first review completed

சக்ரவர்த்தினி

From Tamil Wiki
சக்ரவர்த்தினி இதழ் முகப்பு (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

சக்ரவர்த்தினி (இதழ்) பெண்களுக்கென்றே ஆரம்பிக்கப்பட்ட இதழ். மாத இதழாக வெளிவந்தது. இதில் சி. சுப்ரமணிய பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றினார்.

வரலாறு

சக்ரவர்த்தினி ஆகஸ்ட் 1905 முதல் வெளியானது. இதன் உரிமையாளர் வைத்தியநாத ஐயர். இவ்விதழில் சி.சுப்ரமணிய பாரதியார் முதல் பதின்மூன்று மாதங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பாரதியாருக்குப் பின் வரககவி அ. சுப்பிரமணிய பாரதி சக்ரவர்த்தினி இதழின் ஆசிரியராக இருந்தார். எம்.எஸ். நடேச ஐயரும் சில காலம் ஆசிரியராக இருந்தார். பி.எஸ். அப்புசாமி ஐயர் ஜனவரி 1912 வரை சக்ரவர்த்தினி இதழை நடத்தினார். கோ. வடிவேலு செட்டியார் பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டார். 1916-க்குப் பின் சக்ரவர்த்தினி இதழ் நின்றது.

பாரதியாரும் சக்ரவர்த்தினியும்

பாரதியாருக்கு முன்பு அமிர்தவசனி, மகாராணி, சுகுணகுணபோதினி, மாதர் மித்திரி, பெண்மதிபோதினி, மாதர் மனோரஞ்சினி போன்ற பெண்களுக்கான இதழ்கள் வெளிவந்தன. அவருடைய காலகட்டத்தில் பெண்கல்வி, தமிழ்மாது முதலிய இதழ்கள் வந்துள்ளன. அவற்றில் இருந்து மாறுபட்டு பெண்களுக்காக ஓர் இதழை நடத்தவேண்டும் என எண்ணியமைக்கான காரணத்தை பாரதியார் இவ்வாறு சக்ரவர்த்தினி முதல் இதழில் சொல்கிறார் ”அறிவின்மை என்னும் பெருங்கடலில் தத்தளிக்கும் நமது பதினாயிரக் கணக்கான பெண்களைக் கரைசேர்ப்பதற்கும்ச் சில பெருங்கப்பல்கள் இருந்தபோதிலும், யாம் கொண்டுவரும் சிற்றோடம் அவசியமில்லை என்று யாவரே கூறுவார்? (பாரதியார், சக்ரவர்த்தினி, 1905 ஆகஸ்டு)

அக்கால இதழ்களில் பெண்களுக்கு மரபான ஒழுக்கநெறிகளை உபதேசிப்பது, நோன்புகள் மற்றும் மதச்செய்திகளைச் சொல்வது போன்றவையே நிறைந்திருக்கும். தேசியச் செய்திகளுக்கும், பெண்கல்வி பெண்விடுதலை போன்றவற்றுக்கும் இடமளிக்கும் ஓர் இதழை தொடங்குவதே பாரதியின் நோக்கம். வாழ்க்கை வரலாறு சுவையற்றதாக உள்ளது என்றும், பெண்களுக்கு உகந்ததாக இல்லை என்றும் ஒரு பெண்மணி குறை தெரிவித்தபோது, ”இந்த நிமிடமே மாதர்களுக்கு அர்த்தமாகக் கூடிய விஷயங்களை, அவர்களுக்கு அர்த்தமாகக் கூடிய நடையிலே எழுத ஆரம்பிக்க வேண்டுமென்று நிச்சயித்துவிட்டேன். (சீனி. விசுவநாதன், சக்ரவர்த்தினி கட்டுரைகள் (தொகுப்பு), ப.70). என பாரதி சொன்னார்.

பாரதியார் சக்ரவர்த்தினியில் எழுதிய கட்டுரைகள் சீனி விசுவநாதனாலும் ரா.பத்மனாபனாலும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன.

உள்ளடக்கம்

கவிதை, கதை, நாடகம், மொழிபெயர்ப்பு, நூல் மதிப்புரை, பொது வர்த்தமானங்கள், சமாசாரக் குறிப்புகள்(துணுக்குகள்) என இலக்கியத்தின் பல பிரிவுகளுக்கு சக்ரவர்த்தினி இடமளித்தது.

சக்ரவர்த்தினி இதழில் பாரதியார் ‘ஷெல்லிதாஸ்’ என்ற புனைப் பெயரில் எழுதிய துளஸீபாயி எனும் சிறுகதை நவம்பர் 1905 தொடங்கி வளிவந்தது. பாரதியார் குறிப்பிடத்தகுந்த சில தலையங்கங்களை இந்த மாத இதழில் எழுதினார். உ.வே.சா வைப் பாராட்டி பாரதியார் எழுதிய வாழ்த்துச் செய்யுள் சக்ரவர்த்தினி இதழில் வெளியாகியுள்ளது. 1906 பிப்ரவரியில் பாரதியார் ‘வந்தேமாதரம்’ என்ற தலைப்பில் எழுதிய பாடல் சக்ரவர்த்தினி இதழில் வெளிவந்தது.

1906 முதல் ‘சுந்தரி’ என்ற தலைப்பில் ‘ஜானகி’ என்பவர் எழுதிய தொடர் சக்ரவர்த்தினி இதழில் வெளிவந்தது. ‘விஜயலட்சுமி’ என்ற தொடரை ‘தேவகுஞ்சரி அம்மாள்’ எழுதினார். ‘மணிவாசகன்’ தொடரை தெ. கிருஷ்ணசாமிப் பாவலர் எழுதினார். ஆர்.எஸ். சுப்புலட்சுமி அம்மாள் எழுதிய ‘பார்வதி சோபனம்’ என்ற பாடல் தொடர் வெளியானது. ஷேக்ஸ்பியரின் ’ஹேம்லட்’ தமிழில் கே. வெங்கட்ராம ஐயரால் மொழிபெயர்க்கப்பட்டுத் தொடராக வந்தது. பானுமதி என்ற தொடரை வரககவி அ. சுப்பிரமணிய பாரதியார் சக்ரவர்த்தினி இதழில் எழுதினார்.

இலக்கிய இடம்

சக்ரவர்த்தினி பெண்ணின் பெருமை பேசும் இதழாக வெளிவந்தது. “தமிழ் நாட்டு மாதர்களின் அபிவிருத்தியே நோக்கமாக வெளியிடப்படும் மாதாந்திரப் பத்திரிக்கை” என்ற குறிப்புடன் வெளியான இதழ் .சக்ரவர்த்தினி . ‘பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு’ என்ற கவிதையுடன் வெளிவந்தது. சென்றநூற்றாண்டின் தேசியமறுமலர்ச்சி சார்ந்த இலட்சியவாத நோக்கத்துடன் பெண்கல்வி, பெண்களி சமூக இடம், அவர்களின் சிந்தனைச் சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்தும் இதழாக வெளிவந்த சக்ரவர்த்தினிக்கு தமிழ் சிந்தனைக்களத்தில் முன்னோடி இதழ் என்னும் இடம் உண்டு.

இதழில் எழுதியவர்கள்

பெண் எழுத்தாளர்கள்
ஆண் எழுத்தாளர்கள்

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories. }