைஞர் அனிதா ரத்னம் ஆகியோரின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. மரபான நாடகங்களின் தாக்கம் சே. ராமானுஜத்திடம் இருந்தாலும் அரங்கில் நவீன யதார்த்த நாடகங்களையே உருவாக்கினார்.

கலைத்துறையில் இடம்

Prof-s-ramanujam-6.jpg

சே. ராமானுஜம் நவீன நாடக முறையின் முன்னோடியாக இருந்த அல்காஜியின் மாணவர். பின்னாளில் ஜீ. சங்கரப்பிள்ளை, எம். கோவிந்தன் இருவராலும் ஈர்க்கப்பட்டு மரபார்ந்த நாடகங்களை அரங்கேற்றுவதில் ஈடுபட்டார். எம். கோவிந்தனின் ‘தனது நாடக வேதி’ என்னும் கோட்பாட்டால் சே. ராமானுஜம் ஈர்க்கப்பட்டார். திருக்குறுங்குடியிலுள்ள கைசிக புராண நாடகத்தை மீட்டெடுத்ததும் தமிழகத்தில் குழந்தைகளுக்கான நாடக அரங்கை உருவாக்கியதில் முன்னோடியான பங்களிப்பும் சே. ராமானுஜத்தின் தனிச் சாதனைகளாகும்.

Prof-s-ramanujam.jpg

ந. முத்துசாமி சே. ராமானுஜத்தைப் பற்றி, “சே.ராமானுஜத்தின் மிக முக்கியமான பங்களிப்பு குழந்தை களுக்கான நாடக அரங்கத்தை உருவாக்கியதில் இருக்கிறது. கேரளத்தில் ஜீ. சங்கரப் பிள்ளையுடன் சேர்ந்து நாடகங்களை இயக்கிய சே. ராமானுஜம், கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் குழந்தைகள் நாடக அரங்கம் உருவாவதற்கான முன்னோடி ஆவார். அவரது ஒட்டுமொத்தப் பங்களிப்பு என்பது திருக்குறுங்குடி ஆலயத்தில் நிகழ்த்தப்பட்ட கைசிக புராணத்தை மறு ஆக்கம் செய்ததில் இருக்கிறது. தொலைந்து போயிருந்த ‘கைசிகப் பண்’ பிரதியைச் சிரமப்பட்டுக் கண்டுபிடித்து மெலட்டூர் பாகவத மேளாவில் நடிப்பவர்களையும் தஞ்சாவூர் நட்டுவனார்களையும் அழைத்துவந்து இரண்டு தேவதாசிகளின் ஒருங்கிணைப்பில் மீண்டும் நிகழ்த்திக் காட்டியது ஒரு சாதனை. அவர் அந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்காவிட்டால் கோவிலுடன் பழம்நினைவாகப் போயிருக்கும் கைசிக நாடகம்.” எனக் குறிப்பிடுகிறார்.

மறைவு

Prof-s-ramanujam-8.jpg

பேராசிரியர். சே. ராமானுஜம் டிசம்பர் 7, 2015 அன்று தஞ்சாவூரில் உள்ள தன் இல்லத்தில் மறைந்தார்.

விருதுகள்

  • 1996 ஆம் ஆண்டு திருப்பூர் தமிழ்ச் சங்கம் ‘இலக்கிய விருது’
  • 2001 - ரங்க பிரபாத் கேரளாவின் ‘பேரா.ஜீ. சங்கரப்பிள்ளை தேசிய விருது’
  • 2002 - பாண்டிச்சேரி தலைக் கோல் அரங்கக் குழுவின் ‘தலைக் கோல் விருது’
  • 2004 - ‘மலபார் சுகுமாரன் பாகவதர் நினைவு விருது’ கலாலயம், சேமஞ்சேரி கேரளா
  • 2004 - களம் கலை இலக்கிய அரங்க இயக்கம், பாண்டிச்சேரி சார்பில் ‘நாடக தந்தை விருது’
  • 2004 - காவ்யா புத்தக நிலையத்தின் ‘காவ்யா விருது’
  • 2003 - நாடக பங்களிப்புக்காக அமெரிக்க கலாசார நிறுவனம் வழங்கிய ‘விளக்கு விருது’
  • 2008 ஆம் ஆண்டுக்கான ‘சங்கீத நாடக அகாடமியின் விருது’

நாடகங்கள்

எழுதிய நாடகங்கள்
  • புறஞ்சேரி
  • பிணம் தின்னும் சாத்திரங்கள்
  • சுமை
  • முகப்போலிகள்
  • சஞ்சயன் காட்சி தருகிறான்
  • அறவை இயந்திரங்கள்
  • அக்கினிக்குஞ்சு
  • கேகயன் மடந்தை
  • வெறியாட்டம்
  • செம்பவளக்காளி
  • மௌனக்குறம்
  • பிச்சைக்காரனும் இறந்த நாயும்
  • சாஜகான்
  • அட்சய பாத்திரம்
  • கடமை அழைக்கிறது
  • தருமிக்கு கல்யாணம்
  • பெத்தண்ண சாமியின் தாலாட்டு
இயக்கிய நாடகங்கள்
இயக்கிய நாடகங்கள் எழுதியவர்
1 தேவதையின் பரிசு எம். வேலுசாமி
2 சூரிய காந்தி முனைவர் ஜீ.சங்கரப்பிள்ளை, எம். வேலுச்சாமி
3 உறவும் உள்ளமும் ஆஸ்கார் ஒயில்ட்(Oscar Wilde) எழுதிய செல்ஃபிஷ் ஜெயன்ட் (Selfish giant) கதையின் தழுவல்
4 நானிலம் எம். வேலுசாமி
5 தபால் ஒபிஸ் ரவீந்திரநாத் தாகூர்
6 தேரோட்டி மகன் பி.எஸ். ராமையா
7 கேழு ஜெனமே ஜெயா ஆதிய ரங்கச்சாரி
8 தங்கக் குடம் ஜீ. சங்கரப்பிள்ளை
9 நிதியும் - நீதியும் ஜீ. சங்கரப்பிள்ளை
10 இந்த நீதிமானின் ரத்தத்தில் ஜீ. சங்கரப்பிள்ளை
11 அவன் அமரன் ஏ. ஸ்ரீநிவாச ராகவன்
12 குருட்டு நகரம் பரத்திஞ்சு அரிச்சந்திரா
13 காஞ்சனா சீதை சி.என். ஸ்ரீகாந்தா நாயன்
14 பிரளயம் ஜீ. சங்கரப்பிள்ளை
15 நாற்காலிக்காரர் ந. முத்துசாமி
16 சுவரொட்டிகள் ந. முத்துசாமி
17 மழை இந்திரா பார்த்தசாரதி
18 கால யந்திரங்கள் இந்திரா பார்த்தசாரதி
19 கடலோடிகள் ஜ.எம். சிஞ்சி (தமிழில்: ராஜாராம்)
20 நிறைகாப்பு ஜெயந்தன்
21 அண்டோரா மக்ஸ் பிரிஸ் (Andorra by Max Frisch)
22 சபர்மதி தொலைவில் ஜீ. சங்கரப்பிள்ளை
23 காங்கேயன் ஜீ. சங்கரப்பிள்ளை
24 கஞ்சன் மௌளியர்
25 பாஞ்சாலி சபதம் பாரதியார்
26 ராமானுஜம் இந்திரா பார்த்தசாரதி
27 கவித்துடிப்பு தமிழச்சி தங்கப்பாண்டியன்
மலையாள நாடகங்கள்
மலையாள நாடகம் மூலத்தில் எழுதியவர்
1 கிரைம் நம்பர் சி.ஜே. தாமஸ்
2 அமானுஸ்யன் நீதானே சி.ஜே. தாமஸ்
3 பண்டிதன் மாறும்பறைய தன்னாய சிங்கமும் ஜீ. சங்கரப்பிள்ளை
4 அம்மாவன் ஆலு வீரண்ணா ஜீ. சங்கரப்பிள்ளை
5 ஈ நீதிமான் ரத்தத்தில் எனக்கு பங்கில்லா ஜீ. சங்கரப்பிள்ளை
6 காவல் ஜீ. சங்கரப்பிள்ளை
7 தீண்டியும் செத்த நாயும் பெட்டோல் பிரைக்
8 ரத்திரின் ஜரத் ஜீ. சங்கரப்பிள்ளை
9 சாகேதம் சி.என். ஸ்ரீகாந்தா நாயர்
10 லங்கா லக்‌ஷ்மி சி.என். ஸ்ரீகாந்தா நாயர்
11 அந்தாயுகம் தரன் வீர் பாரதி
12 அக்னியும் மழையும் கிரீஸ் கர்ணாட்
13 இடம் மாறண இழா ஜீ. சங்கரப்பிள்ளை
14 உருபங்கா பாஸன்
15 மூதேவித் தெய்வம் ஜீ. சங்கரப்பிள்ளை
16 குரு தட்ஷண ஜீ. சங்கரப்பிள்ளை
17 மத்தளம் ஜீ. சங்கரப்பிள்ளை
18 வீனாலில் விரிஞ்ஞ பூ ஜீ. சங்கரப்பிள்ளை
19 முத்தாசி கிளிகள் ஜீ. சங்கரப்பிள்ளை
20 சபர்மதி தூராயணி ஜீ. சங்கரப்பிள்ளை
21 சினேக தூதன் ஜீ. சங்கரப்பிள்ளை
22 சமத்துவ வாதி புலிமான பரமேஸ்வரன் பிள்ளை
23 பக்ன பாவனம் ஜீ.என். கிருஷ்ணப்பிள்ளை
24 நிழல் ஜீ. சங்கரப்பிள்ளை
25 ஒடிபஸ் ரெக்ஸ் (Oedipus Rex) சோபகிளிஸ் (Sophocles)
26 குறுக்கு வழி பி.கெ. விக்கிரமன் நாயர்
27 முக்தா தாரா ரவீந்திரநாத் தாகூர்
28 அம்மாவன் ஆலு வீரண்ணா? ஜீ. சங்கரப்பிள்ளை
ஆங்கில நாடகங்கள்
1 கான்டிடா (Candida) பெர்னாட்ஷா (Bernard Shaw)
2 கோஸ்ட் (Ghost) இப்ஸன்(Ibsen)
3 ரைடர் டு த சீ (Rider to the sea) ஜெ.எம். சிங் (J.M. Synge)
4 Scenes from King Lear வில்லியம் ஷேக்ஸ்பியர்
5 தா பியர் அன்டன் செக்கோவ்
6 Episode from Murder in the Cathedral டி.எஸ். எலியட்
இந்தி நாடகங்கள்
  • கைசா மாஸ ஆயா (சாய் பரஞ்சபே)
  • பகவத் யுகிதம் (போத்யான்)

நூல்கள்

  • திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் கைசிக நாடகம், காலச்சுவடு பதிப்பகம்
  • குதிரை முட்டை (நாடகப் பிரதி - கட்டுரைகள் - நேர்காணல்), இதில் சே. ராமானுஜம் கட்டுரை, நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது)
  • குட்டி யானைக்கு கொம்பு முளைத்தது (1982)
  • வெறியாட்டம் (அரங்கஸ்ரீ பதிப்பகம், 1988)
  • நாடகப்படைப்பாக்கம் (தமிழ்ப் பல்கலைக்கழக பதிப்பகம், 1995)
  • மௌனக்குறம் (எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளை வெளியீடு, 1996)
  • உடல் குரல் ஒருங்கிணைப்பு (தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், 1986)
பிற நூல்கள்
  • ராமானுஜத்தின் நாடகங்கள் (தொகுப்பு சி. அண்ணாமலை, காவ்யா பதிப்பகம், 2003)
  • ராமானுஜத்தின் நாடகக் கட்டுரைகள் (தொகுப்பு சி. அண்ணாமலை, காவ்யா பதிப்பகம், 2003)

வாழ்க்கை வரலாற்று நூல்கள்

  • பேரா.சே. ராமனுஜத்தின் நாடக வாழ்க்கை (1935 - 2015), தொகுப்பு - சண்முக சர்மா, ஜெயப்பிரகாஷ் சர்மா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

உசாத்துணை

  • பேரா.சே. ராமனுஜத்தின் நாடக வாழ்க்கை, தொகுப்பு - சண்முக சர்மா, ஜெயப்பிரகாஷ் சர்மா

வெளி இணைப்புகள்


✅Finalised Page