உ.வே.சாமிநாதையர்
உ.வே.சாமிநாதையர் (19 பெப்ருவரி,1855 –28 ஏப்ரல் 1942,) உ.வே.சாமிநாத ஐயர் . உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாத ஐயர். சுருக்கமாக உ.வே.சா. தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் ஆய்வாளர், உரையாசிரியர். வாழ்க்கை வரலாற்றெழுத்திலும் முன்னோடியாகக் கருதப்படுபவர்.
ஏடுகளில் இருந்து பழந்தமிழ் நூல்களை கண்டெடுத்து ஒப்பிட்டு ஆராய்ந்து உரையெழுதி அச்சில் பதிப்பிக்கும் பதிப்பியக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கியது. பேரறிஞர்களின் முயற்சியால் தமிழிலக்கியத்தின் பெரும்பகுதி அச்சேறினாலும் ஒருபகுதி எப்போதைக்குமாக அழிந்தும் போயிற்று. அந்தப் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளாக உ.வே.சாமிநாதையர், சி.வை. தாமோதரம் பிள்ளை சௌரிப்பெருமாள் அரங்கன் போன்றவர்கள் கருதப்படுகிறார்கள். உ.வே.சாமிநாதையர் தன் வாழ்நாளின் இறுதியில் தன் வாழ்க்கையையும் தன் ஆசிரியர் வாழ்க்கையையும் ஏடுதேடி அலைந்த கதைகளையும் எளிய நவீன உரைநடையில் எழுதினார். அதன்வழியாக தமிழ் நவீன உரைநடை இலக்கியத்திலும் முன்னோடியின் இடத்தை அடைந்தார்.
பிறப்பு,கல்வி
சாமிநாதையர் 19 பெப்ருவரி 1855-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் - சரசுவதி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் வெங்கடராமன். வேங்கடசுப்பையர் இசையுடன் கதைசொல்லும் ஹரிகதா கலாட்சேபம் என்னும் கலையை நிகழ்த்துபவர். உ.வே.சாமிநாதையர். தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் தந்தையிடமும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடமும் கற்றார். மேற்கொண்டு கற்க ஆவலிருந்தும் உத்தமதானபுரத்தில் அதற்கான வாய்ப்பின்றி இருந்தார். தமிழறிஞர் என எவர் வந்தாலும் ஏதேனும் கற்பிக்கும்படி கோரினார். அவ்வண்ணம் திருமணத்திற்கு வந்த ஒரு பண்டிதரிடம் கோர அவர் மறுத்துவிட்டார். துயருற்று நின்ற சாமிநாதையரிடம் ஒருவர் திருவாவடுதுறை ஆதீனவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் சென்று கற்கும்படி ஆலோசனை சொன்னார்.
கல்விகற்பதற்காக வெளியே தங்குவதற்குரிய பொருளியல் புலம் இல்லாத காரணத்தால் கும்பகோணத்திலேயே கல்வி கற்க உ.வே.சாமிநாதையரின் தந்தை ஏற்பாடு செய்தார். அரியலூர் சடகோப ஐயங்கார், திருவிளையாடற் புராண அறிஞர் குன்னம் சிதம்பரம் பிள்ளை, கம்ப ராமாயாணத்தில் தேர்ந்த கஸ்தூரி ஐயங்கார் போன்ற அறிஞர்களிடம் உ.வே.சாமிநாதையர் தமிழ் பயின்றார்.சின்னப்பண்ணை விருத்தாசலம் ரெட்டியார் என்ற தமிழறிஞரிடம் இலக்கணங்களை கற்றார். இக்காலகட்டத்தில் நந்தனார் கீர்த்தனை எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார் அவர்களிடம் உ.வே.சாமிநாதையர் சிலகாலம் இசையும் பயின்றார்.
விருத்தாசலம் ரெட்டியார் சிபாரிசின் பேரில் தன் 17-ஆம் வயதில் 1870 ல் தந்தையுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாவடுதுறை சைவஆதீனத்திற்குச் சென்றார். அங்கே மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தன்னை அறிமுகம் செய்யும்போது அவர் சைவராகையால் தன் வைணவப்பெயரைக்கொண்டு தன்னை நிராகரித்துவிடக்கூடாது என எண்ணி சற்றுமுன் காதில் விழுந்த சாமிநாதன் என்னும்பெயரை தன் பெயராகச் சொன்னார். அதன்பின் சாமிநாதையர் என்ற பெயரையே தன் பெயராகக் கொண்டிருந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தின் பொருளுதவியைக் கொண்டு ஐந்து ஆண்டுகள் ஆசிரியருடனேயே குருகுல முறைப்படி தங்கி தமிழ்கற்றார். திருநாகைக்காரோண புராணம், நைடதம், திருக்குடந்தைத் திரிபந்தாதி, பழமலை திரிபந்தாதி, மறைசையந்தாதி, மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் வினாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், அஷ்டப்பபிரந்தங்கள், சீர்காழிக்கோவை, கண்ணப்பநாயனார் புராணம் போன்ற நூல்களை அவரிடம் கற்றார். அக்கால முறைப்படி நன்னூல், பாட்டியல் இலக்கணம், சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றையே அவர் கற்றார்.
ஆதீனச்சூழலில் அங்கு வந்த பல அறிஞர்களுடன் விவாதித்துக் கற்கும் வாய்ப்பு உ.வே.சாமிநாதையருக்கு அமைந்தது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை, சந்திரசேகர கவிராஜபண்டிதா், திரிசிரபுரம் கோவிந்தபிள்ளை, ராவ்பகதூர் திரு.பட்டாபிராம் பிள்ளை போன்றவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள் என அவர் தன் வாழ்க்கைவரலாற்றில் குறிப்பிடுகிறார்..
தனிவாழ்க்கை
உ.வே.சாமிநாதையர் தன் பதிமூன்றாவது வயதில் 1868 ல் மதுராம்பாளை மணந்தார்.மகன் கல்யாணசுந்தர ஐயர்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1-பிப்ரவரி-1876 ல் மறைந்தா. உ.வே.சாமிநாதையர் குடும்பம் அப்போது பொருளியல் இடரில் இருந்தது. அவர் தந்தை வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று கதைசொல்லியும், செல்வந்தர்களிடம் கொடைபெற்றும் வாழ்ந்தார். உ.வே.சாமிநாதையரும் அவருடன் கதைசொல்லச் சென்றார். பணம்கேட்டு நிலப்பிரபுக்களுக்கு சீட்டுகவிகளும் எழுதினார். திருவாவடுதுறை ஆதீனம் கோரியதற்கு ஏற்ப உ.வே.சாமிநாதையர் தன் மனைவியுடன் ஆதீனத்திற்கே வந்து தங்கியிருந்தார். ஆதீனகர்த்தராகிய சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்டும் அங்கிருந்த மாணவர்களுக்கு பாடம் சொல்லியும் வாழ்ந்தார்.
மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு நெருக்கமானவரும் கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியர்ருமான தியாகராஜ செட்டியார் அடிக்கடி ஆதீனத்திற்கு வருகையில் அவருடன் சாமிநாதையருக்கு பழக்கம் ஏற்பட்டிருந்தது. மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருந்தகாலத்தில் சாமிநாதையர் ஆசிரியர் வேலைக்குச் செல்லலாம் என தியாகராஜ செட்டியார் பரிந்துரை செய்ய, சாமிநாதையரை பிரியமனமில்லாத மீனாட்சிசுந்தரம் பிள்ளை அதை மறுத்துவிட்டார். 12-பிப்ரவரி 1880 ல் தியாகராஜச் செட்டியார் கும்பகோணம் கல்லூரியில் தமது வேலையைத் விட்டுவிட முடிவுசெய்து அந்த வேலைக்கு உ.வே.சாமிநாதையரைப் பரிந்துரைத்த செய்தியை சுப்பிரமணிய தேசிகரிடம் கூறினார். தேசிகருக்கு சாமிநாதையரை அனுப்பும் எண்ணம் இருக்கவில்லை, உ.வே.சாமிநாதையரும் ஆதீனத்தை விட்டுச்செல்ல நினைக்கவில்லை. தியாகராஜ செட்டியார் வலியுறுத்தி தேசிகரிடம் அனுமதி பெற்றார். உ.வே.சாமிநாதையர்16 பிப்ரவரி 1880 முதல் கும்பகோணம் கல்லூரி தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.
பதிப்புப்பணி
சீவகசிந்தாமணி
1880 முதல் 1903 வரை 23 ஆண்டுகள் உ.வே.சாமிநாதையர் கும்பகோணம் கல்லூரி தமிழாசிரியராகப் பணியாற்றினார். அப்போது அரியலூரிலிருந்து கும்பகோணத்திற்கு முன்சிபாக மாற்றம் பெற்று வந்த சேலம் இராமசாமி முதலியாரிடம் அறிமுகம் ஏற்பட்டது. அவர் உ.வே.சாமிநாதையருக்கு ஐம்பெருங்காப்பியங்களைப் பற்றிச் சொல்லி சீவகசிந்தாமணியின் ஓர் இலம்பகத்தையும் அளித்தார். அதை ஆராயத்தொடங்கிய உ.வே.சாமிநாதையர் அதுவரை அவர் வாழ்ந்து வந்த சிற்றிலக்கியங்கள் மற்றும் பக்தி இலக்கியங்களின் உலகில் இருந்து காப்பியங்களின் உலகுக்கும் சங்கத்தமிழ் படைப்புகளின் உலகுக்கும் சென்றார். சீவகசிந்தாமணியின் நாமகள் இலம்பகத்தை பிழைநோக்கி பதிப்பிக்க முயன்றார். சமண நண்பர்களின் உதவியுடன் சமணமதத்தின் கருத்துக்களையும், திருத்தக்கதேவரின் வாழ்க்கையையும் பற்றி அறிந்துகொண்டார். சமணக் காப்பியத்தை பதிப்பிப்பதை சைவர்கள் எதிர்த்தபோது தமிழ்ப்பணியே முதன்மையானது, மதநம்பிக்கை அல்ல என்று தன் முடிவை முன்வைத்தார்
சிந்தாமணி பதிப்பே சாமிநாதையரின் முதல் பதிப்பு முயற்சி. ஏற்கனவே பவர் என்னும் ஆங்கிலேயர் பதிப்பித்த சிந்தாமணி நாமகளிலம்பகம் அச்சுநூல் இருந்தது. தியாகராசசெட்டியார் தம்மிடமிருந்த பிரதியை அனுப்பி வைத்தார். சுப்பிரமணிய தேசிகர் திருநெல்வேலியிலிருந்து சில ஏட்டுப்பிரதிகளை வருவித்துக் கொடுத்தார். பல பிரதிகளையும் ஒப்பிட்டு, பாடபேதங்களைக் குறித்து நூலை செம்மைசெய்தார். சிந்தாமணியை முழுமையாக அச்சிடும்பொருட்டு சுவடிகளை மேலும் தேடி விருஷபதாச முதலியாரிடம் சுவடிகளைப் பெற்றார். அவ்வாறாக சிந்தாமணியின் 23 நகல்களை உ.வே.சா. சேர்த்தார்
அன்றைய பதிப்புமுறை என்பது பதிப்பிக்கவிருக்கும் நூலை வாங்குவதாக செல்வந்தர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு நூலை அச்சிடுவது. உ.வே.சாமிநாதையர் தமிழார்வம் கொண்ட செல்வந்தர்களைச் சந்தித்து ஆதரவு பெற்று நூலை அச்சிட்டார். சோடசவதனம் சுப்பராய செட்டியாரும், ராஜ பாலாச்சாரியாரும் வேலுச்சாமிப் பிள்ளையும் கையெழுத்து அதில் உதவினர். அச்சிடுவதற்காகச் சென்னை சென்று ராமசாமி முதலியார் இல்லத்தில் தங்கியிருந்தார். சென்னைக்கும் கும்பகோணத்திற்குமாக பயணம் செய்து அச்சுப்பணியை நிகழ்த்தினார்.
உ.வே.சாமிநாதையர் சீவகசிந்தாமணியை விரிவான முன்னுரை, நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, கதைச்சுருக்கம் ஆகியவற்றுடன் அக்டோபர் 1887ல் பதிப்பித்தார். தமிழ்ப்பதிப்பியக்கத்தில் முன்னோடியான முயற்சியாக அது அமைந்தது.
பத்துப்பாட்டு
சீவகசிந்தாமணியை பதிப்பிக்கும்போதே பத்துப்பாட்டு சுவடிகளையும் உ.வே.சாமிநாதையர் சேர்த்திருந்தார். 1889-ஆம் வருடம் உ.வே.சா.வின் 34-ஆவது வயதில் பத்துப்பாட்டும் பதிப்பிக்கப்பட்டது. இதில் முகவுரையும், நூலின்மூலம் நச்சினார்க்கினியர் உரை, உரைச்சிறப்பு, பாயிரம், அரும்பதவிளக்கம் அருந்தொடர்விளக்கம், பிழைதிருத்தம் என்பனவற்றை உ.வே.சா. சேர்த்திருந்தார். சீவக சிந்தாமணி பதிப்பிலும் பத்துப்பாட்டுப் பதிப்பிலும் திருமானூர் கிருஷ்ணையர் சென்னையில் தங்கி மேற்பார்வையிட்டு உ.வே.சாமிநாதையருக்கு உதவினார்
திருகச்சியப்ப முனிவர் இயற்றிய ஆநந்தருத்திரேசர் வண்டு விடுதூது, மாயூரம் ராமையர் இயற்றிய மயிலையந்தாதி முதலிய நூல்களையும் உ.வே.சா. பதிப்பித்து வெளியிட்டார்கள்.
சிலப்பதிகாரம்
சேலம் இராமசாமி முதலியார் சிலப்பதிகாரம் மூலமும் உரையும் அடங்கிய நூல் ஒன்றை உ.வே.சாமிநாதையரிடம் கொடுத்தார். ஏற்கனவே தியாகராச செட்டியார் கொடுத்த நூலும் உ.வே.சாமிநாதையரிடம் இருந்தது. சௌரிப்பெருமாள் அரங்கன் சிலப்பதிகாரத்தை பதிப்பித்திருந்தார். அடியார்க்கு நல்லார் உரையுடன் முழுமையாக சிலப்பதிகாரத்தை அச்சிட உ.வே.சாமிநாதையர் முயன்றார். சேலம் ,திருநெல்வேலி திருவைகுண்டம், பெருங்குளம், ஆறுமுகமங்கலம், நாங்குநேரி, களக்காடு, குன்றக்குடி, மிதிலைப்பட்டி போன்ற ஊர்களுக்குச் சென்று ஏட்டுச்சுவடிகளைத் தேடினார். அரசர்கள், நாடுகள், ஊர்கள், மலைகள், ஆறுகள், பொய்கைகள், தெய்வங்கள், புலவர்கள், ஆகிய பெயர்களுக்குத் தனித்தனியாக அகராதியும் அடியார்க்கு நல்லார் உரையில் கண்ட நூல்களுக்கு அகராதியும், தொகையகராதியும், விளங்கா மேற்கோளகராதியும், அபிதான விளக்கமும் எழுதினார். 1891-ஆம் வருடம் ஜூன் மாதம் கோடை விடுமுறையில் சென்னை சென்று சிலப்பதிகாரத்தை அச்சிட்டார்
புறநானூறு
புறநானூறு பதிப்பிக்கும் முயற்சியை உ.வே.சாமிநாதையர் தொடங்கியபோது கும்பகோணம் கல்லூரியில் சாித்திர ஆசிரியர் வைத்திருந்த பைபிளைக் கண்டு அதில் ஒரே மாதிரியான கருத்துள்ள பகுதிகளை ஆங்காங்கே சுட்டிக்காட்டிப் பதிப்பித்திருப்பதை கவனித்து புறநானூறையும் அதைப்போல பதிப்ப்பிக்க முடிவுசெய்தார். 1894-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் புறநானூறு நூல் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. உ.வே.சாமிநாதைய. பதிப்பித்த எட்டுத்தொகை நூல்களுள் இதுவே முதலானது. இதன் முகவுரையில் எட்டுத்தொகை வரலாற்றையும், அகம் புறம் என்னும் இருவகைப் பொருளின் இயல்பையும் விளக்கி எழுதினார்
மணிமேகலை
மணிமேகலையை பதிப்பிக்கும்பொருட்டு புத்தரைப் பற்றி படித்தார். 5. ஜூன் 1896-ஆம் ஆண்டு மணிமேகலையை அச்சுக்குக் கொடுத்தார். 1898-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மணிமேகலை மூலமும், அரும்பதவுரையும் வெளியாகியது. முகவுரை, புத்தசரித்திரம், பெளத்ததருமம், பெளத்தசங்கம் மணிமேகலைக் கதைச்சுருக்கம் ஆகியவை இணைக்கப்பட்டிருந்தன. அந்நூலில் 59 தமிழ் நூல்களிலிருந்தும் 29 வடமொழிநூல்களிலிருந்தும் குறிப்புரையில் மேற்கோள்கள் காட்டியிருந்தார். .
பிறநூல்கள்
உ.வே.சாமிநாதையர் சீவகசிந்தாமணிக்குப்பின் பதிப்பித்த நூல் திருக்குடந்தை புராணம். சிந்தாமணி ஆராய்ச்சியோடு திருக்குடந்தை புராணப் பதிப்பும் நடைபெற்றுவந்தது. எட்டுத்தொகை மூலநூல் திருவாடுதுறை ஆதினத்திலேயே இருந்தது. பொருநராற்றுப்படை, பதினெண் கீழ்க்கணக்கு முதலியனவும் சுவடி வடிவில் கிடைத்தன.
,
சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
பேச்சுத்திறன்
உ.வே.சா. கருத்தாழத்தோடு நகைச்சுவை இழையோடப் பேசும் திறமை உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா. ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.
பட்டங்கள்
உ.வே.சா. தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி, மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார். இந்திய அரசு, பெப்ரவரி 18,2006-ஆம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
நினைவு இல்லம்
- உத்தமதானபுரத்தில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.
- 1942-இல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
டாக்டர் உ.வே.சா. நூலகம்
முதன்மைக் கட்டுரை: உ.வே.சாமிநாதையர் நூலகம்
சென்னை, பெசண்ட் நகரில் உள்ள் டாக்டர் உ.வே.சா. நூல் நிலையத்தில் பல்வேறு திருக்கோயில்களின் தல புராணங்கள் மட்டுமன்றிப் பக்தி இலக்கியங்களும் ஓலைச் சுவடிகளில் உள்ளன. செல்வ வளம் மிகுந்த திருக்கோயில்கள் தமிழகத்தில் பல உள்ளன. எனினும் அவற்றைப் பற்றிய தல புராணங்களில், இலக்கியங்களில் கூட இன்னமும் அச்சுக்கு வராதவை உள்ளன. இச்செய்தி அவ்வத் திருக்கோவில் பொறுப்பாளர்களுக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவை இன்னும் அச்சேரவில்லை.
டாக்டர் உ.வே.சா. நூல் நிலையத்தில் ஓலைச் சுவடியில் இருந்து இதுவரை அச்சுக்கு வராத நூல்களை அச்சுக்குக் கொண்டு வரும் திருப்பணியின் மூலம் 2002-ஆம் ஆண்டு ’அர்த்த நாரீசர் குறவஞ்சி’ என்னும் திருச்செங்கோட்டுக் குறவஞ்சி நூல் வெளிவந்தது. 2003-ஆம் ஆண்டு தேசீய ஆவணக் காப்பகத்தின் (National Archives of India) 80% பொருளுதவியுடன் கற்பகவல்லி நாயகி மாலை என்னும் நூல் வெளிவந்துள்ளது.
உ.வே.சா. எழுதிய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் என்ற நூலை டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் 1986-ஆம் ஆண்டில் மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது.
தன் வரலாறு
உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950-ஆம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது.
இது தவிர இவரது வாழ்க்கை வரலாறு தமிழ்த்தாத்தா எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தாரால் (தூர்தர்சன்) ஒளிபரப்பப்பட்டது.
பதிப்பித்த நூல்களின் பட்டியல்
சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டைமணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4
உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த நூல்கள்
புத்தகத்தின் பெயர் | பதிப்பித்த ஆண்டு |
---|---|
நீலி இரட்டை மணிமாலை | 1874 |
வேணுவனலிங்க விலாசச் சிறப்பு | 1878 |
திருக்குடந்தைப் புராணம் | 1883 |
மத்தியார்ச்சுன மான்மியம் | 1885 |
சீவக சிந்தாமணி | 1887 |
கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது | 1888 |
திருமயிலைத் திரிபந்தாதி | 1888 |
பத்துப் பாட்டு மூலமும் உரையும் | 1889 |
தண்டபாணி விருத்தம் | 1891 |
சிலப்பதிகாரம் | 1892 |
திருப்பெருந்துறைப் புராணம் | 1892 |
புறநானூறு | 1894 |
புறப்பொருள் வெண்பா மாலை | 1895 |
புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம் | 1898 |
மணிமேகலை | 1898 |
மணிமேகலைக் கதைச் சுருக்கம் | 1898 |
ஐங்குறுநூறு | 1903 |
சீகாழிக் கோவை | 1903 |
திருவாவடுதுறைக் கோவை | 1903 |
வீரவனப் புராணம் | 1903 |
சூரைமாநகர்ப் புராணம் | 1904 |
திருக்காளத்தி நாதருலா | 1904 |
திருப்பூவண நாதருலா | 1904 |
பதிற்றுப் பத்து | 1904 |
திருவாரூர்த் தியாகராச லீலை | 1905 |
திருவாரூருலா | 1905 |
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் | 1906 |
தனியூர்ப் புராணம் | 1907 |
தேவையுலா | 1907 |
மண்ணிப்படிக்கரைப் புராணம் | 1907 |
திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் | 1908 |
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு | 1910 |
திருக்காளத்திப் புராணம் | 1912 |
திருத்தணிகைத் திருவிருத்தம் | 1914 |
பரிபாடல் | 1918 |
உதயணன் சரித்திரச் சுருக்கம் | 1924 |
பெருங்கதை | 1924 |
நன்னூல் சங்கர நமச்சிவாயருரை | 1925 |
நன்னூல் மயிலை நாதருரை | 1925 |
சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் | 1928 |
தக்கயாகப் பரணி | 1930 |
தமிழ்விடு தூது | 1930 |
பத்துப் பாட்டு மூலம் | 1931 |
மதுரைச் சொக்கநாதர் உலா | 1931 |
கடம்பர் கோயிலுலா | 1932 |
களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை | 1932 |
சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் | 1932 |
பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது | 1932 |
பழனி பிள்ளைத் தமிழ் | 1932 |
மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை | 1932 |
வலிவல மும்மணிக் கோவை | 1932 |
சங்கரலிங்க உலா | 1933 |
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா | 1933 |
பாசவதைப் பரணி | 1933 |
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 1 | 1933 |
சங்கர நயினார் கோயிலந்தாதி | 1934 |
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 2 | 1934 |
விளத்தொட்டிப் புராணம் | 1934 |
ஆற்றூர்ப் புராணம் | 1935 |
உதயண குமார காவியம் | 1935 |
கலைசைக் கோவை | 1935 |
திரு இலஞ்சி முருகன் உலா | 1935 |
பழமலைக் கோவை | 1935 |
பழனி இரட்டைமணி மாலை | 1935 |
இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை | 1936 |
கனம் கிருஷ்ணயைர் | 1936 |
கோபால கிருஷ்ண பாரதியார் | 1936 |
திருநீலகண்டனார் சரித்திரம் | 1936 |
திருமயிலை யமக அந்தாதி | 1936 |
திருவள்ளுவரும் திருக்குறளும் | 1936 |
நான் கண்டதும் கேட்டதும் | 1936 |
புதியதும் பழையதும் | 1936 |
புறநானூறு மூலம் | 1936 |
பெருங்கதை மூலம் | 1936 |
மகாவைத்தியநாதையைர் | 1936 |
மான் விடு தூது | 1936 |
குறுந்தொகை | 1937 |
சிராமலைக் கோவை | 1937 |
தமிழ்நெறி விளக்கம் | 1937 |
திருவாரூர்க் கோவை | 1937 |
நல்லுரைக் கோவை பகுதி 1 | 1937 |
நல்லுரைக் கோவை பகுதி 2 | 1937 |
நினைவு மஞ்சரி - பகுதி 1 | 1937 |
அழகர் கிள்ளை விடு தூது | 1938 |
சிவசிவ வெண்பா | 1938 |
திருக்கழுக்குன்றத்துலா | 1938 |
திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை | 1938 |
திருமலையாண்டவர் குறவஞ்சி | 1938 |
நல்லுரைக் கோவை பகுதி 3 | 1938 |
குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு | 1939 |
தணிகாசல புராணம் | 1939 |
நல்லுரைக் கோவை பகுதி 4 | 1939 |
புகையிலை விடு தூது | 1939 |
மகரநெடுங் குழைக்காதர் பாமாலை | 1939 |
கபாலீசுவரர் பஞ்சரத்தினம் | 1940 |
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா | 1940 |
வில்லைப் புராணம் | 1940 |
செவ்வைச் சூடுவார் பாகவதம் | 1941 |
நினைவு மஞ்சரி - பகுதி 2 | 1942 |
வித்துவான் தியாகராச செட்டியார் | 1942 |
உசாத்துணை
- பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் - மயிலை சீனி.வேங்கடசாமி.
- கற்பகவல்லி நாயகி மாலை, மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், முதற்பதிப்பு 2003
- https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec20/41562-17
- உ.வே.சாமிநாதையர் என் சரித்திரம் இணையநூலகம் மதுரைத்திட்டம்
- உ.வே.சாமிநாதையர் என் சரித்திர இணைய நூலகம் மதுரைத்திட்டம் 1
- https://tamizharulagam.in/2021/07/07/uvswaminathaiyer/