ஜெகசிற்பியன்
ஜெகசிற்பியன் (ஜூன் 19, 1925 - மே 26, 1978) 1950-1980 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த எழுத்தாளார். வாரப் பத்திரிகைகளில் பொதுவாசிப்புக்காக நிறைய எழுதினார். இன்றும் அவரது வரலாற்று நாவல்கள் நினைவு கூரப்படுகின்றன.
பிறப்பு, இளமை
ஜூன் 19, 1925-ல் மயிலாடுதுறையில், பொன்னப்பா-எலிசபெத் தம்பதியருக்குப் பிறந்தார். கிறிஸ்தவப்பெயர் ஜெர்வாஸ். வீட்டுப்பெயர் பாலையன். தொழிற்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்று, பிறகு சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்றார். ஓவியக் கல்லூரியில் இவருடன் பயின்றவர் பின்னாளில் பிரபலமான ஓவியர் "மணியம்".
தனி வாழ்க்கை
முழு நேர எழுத்தாளர். எழுத்து மூலம் அவருக்கு பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை என்று அமுதசுரபி இதழின் ஆசிரியராக இருந்த விக்கிரமன் கூறுகிறார். ஆரம்ப நாட்களில் வருவாய்க்காக துப்பறியும் கதைகளும் எழுதினாராம்.
ஜெகசிற்பியனின் மனைவி பெயர் தவசீலி. அஜந்தா, வசீகரி, ஏழிசைவல்லபி என்று மூன்று மகள்கள்.
இலக்கிய வாழ்க்கை
தொடக்க காலம்
ஜெகசிற்பியனின் முதல் சிறுகதையான சுந்தரனின் சோபனம் ஜூன் ,1939-ல் "நல்லாயன்' என்ற இதழில் வெளிவந்தது. ஆரம்ப காலத்தில் பாலையா, தஞ்சை ஜெர்வாஸ், மாயவரம் ஜெர்வாஸ் என்ற பெயர்களில் புதுவையில் இருந்து வெளிவந்த சர்வவியாபி இதழிலும் மதுரையில் இருந்து வெளிவந்த சத்தியநாதன் இதழிலும் அவரது சிறுகதைகள் வெளிவந்தன.
புனைபெயர்
ஜெர்வாஸ், பாலையா ஆகிய பெயர்களில் எழுதிக்கொண்டிருந்தபோது நல்ல புனைபெயரைத் தேடிக் கொண்டிருந்தார். கவியோகி சுத்தானந்த பாரதியார், தன்னுடைய புதினம் ஒன்றில் ஷேக்ஸ்பியரின் பெயரை 'செகப்பிரியர்' என்று தமிழ்ப்படுத்தி இருந்தார். அந்தப் பெயரையே 'ஜெகசிற்பியன்" என்று மாற்றி தனது புனைபெயராக்கிக் கொண்டார். "நான் இந்த உலகத்தில் என் உயிரை விட மேலாக நேசிப்பது இரண்டு. ஒன்று, எனது அருமைப் பிள்ளைகள். மற்றொன்று, எனது அழகான புனைபெயர்" என்று குறிப்பிடுகிறார்.
சிறுகதைகள்
1957ல் நரிக்குறத்தி என்னும் சிறுகதைக்காக ஆனந்தவிகடன் வெள்ளிவிழாப்போட்டியில் பரிசுபெற்றார். அந்திக்குள் ஊர் திரும்பவேண்டும் என்னும் நெறி கொண்ட நரிக்குறவர் சமூகத்து புதுமணப்பெண் ஒருத்தி ஆற்றில் வெள்ளம் வந்தமையால் திரும்ப முடியாமல் போனதைச் சித்தரிக்கும் அச்சிறுகதை அன்று இலக்கியவட்டாரத்திலும் பேசப்பட்டது (இணையநூலகம்) 1958-ல் ஜெகசிற்பியன் எழுதிய அக்கினி வீணை என்ற சிறுகதைத் தொகுதி மீ.ப.சோமு முன்னுரையுடன் வெளிவந்ததது. நரிக்குறத்தி சிறுகதைத் தொகுதிக்கு கி. வா. ஜகந்நாதன் முன்னுரை எழுதினார். ஜெகசிற்பியன் எழுதிய 154 சிறுகதைகள், 12 தொகுதிகளாகவும், இரு குறுநாவல்கள் இரு தொகுதிகளாகவும் பதினான்கு தொகுதிகள் வெளிவந்துள்ளன
நாவல்கள்
1948-ல் "ஏழையின் பரிசு" என்ற தனது முதலாவது முதல் நாவலை எழுதினார். 'காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய போட்டியில், "கொம்புத் தேன்" என்ற குறுநாவலை முதல் பரிசுக்குரிய படைப்பாக புதுமைப்பித்தன் தேர்ந்தெடுத்தார். 1957-ல் ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழாப் போட்டியில் இவருடைய திருச்சிற்றம்பலம் என்ற வரலாற்று நாவலும், 'நரிக்குறத்தி'[1] என்ற சிறுகதையும் முதல் பரிசுகள் பெற்றன. ஜெகசிற்பியன் சென்னை நகரத்து சேரிப்பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு நாவல்களை எழுதியிருக்கிறார். அப்பகுதியின் பேச்சுமொழியை எழுதியவர்களில் ஒருவர். ஜெகசிற்பியனின் ஜீவகீதம் அவற்றில் புகழ்பெற்றது. 1965 ஜனவரி 17 முதல் கல்கி இதழில் எழுதப்பட்ட ஜீவகீதம் பிற இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது. ஜனகணமன என்னும் பாடல்மேல் ஒரு அடித்தள மனிதனுக்கு இருக்கும் பற்றை விவரிக்கும் இந்நாவல் தேசிய அரசியல் பார்வைக்காக பாராட்டப்பட்ட ஒன்று. ஜெகசிற்பியனின் ‘இன்று போய் நாளை வரும்’ தொழிற்சங்க வாழ்க்கைப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். மலேசியாவின் தமிழ் நேசன் நாளிதழில் ஜெகசிற்பியன் எழுதிய 'மண்ணின் குரல்' நாவல் கிராமங்கள் கைவிடப்படுவதன் சித்திரத்தை அளிப்பது.
ஜெகசிற்பியன் முதன்மையாக வரலாற்று நாவல்களுக்காக நினைவுகூரப்படுகிறார். அவருடைய பத்தினிக்கோட்டம், ஆலவாய் அழகன் ஆகிய நாவல்கள் வெளிவந்தபோது மிகவும் ரசிக்கப்பட்டவை. ஜெகசிற்பியன் நாவலுக்காக அலங்காரமாகத் தாவிச்செல்லும் ஒரு நடையை உருவாக்கிக்கொண்டார்.
நாடகம்
ஜெகசிற்பியன் சதுரங்க சாணக்கியன் என்னும் முழுநீள நாடகத்தை எழுதினார். குறுநாடகங்களையும் வானொலிக்காக ப ஒலி நாடகங்களையும் ர்ழுதி இருக்கிறார்.
விருதுகள்
- "கொம்புத் தேன்" என்ற குறுநாவலுக்காக 'காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசு; தேர்ந்தெடுத்தவர் புதுமைப்பித்தன்
- "திருச்சிற்றம்பலம்" நாவலுக்காக ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா வரலாற்று நாவல் போட்டியில் முதல் பரிசு (1957)
- "நரிக்குறத்தி"[1] என்ற சிறுகதைக்காக நாவலுக்காக ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (1957)
- பாரதபுத்திரன் சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு (1979-1981)
- தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திரு.வி.க. பரிசு (மறைவுக்குப் பின்)
இலக்கியக் குறிப்புகள்
ஜெகசிற்பியனின் செயற்கையான அணிநடை சிற்றிதழ்சார் இலக்கிய உலகில் பகடி செய்யப்பட்டது. நகுபோலியன் எழுதிய மழநாட்டு மகுடம் என்னும் சிறுகதை ஜெகசிற்பியனின் நடையை பகடி செய்வது. கணையாழி இதழில் வெளிவந்தது.
மறைவு
ஜெகசிற்பியன் மே 26, 1978-ல் காலமானார். அப்போது அவருக்கு 53 வயது. அவருடைய ஊமத்தைப்பூக்கள் என்னும் சிறுகதை குமுதம் இதழில் தொடராக வெளிவந்துகொண்டிருந்தது.
இலக்கிய இடம்
ஜெகசிற்பியன் பொதுவாசிப்புக்காக வாரப் பத்திரிகைகளில் எழுதினார். அவரது வரலாற்று நாவல்கள் எழுதப்பட்ட காலத்தில் வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தன. வாரப் பத்திரிகைகளில் நட்சத்திர எழுத்தாளராக சில காலமேனும் திகழ்ந்திருக்கிறார். அவரது சமூக நாவல்களில் பல அன்றைய லட்சியவாத, காந்தீய நோக்கில எழுதப்பட்டவை. தி.ஜ.ரங்கநாதன் “ஜெகசிற்பியன் கதைகளில் உள்ளுறையும் ஜீவன் ஒன்று இருக்கிறது. அது நம் உள்ளத்தோடு உறவுகொண்டு விடுகிறது. அதை நாம் எடுத்துரைப்பது சாத்தியமல்ல. ஆயினும் பல அம்சலட்சணங்கள் சார்ந்த சமூகசோபை ஒன்று வெளிப்படப் புலப்படும்’ என்று குறிப்பிடுகிறார்.
விமர்சகர் ஜெயமோகன் அவரது 'ஆலவாய் அழகன்' நாவலை பொதுவாசிப்புக்கான வரலாற்று மிகுகற்பனை நாவல்களின் (Historical romances) பட்டியலிலும், 'பத்தினிக் கோட்டம்' மற்றும் 'திருச்சிற்றம்பலம்' நாவல்களை பொதுவாசிப்புக்கான வரலாற்று மிகுகற்பனை நாவல்களின் இரண்டாம் பட்டியலிலும் வைக்கிறார்.
படைப்புகள்
சிறுகதைத் தொகுதிகள்
154 சிறுகதைகளை எழுதி இருக்கிறார். இவை 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டன.
- அக்கினி வீணை (1958)
- ஊமைக்குயில் (1960)
- நொண்டிப் பிள்ளையர் (1961)
- நரிக்குறத்தி (1962)
- ஞானக்கன்று (1963)
- ஒரு நாளும் முப்பது வருடங்களும் (இரு குறுநாவல்கள்; 1962)
- இன்ப அரும்பு (1964)
- காகித நட்சத்திரம் (1966)
- கடிகாரச் சித்தர் (1967)
- மதுரபாவம் (1967)
- நிழலின் கற்பு (1969)
- அஜநயனம் (1972)
- ஒரு பாரதபுத்திரன் (1974)
சமூக நாவல்கள்
- ஏழ்மையின் பரிசு (1948)
- சாவின் முத்தம் (1949)
- கொம்புத் தேன் (1951)
- தேவதரிசனம் (1962)
- மண்ணின் குரல் (1964)
- ஜீவகீதம் (1966)
- காவல் தெய்வம் (1967)
- மோகமந்திரம் (1973)
- ஞானக்குயில் (1973)
- கிளிஞ்சல் கோபுரம் (1977)
- ஆறாவது தாகம் (1977)
- காணக் கிடைக்காத தங்கம் (1977)
- இனிய நெஞ்சம் (1978)
- சொர்க்கத்தின் நிழல் (1978)
- இன்று போய் நாளை வரும் (1979)
- இந்திர தனுசு (1979)
வரலாற்று நாவல்கள்
- மதுராந்தகி (1955)
- நந்திவர்மன் காதலி (1958)
- நாயகி நற்சோணை (1959)
- ஆலவாயழகன் (1960)
- மகரயாழ் மங்கை (1961)
- மாறம்பாவை (1964)
- பத்தினிக் கோட்டம் (பாகம் 1; 1964)
- பத்தினிக் கோட்டம் (பாகம் 2; 1976)
- சந்தனத் திலகம் (1969)
- திருச்சிற்றம்பலம் (1974)
- கோமகள் கோவளை (1976)
நாடகங்கள்
- சதுரங்க சாணக்கியன்
- நடை ஓவியம் (ஓரங்க நாடகத் தொகுப்பு)
திரைப்படங்கள்
- கொஞ்சும் சலங்கை (1961) திரைப்படத்துக்கு வசனம்
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
- 'ஜீவகீதம்' நாவல் பதின்மூன்று இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
- ஜெகசிற்பியனின் 30 சிறுகதைகள் ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், டச்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
உசாத்துணை
- விக்கிரமன் கட்டுரை
- தென்றல் இதழில் ஜெகசிற்பியன் பற்றி
- புனைப்பெயரும் முதல்கதையும் இணையநூலகம்
- எழுத்துலகச் சிற்பி ஜெகசிற்பியன் தினமணி
- ஜெகசிற்பியன் பற்றி ஜீவி பதிவுகள் இணையதளம்
இணைப்புகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.