first review completed

சுப்ரமணியதாஸ்

From Tamil Wiki
Revision as of 17:52, 28 April 2022 by Tamizhkalai (talk | contribs)

சுப்ரமணியதாஸ் (ஜனவரி 1878-அக்டோபர் 29,1951) (திருக்குறள் அவதானி சுப்ரமணியதாஸ்) என்ற இவர் திருக்குறள் அறிஞராகவும், திருக்குறள் அஷ்டாவதானம் செய்தவராகவும் அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

சுப்ரமணியதாஸ் தற்போதைய கன்யாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரம் என்ற ஊரில் ஜனவரி, 1878 அன்று பசுங்கிளித்தேவர்-ஆச்சியம்மாள் இணையருக்குப்பிறந்தார்.

இவர் திண்ணைப்பள்ளியில் நான்காம் வகுப்பு வரை படித்தார். பின்னர் மற்போர் பயின்று, நாடகத்துறையில் சிலகாலம் இருந்தார். அதன்பின் உழவுத்தொழிலில் ஈடுபட்டு தன்னுடைய 30-ஆவது வயதில் வடசேரி ராமசுப்பு என்பவரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத்தேர்ந்தார். பின்னர் நாகர்கோவிலில் மார்க்கண்டேயர் என்பவரிடம் திருக்குறள் பாடம் கேட்டார். இதனால் ஊன் உணவைக் கைவிட்டார்.

இவர் கோட்டாறு சதாவதானி செய்குத்தம்பிப் பாவலரிடம் திருக்குறளை மறுமுறை பாடங்கேட்டார்.

தனிவாழ்க்கை

இவருக்கு இரு மனைவியர். இவர்களுக்கு ராமதாஸ் என்ற ஒரு மகன் பிறந்தார். அவர் தன்னுடைய 12-வது வயதில் திருக்குறளை அவதானம் செய்தார்.

பங்களிப்பு

இவர் திருக்குறளை தமிழகமெங்கும் பரப்ப ஆர்வம் கொண்டு அட்டாவதானம் பயின்று, 1920 -ஆம் ஆண்டு சென்னையில் விபுலானந்த அடிகள் மற்றும் டாக்டர். சி. நடேசமுதலியார் ஆகியோரின் தலைமையில் பல இடங்களில் அட்டாவதானம் செய்தார். பின்னர் 1933-ஆம் ஆண்டு சென்னையில் உ.வே. சாமிநாதயைர், டி.கே. சிதம்பரநாத முதலியார், கோ. வடிவேலுச் செட்டியார், கா. நமச்சிவாய முதலியார், திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், மணி. கோடிஸ்வர முதலியார் போன்ற தமிழறிஞர்கள் முன்னிலையில் திருக்குறள் அட்டாவதானம் செய்தார்.

இவர் 1949-ல் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தலைமையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் அவதானம் செய்தார். இறுதியில் பிப்ரவரி, 1951-ல் கோகலே மண்டபத்தில் தெ.பொ. மீனாட்சிசுந்தரம் தலைமையில் அவதானம் செய்தார்.

இவர் கோயம்புத்தூர், தென்காசி, காரைக்குடி ஆகிய ஊர்களிலும் அவதானம் செய்து திருக்குறளைப் பரப்பினார்.

இவர் இயற்றிய நூல்கள்

  • வள்ளுவர் வகுத்த அரசியல்

மறைவு

இவர் அக்டோபர் 29, 1951 அன்று தனது 73-ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

உசாத்துணை

  • தமிழ்ப் புலவர் வரிசை ஒன்பதாம் புத்தகம், சு அ இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1955


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.