under review

ஆடுதுறை மாசாத்தனார்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
(Removed Category:Spc)
 
Line 41: Line 41:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]
[[Category:புலவர்]]
[[Category:Spc]]

Latest revision as of 21:38, 8 January 2026

மாசாத்தனார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மாசாத்தனார் (பெயர் பட்டியல்)

ஆடுதுறை மாசாத்தனார், சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியதாக ஒரு பாடல் சங்கத் தொகை நூலான புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

ஆடுதுறை மாசாத்தனார் என்னும் பெயரிலுள்ள சாத்தன் என்னும் சொல் வணிக குலத்தவரைக் குறிக்கும் சொல். ஆடுகள் மிகுதியாக இருந்ததால் அந்த ஊர் ஆடுதுறை (இன்றைய திருவாவடுதுறை) எனப் பெயர் பெற்றிருக்கலாம். திருமந்திரம் இயற்றிய திருமூலர் இவ்வூரில் வாழ்ந்தவர். திருமூலர் ஆடுமேய்த்த வரலாற்றைப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.

இலக்கிய வாழ்க்கை

ஆடுதுறை மாசாத்தனார் இயற்றிய ஒரு பாடல் சங்கத் தொகை நூலான புறநானூற்றின் 227-வது பாடலாக இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் புலவனும், பன்னிரு புலவர்களால் பாடப்பட்டவனுமான சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் இறந்தபோது வருந்தி, கூற்றுவனை, விதையை தின்ற உழவனைப் போன்றவனே இத்தனை நாள் பசியாற்றியவனை கொன்ற நன்றியில்லாதவனே என பழிக்கிறார்.

பாடலால் அறியப்படும் செய்திகள்

புறநானூறு 227
  • சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பொன்னால் செய்த பசுமைநிற பூணைக் கையில் அணிந்தவன்.
  • இளமையும் வீரமும் மிக்கவன், பகைவர்களைப் பல போர்களில் வென்றவன்.
  • விதை நெல்லை உழவர் கடைசி வரை பாதுகாப்பர். விதை நெல்லை உண்டால் அதன்பின் உழவு செய்ய வழியில்லை

பாடல் நடை

புறநானூறு 227

பாடப்பட்டவர்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

திணை: பொதுவியல்.

துறை: கையறுநிலை

நனிபே தையே, நயனில் கூற்றம்!
விரகுஇன் மையின் வித்துஅட்டு, உண்டனை
இன்னுங் காண்குவை, நன்வாய் ஆகுதல்;
ஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும்,
குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய,
நாளும் ஆனான் கடந்துஅட்டு, என்றும் நின்
வாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல்
நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்
வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி
இனையோற் கொண்டனை ஆயின்,
இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே?

(உயிர்களை உண்டு பசி ஆறும் கூற்றமே! நீ பெரிதும் அறிவில்லாதவன். உனக்குத் தந்திரம் தெரியவில்லை. விதையைத் தின்றுவிட்டால் விளைச்சல் எப்படிக் கிடைக்கும்? விளைச்சல் இல்லையேல் பசியாறுதல் எப்படி? இனிமேல்தான் உனக்குத் தெரியும், நான் சொல்வது உண்மையென்று. போரில் வெற்றி கண்ட வகையில் வாள் வீரர், யானை, குதிரை ஆகியவை குருதி வெள்ளத்தில் போர்க்களத்தில் மடியும்படி இவன் இதுவரையில் உனக்கு உதவிவந்தான், இவன் உதவியால் நீ உன் பசியைத் தீர்த்துக்கொண்டாய். ஆற்றலில் இவன் உனக்கு ஒப்பானவன். பொன்னால் செய்த பசுமைநிற பூணைக் கையில் பூண்டிருக்கும் வளவன் இவன். வண்டு மொய்க்கும் பூ மாலையைத் தலையில் சூடியவன். இளமை முறுக்கு உள்ளவன். இவனைக் கொன்றுவிட்டாயே! இனி உன் பசியைத் தீர்க்கவல்லவர் யார் இருக்கிறார்?)

உசாத்துணை

சங்கத் தமிழ் புலவர் வரிசை 1, புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் புறநானூறு 227, தமிழ் சுரங்கம் இணையதளம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jan-2023, 15:22:42 IST