குமரகுருபரர்
To read the article in English: Kumaraguruparar.
குமரகுருபரர் (பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், தருமபுரம் ஆதீனத்துடன் தொடர்புடைய துறவி. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நீதி நெறி விளக்கம், மதுரைக் கலம்பகம் போன்ற நூல்களை இயற்றினார்.
வாழ்க்கை வரலாறு
இளமைப்பருவம்
குமரகுருபரர் தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்னும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்தில் சண்முக சிகாமணிக் கவிராயர், சிவகாம சுந்தரி இணையருக்குப் பிறந்தார். குமரகுருபரர் ஐந்து வயது வரை பேசும் திறனின்றி இருந்தார் என்றும் இவரின் பெற்றோர் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று வழிபட்ட பிறகு பேசும் திறன் பெற்றார் என்றும் தொன்மம் கூறுகிறது. திருச்செந்தூர் முருகனைப் போற்றி கந்தர் கலி வெண்பா இயற்றினார்.
ஆன்மிக/இலக்கிய வாழ்க்கை
குமரகுருபரர் ஆன்மிகத் தேடலால் தனது இளம் வயதிலேயே வீட்டை விட்டுச் சென்றார். திருச்செந்தூரில் அவர் இருந்தபோது, தன் குருவைக் காணும்போது தன்னால் சரியாகப் பேச இயலாத நிலை ஏற்படும் என்கிற அசரீரி ஒலியினைக் கேட்டார். அதனால் தன் குருவைக் காணும் நோக்கத்தில் மதுரை நகருக்கு வந்தார். திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார். இந்த நூலின் வருகைப்பருவம் என்னும் பகுதியை கோவில் மேடையில் அமர்ந்தவாறு பாடிய போது மதுரை மீனாட்சி அம்மனே சிறு பெண் வடிவத்தில் வந்து குமரகுருபரருக்கு முத்து மாலை பரிசளித்ததாகக் கூறப்படுகிறது.
குமரகுருபரர் மதுரைக் கலம்பகம், நீதி நெறி விளக்கம் போன்ற நூல்களையும் இயற்றினார். பின்னர் திருவாரூர் சென்று அங்குள்ள தியாகராச பெருமானைப் போற்றித் திருவாரூர் நான்மணி மாலை என்னும் நூலை இயற்றினார்.
துறவு
தருமபுரத்தில் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் என்ற பாரம்பரிய சைவ மடத்தை துறவி மாசிலாமணி தேசிகர் நிர்வகித்து வந்தார். அவர் காசி (வாரணாசி) யாத்திரை சென்று திரும்பி வரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் குமரகுருபரரின் குருவாக இருக்க ஒப்புக் கொண்டார்.
காசிக்குச் சென்று வருவதில் நெடுங்காலம் ஆகுமேயென்று தயங்கிய குமரகுருபரரை சில காலம் சிதம்பரத்தில் இருந்துவரும்படி கூறினார்.
குருவின் கட்டளைப்படி சிதம்பரத்துக்கு பயணமான குமரகுருபரர் இடையே வைத்தீசுவரன் கோயிலில் தங்கித் தரிசனம் செய்துகொண்டு அங்கே கோயில் கொண்டிருக்கும் முத்துக்குமார சுவாமி பெயரில் ஒரு பிள்ளைத்தமிழ் இயற்றினார். பிறகு சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானைத் தரிசனம் செய்துகொண்டு சிலகாலம் தங்கினர். அக்காலத்தில் "சிதம்பர மும்மணிக் கோவை" என்னும் நூலை இவர் இயற்றினார். அதில் முதற் செய்யுளில் காசிக்குச் செல்வதில் உளவாகும் துன்பங்களையும் சிதம்பரத்திற்குச் சென்று தரிசனம் செய்யும் எளிமையையும் "காசியினிறத்த னோக்கி" (452) என்பது முதலிய அடிகளில் உணர்த்தியிருக்கின்றார்.
சில அன்பர்கள், "யாப்பருங்கலக் காரிகையில் காணப்படும் உதாரணச் செய்யுட்கள் பெரும்பாலும் சமண சமயச் சார்புடையனவாக இருப்பதால் அந்நூலின் இலக்கணங்களுக்கு உதாரணமாக நடராஜப் பெருமான் தொடர்பான செய்யுள்களை இயற்றித்தர வேண்டும்" என்று கோரியதற்கிணங்க "சிதம்பர செய்யுட் கோவை" நூலை இயற்றினார்.
"நீதிநெறி விளக்கம் என்னும் நீதிநூலில் சிதம்பரம் நடராஜப் பெருமானது வாழ்த்து இடம்பெற்றிருப்பதால் இவர் சிதம்பரத்தில் இருந்த காலத்திலேயே இந்நூல் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்று கருதப்படுகிறது.
சிதம்பரத்திலிருந்து திரும்பிய குமரகுருபரர், குரு மாசிலாமணி தேசிகரிடம் சென்று தம்முடைய துறவியாகும் வேட்கையை மீண்டும் தெரிவித்தார். இவருடைய வேண்டுதலை ஏற்று மாசிலாமணி தேசிகர் இவருக்கு ஞானம் உபதேசித்து துறவியாக்கினார். அதுமுதல் இவர் குமரகுருபர முனிவரென அழைக்கப்பட்டார். அப்பொழுது தன் குரு மாசிலாமணி தேசிகர் தொடர்பாக "பண்டார மும்மணிக் கோவை" என்ற நூலை இயற்றினர்.
காசியில் மடம் அமைப்பதற்கு அனுமதி வேண்டி இவர் முகலாய மன்னர் தாரா ஷூகோவை சந்தித்ததாக சொல்லப்படுகிறது. அந்நேரத்தில் தனக்கு இயல்பாக உரையாடல் அமையவேண்டி கலைமகள் மீது "சகலகலாவல்லி மாலை" என்னும் பாடற்தொகுப்பை இயற்றினார்.
கேதார கட்டத்திலுள்ள கேதாரலிங்கத்தை முகம்மதியர் மறைத்திருந்தனரென்றும் குமரகுருபர முனிவர் அம்மூர்த்தியை வெளிப்படுத்தி ஆலயத்தை கட்டி தின வழிபாட்டை நடத்தச் செய்தாரென்றும், இன்றும் ஆகம விதிப்படி தமிழ்நாட்டு முறையில் சில திருவிழாக்கள் அங்கே நிகழ்கின்றன என்றும் கருதப்படுகிறது. குமரகுருபரர் காசியில் தங்கியிருந்த மடத்திற்குக் குமாரசாமி மடம் என்று பெயர்.
இம்மடத்தின் கிளை, தமிழகத்தின் திருப்பனந்தாளிலும் அமையப்பெற்றது. இந்த மடங்கள் இன்றும் தமது தமிழ்ப்பணியினைத் தொடர்ந்து ஆற்றிக்கொண்டு வருகின்றன. காசித்துண்டி விநாயகர் பதிகமும், காசிக் கலம்பகமும் அப்போது இவரால் இயற்றப்பெற்றன. இவர் தாம் வாழ்ந்திருந்த மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்தியிலும் தமிழிலும் புராணப் பிரசங்கம் செய்தார்.
இராம பக்தராகிய துளசிதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு மகிழ்ந்தாரென்றும் கம்பராமாயணத்திலுள்ள கருத்துக்களைத் தாம் ஹிந்தியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டாரென்றும் என்றும் கூறப்படுகிறது.
நூல்கள்
- கந்தர் கலிவெண்பா
- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
- மதுரைக் கலம்பகம்
- நீதிநெறி விளக்கம்
- திருவாரூர் நான்மணிமாலை
- முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
- சிதம்பர மும்மணிக்கோவை
- சிதம்பரச் செய்யுட்கோவை
- பண்டார மும்மணிக் கோவை
- காசிக் கலம்பகம்
- சகலகலாவல்லி மாலை
- மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
- மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
- தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
- கயிலைக் கலம்பகம் (பிரதி கிடைக்கவில்லை)
- காசித் துண்டி விநாயகர் பதிகம் (பிரதி கிடைக்கவில்லை)
நினைவுகூறல்
கயிலாசபுரத்தில் குமரகுருபர பிறந்த வீட்டுப் பகுதி குமரகுருபரர் மடமாக ஆகஸ்ட் 31, 1952-ல் அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 27, 2010 அன்று குமரகுருபரர் நினைவாக ஒரு தபால்தலை இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்டது.
குமரகுருபரரைப் பாடியோர்
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 338 பாடல்களில் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் சரித்திரம் என்ற நூலை எழுதியுள்ளார்.
- சேற்றூர் இரா. சுப்பிரமணியக் கவிராயர் 1001 பாடல்கள் கொண்ட ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் புராணம் என்ற நூல் எழுதியுள்ளார்.
- பாரதிதாசன் குமரகுருபரர் மீது கொண்ட பற்றினால் தமது எதிர்பாராத முத்தம் என்ற நூலில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
- தேனூர் வே. செ. சொக்கலிங்கனார் சுவாமிகளைப் பற்றி எழுதிய தொண்டர் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உசாத்துணை
- குமரகுருபரர் : ஓர் அறிமுகம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
- ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் சரித்திரச் சுருக்கம், திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம் வெளியீடு, 1965.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.