இரட்டைமணிமாலை
இரட்டைமணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மணிகளைக் கோர்ப்பது போல் வெண்பா, கட்டளைக் கலித்துறை அல்லது வெண்பா, விருத்தப்பா என்னும் பாவகைகளால் அந்தாதியாக [1]. மொத்தம் இருபது பாடல்களைக் கொண்டிருக்கும்.
வரலாறு
முதல் இரட்டைமணிமாலையைப் பாடியவர் காரைக்காலம்மையார் (பொ.யு. 4 ஆல்லது 5-ம் நூற்றாண்டு). அவர் பாடிய திருவிரட்டை மணிமாலை வெண்பாவும், கட்டளைக் கலித்துறையுமாய் அமைந்துள்ளது. இருவிதப் பாவகையால் இயற்றப்படும் இரட்டைமணிமாலை என்னும் இலக்கிய வகைக்கு திருவிரட்டைமணிமாலையே முன்னோடியாகக் கருதப்படுகிறது. கட்டளைக் கலித்துறை யாப்பை முதன்முதல் கையாண்டவரும் காரைக்கால் அம்மையே என்று கருதப்படுகிறார்.
அடுத்து எழுதப்பட்டவை கபிலதேவ நாயனார் பாடிய மூத்தநாயனார் திருவிரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை. அவற்றிற்குப் பின்னர் பல இரட்டை மணிமாலைகள் தோன்றின.
இலக்கணக் குறிப்புகள்
"இரட்டைமணிமாலையென்பது பவளமும் முத்துமாகிய இருவேறு மணிகள் மிடைந்தமாலை போல வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் அந்தாதியாக அமையவும், உறும் முதலும் மண்டலிக்கவும் இருபது செய்யுட்களாற் பாடப்பெறும் பிரபந்தம்" என்று உ.வே. சாமிநாதையர் குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டில்(பக்கம் 125) குறிப்பிட்டுள்ளார்.
இரட்டைமணிமாலையின் இலக்கணத்தை விளக்கும் பாட்டியல் நூல்கள்:
- பன்னிரு பாட்டியல்
- வெண்பாப் பாட்டியல்
- நவநீதப் பாட்டியல்
- சிதம்பரப் பாட்டியல்
- இலக்கண விளக்கப் பாட்டியல்
- பிரபந்த மரபியல்
- பிரபந்த தீபம்
- பிரபந்த தீபிகை
- தொன்னூல் விளக்கம்
- முத்துவீரியம்
- சாமிநாதம்
எடுத்துக்காட்டு
திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை (நம்பியாண்டார் நம்பி)
நேரிசை வெண்பா
களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்
ஒளிறும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்
பின்நாரை ஊர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன். (5)
கட்டளைக் கலித்துறை
மகத்தினில் வானவர் பல்கண் சிரம்தோள் நெரித்தருளும்
சுகத்தினில் நீள்பொழில் நாரைப் பதியுட் கரன்மகற்கு
முகத்தது கையந்தக் கையது மூக்கந்த மூக்கதனின்
அகத்தது வாய்அந்த வாயது போலும் அடுமருப்பே (6)
இரட்டைமணிமாலைகள் சில
- திரு இரட்டைமணிமாலை
- மூத்தநாயனார் திருஇரட்டை மணிமாலை
- சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை
- பழனி இரட்டைமணிமாலை
- களக்காட்டுச் சத்யவாசகர் இரட்டைமணிமாலை
- தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை (குமரகுருபரர்)
- சிவகாமியம்மை இரட்டைமணிமாலை
- திருநாரையூர்ப் பிள்ளையார் இரட்டைமணிமாலை (நம்பியாண்டார்நம்பி)
- கேசவப் பெருமாள் இரட்டைமணிமாலை
- சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை
- கொக்குவில் சித்திவிநாயகர் இரட்டைமணி மாலை
- நாகைத்திருவிரட்டை மணிமாலை
- வண்ணைத் திருமகள் இரட்டைமணிமாலை
- விரகந்தி விநாயகர் இரட்டைமணிமாலை
- பாற்கரசேதுபதி இரட்டைமணிமாலை
- மதுரை மீனாட்சியம்மை ஈரட்டைமணிமாலை
துணைநூற்பட்டி
- தொல்காப்பியம் – கழகப் பதிப்பு, 1998
- திருவிரட்டைமணிமாலை - காசிமடத்துப் பதிப்பு, 1963
- பெரியபுராணம் - காசிமடத்துப் பதிப்பு, 1963
- குமரகுருபரர் பிரபந்தத்திரட்டு - காசிமடத்துப் பதிப்பு, ஜூன் 01, 1961
- மூத்தநாயனார் திருவிரட்டைமணிமாலை - 11-ம் திருமுறை - காசிமடத்துப் பதிப்பு
- சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை - 11-ம் திருமுறை - காசிமடத்துப் பதிப்பு
- திருநாறையூர். விநாயகர் திருவிரட்டைமணிமாலை - 11-ம் திருமுறை - காசிமடத்துப் பதிப்பு
- மதுரை மீனாட்சியம்மை விநாயகர் திருவிரட்டைமணிமாலை - குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு - காசிமடத்துப் பதிப்பு, ஜூன் 01, 1961
- தில்லைச் சிவகாமியம்மைத் திருவிரட்டைமணிமாலை - குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு - காசிமடத்துப் பதிப்பு, ஜூன் 01, 1961
- பன்னிரு பாட்டியல் - கழகப் பதிப்பு, 1970
- வெண்பாப்பாட்டியல் - கழகப் பதிப்பு, 1969
- நவநீதப் பாட்டியல் - உ.வே.சா. பதிப்பு, 1961
- சிதம்பரப் பாட்டியல் - தஞ்சை சரசுவதி மகால் பதிப்பு, 2002
- இலக்கண விளக்கப் பாட்டியல் - தஞ்சை சரசுவதி மகால் பதிப்பு, 1974
- பிரபந்த மரபியல் பிற்சேர்க்கை - 2 - தஞ்சை சரசுவதி மகால் பதிப்பு
- பிரபந்த தீபம் - தமிழ்ப் பதிப்பு, சென்னை-96, ஜூன் 14, 1980
- பிரபந்த தீபிகை - தஞ்சை சரசுவதி மகால் பதிப்பு - பிற்சேர்க்கை 3
- தொன்னூல்
- சாமிநாதம் - ஆ.ப. கழகம், 1975
- சிற்றிலக்கியத் திறனாய்வு - இலக்கியப் பதிப்பகம், சென்னை–18, 1980
அடிக்குறிப்புகள்
- ↑ சதாசிவம், ஆ., 1966.
உசாத்துணை
- சதாசிவம், ஆ. (தொகுப்பாசிரியர்), ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், சாகித்திய மண்டல வெளியீடு, கொழும்பு. 1966.
- சாமிநாத ஐயர், உ. வே., ஸ்ரீ குமரகுருபரர் சுவாமிகள் பிரபந்தத் திரட்டு, அண்ணாமலைப பல்கலைக்கழகம். 1988.
இதர இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:07:14 IST