under review

தைக்கா சாகிபு மாலை

From Tamil Wiki
Revision as of 17:40, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தைக்கா சாகிபு மாலை (பதிப்பு: 1999) இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் கா. அப்துல்கபூர்

வெளியீடு

தைக்கா சாகிபு மாலை நூல், கா. அப்துல்கபூர் இயற்றிய 'பாமாலை - 18' என்ற இஸ்லாமிய மாலை இலக்கியங்களின் தொகுப்பு நூலில், பிற மாலை இலக்கிய நூல்களுடன் இணைந்து இடம்பெற்றது. இந்நூலை தக்கலையில் உள்ள பொன்மொழிப் பதிப்பகம், 1999-ல் வெளியிட்டது.

நூல் அமைப்பு

தைக்கா சாகிபு மாலையில் எட்டு சீர்களைக் கொண்ட, இரண்டு அடிகளால் ஆன 41 கண்ணிகள் இடம் பெற்றன. இம்மாலைகள் முழுவதும் 'தைக்கா சாகிபே' என்ற ஈற்றுச் சொல்லுடன் நிறைவடைகின்றன.

உள்ளடக்கம்

தைக்கா சாகிபு மாலை, தமிழ்நாட்டின் காயல்பட்டினத்தில் தோன்றி மறைந்த தைக்கா சாகிபு என்ற இறைநேசரின் வாழ்வையும், உயர்பண்பு நலனையும், அவரது நற்குணங்களையும் விளக்கிக் கூறும் நூல்.

அப்துல் காதிர் என்ற இயற்பெயரைக் கொண்ட தைக்கா சாகிபு, நபிகள் நாயகத்தின் தோழரும், மாமனாரும், இஸ்லாமிய முதல் ஆட்சியாளராகப் (கலீபாவாக) பொறுப்பேற்றவருமான அபூபக்கர் சித்திக்கின் இருபத்தேழாம் தலைமுறையில் தோன்றியவர். இளம் வயது முதலே பிறருக்கு உதவுவதைத் தனது கடமையாகக் கொண்டு வாழ்ந்தவர். இறையருள் பெற்ற இஸ்லாமிய ஞானிகளுள் ஒருவர்.

பாடல்

அருளுமன்பும் நிறைந்திருக்கும் ஆதி பெரியோன் இறையவனின்
திருவிருக்கும் காயிரூரில் திகழும் தைக்கா சாகிபே!

தனை மகிழ்ந்தே ஈன்றெடுத்த தாய்வயிற்றுள் உடன்பிறந்தோர்
அனைவருமே அவ்லியாவாய் அமையும் தைக்கா சாகிபே!

நேசத்தந்தை அடியமர்ந்து நேரிற் பெற்ற தீன்பயிற்சிப்
பாசத்தாலே பயனடைந்த பக்தர் தைக்கா சாகிபே!

பகலெல்லாம் நோன்பு நோற்றும் படுக்கும் இரவில் விழித்திருந்தும்
மிகவணக்கம் புரிந்து வந்த மேன்மை தைக்கா சாகிபே!

காயல்நாகூர் நெடும் பயணம் கால்நடையாய்ச் சென்றுவந்தே
தூய வாழ்வின் உறைவிடமாய்த் துலங்கும் தைக்கா சாகிபே!

மதிப்பீடு

தைக்கா சாகிபு மாலை, கா. அப்துல்கபூர் இயற்றிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. காயல்பட்டினத்தில் தோன்றி, வாழ்ந்து மறைந்த இஸ்லாமிய இறைநேசச் செல்வரான தைக்கா சாகிப் மீது இனிய, எளிய தமிழில் பாடப்பட்டது. தைக்கா சாகிபு மீது பாடப்பட்ட ஒரே மாலை இலக்கிய நூலாக இம்மாலை நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • பாமாலை 18, கா. அப்துல்கபூர், பொன்மொழி பதிப்பகம், தக்கலை, முதல் பதிப்பு: 1999


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-May-2025, 00:28:52 IST