கி. ராஜநாராயணன்
கி. ராஜநாராயணன் (செப்டம்பர் 16, 1922 - மே 17, 2021) நவீன தமிழிலக்கியத்தின் முதன்மைப் படைப்பாளிகளுள் ஒருவர். கரிசல் நிலத்தை தன் இலக்கியத்தில் எழுதியவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், அனுபவ கட்டுரைகள் எழுதியவர். "கரிசல் வட்டார அகராதி" என்ற வட்டார தமிழ் அகராதி உருவாக்கியவர். "கதைச்சொல்லி" என இலக்கிய வட்டாரத்தில் அழைக்கப்படுபவர்.
பிறப்பு, கல்வி
கி.ரா என்றழைக்கப்படும் கி. ராஜநாராயணனின் இயற்பெயர் ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமனுஜ நாயக்கர். கி. ராஜநாராயணன் செப்டம்பர் 16, 1922 அன்று ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.
ஏழாம் வகுப்பு வரை படித்த கி.ரா. பின் விவசாயம் செய்தார். இயல்பில் விவசாயி ஆக இருந்த கி.ரா தன் பள்ளிக் கல்வியைப் பற்றிச் சொல்லும் போது, "நான் மழைக்குத் தான் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியவன். பள்ளியைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டேன்" என்கிறார்.
தனி வாழ்க்கை
கி. ராஜநாராயணன் கணபதி அம்மாளை செப்டம்பர் 6, 1954 அன்று திருமணம் செய்துக் கொண்டார். கி.ரா கணபதி அம்மாள் தம்பதியருக்கு திவாகரன், பிரபாகரன் இரண்டு மகன்கள். மருமகள்கள் முறையே விஜயலட்சுமி, நாச்சியார்.
விவசாய பின்னணியில் இருந்து வந்த கி.ரா. 1989 வரை இடைசெவலில் விவசாயம் செய்தார். 1989 இல் இருந்து பாண்டிசேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றினார். ஓய்விற்கு பின் மனைவி, மகன்களுடன் பாண்டிசேரியில் வசித்தார். அங்கே கணபதி அம்மாள் 2019 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
இடைசெவலில் எழுத்தாளர் கு. அழகிரிசாமி வீடு இருந்த அதே தெருவில் கி.ராவின் வீடும் இருந்தது. அவர்கள் இளமைக்கால நண்பர்கள். (தமிழகத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவர் சாகித்ய அகாதெமி விருது பெற்றது இடைசெவலில்தான்).
கி. ரா. மரபிசையில் ஆர்வமும், பயிற்சியும் கொண்டிருந்தார். கி.ரா. கோவில்களில் பாட்டு கச்சேரியும் செய்துள்ளார் என கு. அழகிரிசாமி அவருக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிய வருகிறது. கி.ரா. ஊரில் மணம் புரிந்திருந்த நாதஸ்வரக் கலைஞர் காருக்குறிச்சி அருணாசலம் அங்கு வரும்போதெல்லாம் உடனிருந்து இசை கேட்பார்[1].
இலக்கிய வாழ்க்கை
தொடக்கம்
கி.ரா எழுதி முதல் சிறுகதை "சொந்த சீப்பு". 1958 ஆம் ஆண்டு அவர் சரஸ்வதி இதழில் எழுதிய "மாயமான்" சிறுகதை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. அதன் பின் இவரது "கதவு" சிறுகதையும் பெரும் வாசகர் கவனம் பெற்றது. அக்கதையைப் பாராட்டி சுந்தர ராமசாமி, அக்கதை ஆண்டன் செகாவ் பாணியில் இருப்பதாகக் கடிதம் எழுதினார்.
சிறுகதைகள்
கி.ராவின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் பற்றி பேசுபவை. கரிசல் மண்ணையும், அதன் மனிதர்களையும் பற்றி எழுதிய கி.ரா , கதைகள் தொகுதிகளாக வெளிவந்தன. கதவு கி.ரா எழுதி வெளிவந்த முதல் தொகுதி
நாவல்கள்
கி.ராஜநாராயணனின் முதல் நாவல் கோபல்ல கிராமம் தமிழகத்தில் தெலுங்கு மக்கள் குடியேறி, நிலம் திருத்தி, ஒரு சமூகமாக அமைந்தமை பற்றிய நாவல். குலக்கதைகள், தொன்மங்கள், நாட்டார் வழக்குகள் ஆகியவற்றின் தொகுப்பாக அமைந்த சீரான நேர்வேகம் அற்ற நாவல் தமிழில் ஒரு புதிய தொடக்கமாக கருதப்படுகிறது. பின்னர் கோபல்லகிராமத்து மக்கள் என்னும் பெயரில் அதன் தொடர்ச்சியாக இன்னொரு நாவலையும் எழுதினார்.
அகராதி நூல்
கரிசல் வட்டாரத்தில் சிறப்பாக வழங்கும் தமிழ்ச் சொற்களுக்கான கரிசல் வட்டார வழக்கு அகராதியை உருவாக்கினார்.
நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
நாட்டுப்புற இலக்கியங்களைத் தேடி, ஆராய்ந்து ஒரு தொகுப்பாக வெளியிட்டார். அது "நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்" என்ற தலைப்பில் நூலாக அன்னம் வெளியீட்டில் வந்தது. நாட்டுப்புறப் பாலியல் கதைகளையும் தொகுத்துள்ளார்.
கடித இலக்கியம்
கி.ராஜநாராயணனுக்கும், கு.அழகிரிசாமிக்கும் டி.கே.சிதம்பரநாத முதலியார் மீது மிகப்பெரிய ஈடுபாடு இருந்தது. அவருடைய கடிதமெழுதும் பாணியை அவர்கள் கடைப்பிடித்தனர். தமிழ் கடித இலக்கியத்தில் அவர்கள் எழுதிய கடிதங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. கி.ராஜநாராயணன் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் கடிதம் எழுதும் வழக்கம் உடையவர். அவருக்கு சுந்தர ராமசாமி, கு. அழகிரிசாமி என மற்ற எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள் "அன்புள்ள கி.ரா.வுக்கு" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
இலக்கிய இடம்
கி. ராஜநாராயணனின் கதைக்களமும், கதை சொல்லும் முறையும் இலக்கியத்தில் தனித்த இடம் கொண்டவை. அவை யதார்த்தவாத கதைப் பாணியில் அமைந்தவை. ஆனால் கி.ரா. அதனுள் நாட்டார் கூறுகளையும் சேர்த்துக் கொண்டார். அவரது படைப்புகள் அவர் வாழ்ந்த இடைசெவல் கிராமத்தை கதைக்களமாக கொண்டவை. கி. ராஜநாராயணன் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தன் இலக்கிய முன்னோடிகள் நூலில் இனக்குழு அழகியலின் முன்னோடி எனக் குறிப்பிடுகிறார். தெலுங்கு நாயக்கர்களின் சமூக வரலாற்று, அன்றாட வாழ்க்கை பின்புலம் ஆகியவை கி.ராவின் ஆக்கங்களில் தீவிரமாக வெளிப்படுவதை நாம் காணலாம்.
கி. ரா வை இலக்கிய முன்னோடிகளில் ஒருவராக கருதும் விமர்சகர் ஜெயமோகன் தன் நூலில், "நாட்டுப்புற வாய்மொழிக் கதைசொல்லிகளின் வம்சத்தை சேர்ந்தவர் தான் கி. ராஜநாராயணன். அவரது மொழியும் கூறுமுறையும் அந்த அழகியல்புகளை கொண்டிருக்கின்றன" என்கிறார். மேலும், "கி. ரா வின் கதைக்கருக்கள் பல தெலுங்கு நாயக்கர் சமூகத்தின் தொன்மங்களில் இருந்து உருவானவை. ஆனால் தன் நாற்பது வயதுக்கு மேல் மார்க்ஸிய அரசியலில் ஆர்வம் கொண்ட பிறகுதான் எழுத ஆரம்பித்தார். அதாவது அதுவரை இனக்குழு மனநிலை அவரில் நேரியக்கமாகவே இருந்தது. மார்க்ஸிய அரசியல் கருத்துகளும் சமூக ஆய்வுக் கோட்பாடுகளுமே எதிரியக்கமாக அமைந்தன. இவை இரண்டும் உருவாக்கும் முரணியக்கமே அவரது இலக்கியம். தன் கதைகள் முழுக்க கி. ராஜநாராயணன் மார்க்ஸிய அழகியலைக் கரிசல் படுத்த முயன்றார்" என்கிறார்.
கி. ராவின் நாவல்களை முன்வைத்து எஸ். ராமகிருஷ்ணன், "வாய்மொழி வரலாற்றைப் பொது வரலாறு ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதை மாற்றித் தனது படைப்புகளின் வழியே வாய்மொழி வரலாற்றின் உண்மைகளை வரலாற்றின் சாட்சியங்களாக மாற்றினார். கி.ரா. 'கோபல்ல கிராமம்’, 'கோபல்லபுரத்து மக்கள்’ இரண்டு படைப்புகளும் இதற்கான சிறந்த உதாரணங்கள்" என்கிறார்.
மரணம்
கி. ராஜநாராயணன் மே 17, 2021 அன்று தனது 99 வயதில் பாண்டிசேரியில் இயற்கை எய்தினார். கி.ரா வின் உடல் அவரது சொந்த ஊரான இடைசெவலில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
விருதுகள்
- தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் விருது (1971)
- சாகித்ய அகாடமி விருது (1991)
- இலக்கிய சிந்தனை விருது (1979)
- தமிழக அரசின் 2021-ஆம் ஆண்டுக்கான உ.வே.சா விருது
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016-ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது
- பேரா. சுந்தரனார் விருது
- மா. சிதம்பரம் விருது (2008)
நூல்கள்
அகராதி
- கரிசல் வட்டார வழக்கு அகராதி
நாவல்கள்
- கோபல்லபுரத்து கிராமம்
- கோபல்லபுரத்து மக்கள் (1991, சாகித்திய அகாடமி விருது வென்றது)
- அந்தமான் நாயக்கர்
குறுநாவல்கள்
- கிடை
- பிஞ்சுகள்
சிறுகதை தொகுதிகள்
- கன்னிமை
- மின்னல்
- கோமதி
- நிலை நிறுத்தல்
- கதவு (1965)
- பேதை
- ஜீவன்
- நெருப்பு
- விளைவு
- பாரதமாதா
- கண்ணீர்
- வேட்டி
- மாயமான்
- புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்
- காதில் விழுந்த கதைகள்
- மிச்சக் கதைகள் (2021)
கட்டுரைகள்
- வயது வந்தவர்களுக்கு மட்டும்
- ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?
- புதுமைப்பித்தன்
- மாமலை ஜீவா
- இசை மகா சமுத்திரம்
- அழிந்து போன நந்தவனங்கள்
- கரிசல் காட்டுக் கடுதாசி
- மாந்தருள் ஒரு அன்னப்பறவை
- கிராமிய விளையாட்டுகள்
அனுபவக் கட்டுரைகள்
- கரிசல்கதைகள்
- கி.ரா- பக்கங்கள்
- கிராமியக் கதைகள்
- குழந்தைப் பருவக் கதைகள்
- கொத்தை பருத்தி
- பெண்கதைகள்
- பெண்மணம்
- கதை சொல்லி(2017)
தொகுதி
- நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
திரைப்படமாக்கப்பட்ட கதைகள்
- ஒருத்தி (கிடை என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு அம்சன் குமார் இயக்கிய திரைப்படம்)
- கரண்டு (கரண்டு என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு ஹரிகரன் இயக்கிய இந்தி திரைப்படம்)
வெளி இணைப்புகள்
- கி. ரா வலைத்தளம்
- கி. ரா. சிறுகதைகள்
- கி. ராஜநாராயணன் - இனக்குழு அழகியலின் முன்னோடி - ஜெயமோகன்
- கி. ராவுடன் கலந்துரையாடல்
- கி. ரா. நேர்காணல் - விகடன்
- கி. ரா 95
குறிப்புகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.