second review completed

சு. சிவகாமசுந்தரி

From Tamil Wiki
Revision as of 09:57, 23 May 2026 by Jayashree (talk | contribs)
முனைவர் சு. சிவகாமசுந்தரி

சு. சிவகாமசுந்தரி (முனைவர் சு. சிவகாமசுந்தரி; பேராசிரியர் சு. சிவகாமசுந்தரி; டாக்டர் சு. சிவகாமசுந்தரி) (ஜனவரி 13, 1936 - நவம்பர் 22, 2012) எழுத்தாளர், சொற்பொழிவாளர், வள்ளலார் சன்மார்க்க நெறியாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

சு. சிவகாமசுந்தரி, ஜனவரி 13, 1936 அன்று, தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறில், பழனிவேல் - தர்மாம்பாள் இணையருக்குப் பிறந்தார். தஞ்சாவூர், கிறித்தவப் பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். 1979-ல், சென்னைப் பல்கலைக்கழகத்தில், 'தமிழ் இலக்கியத்தில் மனையியல்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சு. சிவகாமசுந்தரி, கோவை அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். பேராசிரியர் மற்றும் தமிழ்த் துறைத் தலைவராக உயர்ந்தார். அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் தொகுப்பியல் துறைப் பேராசிரியர் மற்றும் பதிவாளராகப் பணியாற்றினார்.

1968-ல், தெ.பொ.மீனாட்சிசுந்தரன், பொள்ளாச்சி நா. மகாலிங்கம் தலைமையில், ஆராய்ச்சியாளர் சுப்பிரமணியனுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு அமுதவடிவு, அன்புமலர், அருள்செல்வி என மூன்று மகள்கள்.

பேராசிரியர் சு. சிவகாமசுந்தரி

இலக்கிய வாழ்க்கை

சு. சிவகாமசுந்தரி, இளம் வயது முதலே வள்ளலார் மீது மிகுந்தப் பற்றுக் கொண்டிருந்தார். திருவருட்பா முற்றோதல் செய்து சமய ஆர்வம் பெற்றார். தெ.பொ.மீ. மற்றும் ச. தண்டபாணி தேசிகர் மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றார். இதழ்களிலும் மலர்களிலும் வள்ளலார் குறித்தும், சைவ சமயம், திருவருட்பா குறித்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதினார்.

மாநில மற்றும் தேசிய அளவிலான கருத்தரங்குகள், மாநாடுகள், பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவுகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். மாணவர்கள் பலருக்கு இளமுனைவர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு நெறியாளராகச் செயல்பட்டார்.

சு. சிவகாமசுந்தரி 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். ஐந்து நூல்களைப் பதிப்பித்தார். சிவகாமசுந்தரியின் நூல்களில் சில பள்ளி மற்றும் பல்கலைக்கழக உரை நூல்களாகப் பயன்படுத்தப்பட்டன.

மேடையுரை

சு. சிவகாமசுந்தரி, பன்னாட்டு மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும், அரசு விழாக்களிலும், சமய நிகழ்வுகளிலும் பங்கேற்றுச் சொற்பொழிவாற்றினார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். ஆயிரத்துக்கு மேற்பட்ட சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

அமைப்புச் செயல்பாடுகள்

சு. சிவகாமசுந்தரி, வடலூர், திருஅருட்பா இசைச் சங்கத்தின் உருவாக்கம் முதல் (1985) தனது இறுதிக் காலம் வரை, அதன் நிர்வாகச் செயலர் பொறுப்பில் செயலாற்றினார். நூற்றுக் கணக்கான இசைக் கலைஞர்களுக்கு திருஅருட்பாவை அறிமுகப்படுத்தி, ஊக்குவித்தார்.

பொறுப்பு

  • பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்
  • திருஅருட்பா இசைச் சங்க நிர்வாகச் செயலாளர்

விருதுகள்/பரிசு

  • நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் நினைவுப் பேரவையின் முதல் பரிசு - 1954
  • டாக்டர் இராமநாதன் நினைவுப் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு - 1955
  • மாநில கல்லூரிகளுக்கு இடையிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு - 1956
  • கலைவிழா மற்றும் கலை அரங்க நடிப்பிற்கான அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதல் பரிசு - 1956, 1957
  • கல்கத்தா தமிழ் மன்றம் வழங்கிய 'செந்தமிழ்ச் செல்வி பட்டம் - 1965
  • கோவை நகர சன்மார்க்கச் சங்கத்தின் 'அருட் பாமணி' பட்டம் - 1974
  • அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கிடையிலான பல்வேறு போட்டிகளில் பல்வேறு பரிசுகள் - 1965 -1984
  • பேச்சாற்றலுக்கும், நடிப்பாற்றலுக்கும் பல பொற்பதக்கங்கள்
  • கோவை நன்னெறிக் கழகத் தின் 'தமிழறிஞர்' பட்டம் - 1985
  • கோவை ரோட்டரி கிளப்பின் 'சிறந்த பெண்மணி' விருது
  • கோவை லயன்ஸ் கிளப்பின் 'நல்லாசிரியர்' விருது
  • தமிழக அரசின் திருவள்ளுவர் விருது - 1995
  • அமெரிக்கா, இல்லினாய்ஸ், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை விருது - 1995
  • தமிழக அரசின் ராஜராஜன் விருது - 2001
  • தமிழக அரசின் கலைமாமணி விருது - 2005

மறைவு

சு. சிவகாமசுந்தரி, நவம்பர் 22, 2012 அன்று காலமானார்.

மதிப்பீடு

சு. சிவகாமசுந்தரி, தமிழறிஞர். கல்வியாளர். வள்ளலாரின் ஆன்ம நேய அருட்கொள்கையினை உலகம் முழுமைக்கும் எடுத்துச் சென்றவர். கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.

"ஜீவா மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் சென்ற கம்பனையும் பாரதியையும் தமிழிலக்கிய மேடைகளில் கனலென முழங்கி,அதன்வழியே தன் மனதில் நீறு பூத்த நெருப்பாயிருந்த சமத்துவக் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டுசென்ற வண்ணம் இருந்தார் முனைவர் சு.சிவகாமசுந்தரி." என்று மரபின்மைந்தன் மு. முத்தையா மதிப்பிட்டார்.

நூல்கள்

  • வள்ளலார்
  • தமிழகப் பெண்கள் வாழ்வும் வளர்ச்சியும்
  • அறம் வெல்லும்
  • புகழ் கம்பன்
  • மனை இயல்
  • சங்க இலக்கிய விளையாட்டு களஞ்சியம்
  • வள்ளலாரின் சமுதாய மறுமலர்ச்சி சிந்தனைகள்
  • நேற்று நடந்தது (நாடகம்)
  • நீலக் குறிப்பேடு (மொழியாக்கம்)
  • பாரதிக்கு நிகர் பாரதியே
  • பெண்களும் பிரச்சினைகளும்
  • பெண்மையும் வீரமும்

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.