under review

வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர்

From Tamil Wiki
Revision as of 20:18, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)

வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் ( 1930- 1976) கொங்கு நாட்டின் வரலாற்றாசிரியர். நாட்டாரியல் ஆய்வாளர். பதிப்பாசிரியர். 'பஞ்சமரபு' என்னும் இசைநூலின் பதிப்பாசிரியர்

பார்க்க தெய்வசிகாமணி

பிறப்பு, கல்வி

ஈரோட்டை அடுத்த வேலம்பாளையத்தில் 1903-ல் பிறந்த தெய்வசிகாமணிக் கவுண்டர், தமிழுடன் வட மொழியும் கற்றார்.

தனிவாழ்க்கை

வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் கொடுமுடி சங்கர வித்யாசாலை உயர்பள்ளி, கோபி வைரவிழா உயர்பள்ளி எனப் பல பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

பதிப்புப்பணி

வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் சிற்றிலக்கியங்கள், நாட்டார் இலக்கியங்களின் ஏட்டுச்சுவடிகளை தேடி எடுத்துப் பதிப்பித்தார். வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களைச் சுவடியிலிருந்து பெயர்த்தெழுதி , பலவற்றை நூலாக வெளியிட்டுள்ளார். ஓலைச் சுவடிகளிலிருந்து பெயர்த்தவற்றை, தனித்தனிக் காகித ஏடுகளில் எழுதிவைத்துள்ளார். ஒவ்வொரு ஏட்டிற்கும் தனித்தனி எண் கொடுத்தும் தொகுத்தார். அவ்வாறு தொகுத்த ஏடுகளின் முன் பக்கத்தில் சுவடி குறித்த விளக்கங்கள் அமைந்துள்ளன. தன்னிடமுள்ள வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரின் 33-ஆம் ஏட்டின் முன்பகுதியில், "பொன்காளியம்மன் துணை. தலையநல்லூர்க் குறவஞ்சியென வழங்குகிற நாட்டிமைக் காளியண கவுண்டன் குறவஞ்சி. தலையநல்லூர்க் கவுண்டன்பாளையம் நஞ்சைய புலவர் பரம்பரையனராகிய பொங்கியண வாத்தியார் வீட்டு ஏட்டுப் பிரதியைக் கொண்டு காகிதப் பிரதி செய்யப்பட்டது. வித்துவான் வே.ரா. தெய்வசிகாமணி. கொடுமுடி, சங்கர வித்தியாசாலைத் தமிழ்ப் பண்டிதர் 5.6.1943" என எழுதப்பட்டுள்ளது என்று ஆய்வாளர் கு. மகுடீஸ்வரன் குறிப்பிடுகிறார். பல நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகளைத் தருவதோடு, பல இடங்களில் கல்வெட்டு, செப்பேடு, ஓலை ஆவணங்களைச் சான்றாகக் காட்டுவது வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரின் வழக்கம்

பஞ்சமரபு

அழிந்துபோனதாகக் கருதப்பட்ட இசைநூலான அறிவனாரின் 'பஞ்சமரபு' ஏட்டுச் சுவடியை கண்டுபிடித்துக் இசையறிஞர் குடந்தை.ப. சுந்தரேசனார் துணையுடன் வெளியிட்டார். பஞ்சமரபு நூலைப் பற்றித் தமிழ்க்கலை ( மார்ச் 1983) எனும் இதழில் க. வெள்ளைவாரணனார் திறனாய்வு செய்தபோது, பஞ்சமரபு எனும் நூலின் தொகையமைப்புக்கும் 1954-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறையினரால் வெளியிடப் பெற்றுள்ள 'பரதசங்கிரகம்' என்ற தொகுப்பு நூலுக்கும் நூலின் உட்பிரிவுகளாலும் பொருட் பகுதிகளாலும் நூலிலமைந்த செய்யுட்களாலும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. எனவே இசையிலக்கணம் பற்றிய இவ்விரு தொகுப்பு நூல்களும் வேலம்பாளையம் வித்துவான் தெய்வசிகாமணிக் கவுண்டரவர்கள் அரிதின் முயன்று தேடித் தந்த ஏட்டுச் சுவடிகளிலிருந்து வெளிப்பட்டிருத்தலால், இத்தொகுப்பு நூல்கள் கொங்கு நாட்டில் வாழ்ந்த இசையறிஞர்களால் ஒரு காலத்தில் தொகுக்கப்பெற்றிருத்தல் கூடும் எனக் கருத வேண்டியுள்ளது" எனக் கூறுகிறார்.

"பஞ்ச மரபு பதிப்பு, கவுண்டர் அவர்கள் இசைத் தமிழுக்குக் கொடுத்த அரிய பெருங்கொடையாகும். உ.வே. சாமிநாதையருக்குக் கிடைக்காத பஞ்சமரபு ஏடு தெய்வசிகாமணிக் கவுண்டருக்குக் கிடைத்தது இந்த நூற்றாண்டில் நடந்த அதிசயம்" என்று மு. அருணாசலம் கூறியுள்ளார்.

மறைவு

வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் 1976-ல் மறைந்தார்.

பதிப்பித்த நூல்கள்

  • சிவகிரி வேலாயுதசாமி ஊஞ்சல்
  • சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை
  • உதயணன் கதை
  • சித்திர மடல்
  • பரத சங்கிருகம்
  • முனிமொழி முப்பது, மேழி விளக்கம்
  • சிவமலை பிள்ளைத்தமிழ்[1]
  • மேழி விளக்கம்[2]
  • தக்கை இராமாயணம்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page