ந.பழநிவேலு: Difference between revisions
(Corrected Category:ஆளுமைகள் to) |
(Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்Corrected Category:சிறுகதையாசிரியர்கள் to Category:சிறுகதையாசிரியர்) |
||
Line 73: | Line 73: | ||
[[Category:சிங்கப்பூர்]] | [[Category:சிங்கப்பூர்]] | ||
[[Category: | [[Category:எழுத்தாளர்]] | ||
[[Category: | [[Category:சிறுகதையாசிரியர்]] |
Latest revision as of 13:52, 17 November 2024
ந. பழநிவேலு (ஜூன் 20, 1908 - நவம்பர் 11, 2000) (ந. பழனிவேலு) சிங்கப்பூரின் முன்னோடி எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர். சிங்கப்பூரின் முதுபெரும் கவிஞராக அறியப்படும் ந.பழநிவேலு சிங்கப்பூரில் திராவிட, சுயமரியாதை சிந்தனை சார்ந்த எழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர். கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, இசைப் பாடல்கள் என பல வகைமைகளிலும் ஏராளமான படைப்புகளை எழுதியுள்ளார். சிங்கப்பூரின் வானொலியின் தொடக்ககால ஒலிபரப்பாளர். சிங்கப்பூர் சீர்திருத்தச் சங்கத்தின் தொடக்ககால உறுப்பினர்.
பிறப்பு, கல்வி
ந.பழநிவேலு ஜூன் 20, 1908 அன்று தஞ்சை மாவட்டம் சிக்கல் எனும் ஊரில் நடேசன் பழநிவேலு– ஜானகி தம்பதியின் மகனாகப் பிறந்தார்.நாடக எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியரான தாத்தாவின் தாக்கத்தில் வளர்ந்தவர். அரிசி வணிகக் குடும்பத்தை சேர்ந்த ந.பழநிவேலு தமிழகம், நாகப்பட்டிணத்தில் 10-ம் வகுப்பு வரை தமிழில் (எஸ்எஸ்எல்சி) படித்தார். 1929-ம் ஆண்டு மலாயாவுக்கு வந்த ந.பழநிவேலு, ஓராண்டிலேயே சிங்கப்பூரில் குடியேறி, இறுதிக் காலம் வரையில் அங்கேயே வாழ்ந்தார். ந.பழநிவேலு சிங்கப்பூரில் சுய கல்வி மூலம் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றார்.
தனி வாழ்க்கை
ந.பழநிவேலு தன் மாமன் மகளான சம்பூரணம்மாளை 1938-ம்ஆண்டு மணந்து சிங்கப்பூருக்கு அழைத்து வந்தார். இவர்களுக்கு ஏழு பிள்ளைகள். அவர்களுள் நால்வர் ஆண்மக்கள்; மூவர் பெண்மக்கள், 13 பேரப் பிள்ளைகள், 10 கொள்ளுப் பேரப்பிள்ளைகள்.
தமது 21-வது வயதில் தெலுக் அன்சன் பெங்கான் பாசிர் தென்னந்தோட்டத்தில் கணக்காளராகப் பணியாற்ற மலாயா வந்தார் ந.பழநிவேலு. காலையில் தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு பகலில் தோட்டப் பள்ளியில் ஆசிரியர் பணியாற்றினார். 1930-ல் சிங்கப்பூர் வந்ததும், சிங்கப்பூர் டிராக்ஷன் கம்பெனி (STC) என்ற பேருந்து சேவை நிறுவனத்தில் கணக்காளராகச் சேர்ந்தார்.
1949-ம் ஆண்டில் 'ரேடியோ மலாயா’ வானொலிச் சேவையில் இணைந்தார். ஒலிபரப்பாளராகப் பணியைத் தொடங்கியந.பழநிவேலு , நிகழ்ச்சித் தயாரிப்பாளராக 1968-ம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
ந.பழநிவேலு 1935-ம் ஆண்டு தமிழ் முரசு நாளிதழ் தொடங்கப்பட்டதிலிருந்து பகுதி நேரமாக எழுத்துப் பணியில் ஈடுபட்டு இலக்கியப் படைப்புகளை எழுதினார்.
வானொலிப் படைப்புகள்
ந.பழநிவேலு தமது 20 ஆண்டு கால வானொலிப் பணிக் காலத்தில் இசை நாடகங்கள், சமூக நாடகங்கள், பாடல் நிகழ்ச்சிகள், உரையாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார்.
நாடகங்கள்
1934-ம் ஆண்டு இவரது முதல் மேடை நாடகமான 'ஜானி ஆலம்’ மேடையேறியது. எனினும் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் சார்பில் நார்த் பிரிட்ஜ் சாலை அலெக்ஸாண்டிரா அரங்கில் அரங்கேறிய 'சுகுண சுந்தரம் அல்லது சாதி பேதக் கொடுமை’ (1936), 'கௌரி சங்கர்’ (1937) ஆகிய சீர்திருத்த நாடகங்கள் அவருக்கு பெரும் அறிமுகத்தைப் பெற்றுத்தந்ததுடன், நாடகத்துறையில் தீவிர ஈடுபாடு காட்ட உத்வேகமாக அமைந்தன.
கவிதைகள்
நாகூரைச் சேர்ந்த எம்.எம்.புகாரி என்பவர் சிங்கப்பூரில் தொடங்கிய 'நவநீதம்’ வார இதழில் ந.பழநிவேலுவின் முதல் கவிதை 'வலிமை’ 1931-ம் ஆண்டில் வெளியானது. ந.பழநிவேலு எழுதிய பலநூறு சிறுவர் பாடல்கள் இசையமைக்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டன. ந.பழநிவேலுவின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.பாரதிதாசன் மேல் தீவிர பற்றுக்கொண்டிருந்த ந.பழநிவேறு பாரதிதாசனின் பாரதிதாசன் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவர்.
சிறுகதைகள்
ந.பழனிவேலு எழுதிய முதல் சிறுகதை 'பிள்ளையார் கோவில் பிரசாதம்’ 1939-ம் ஆண்டு தமிழ் முரசு நாளிதழில் வெளிவந்தது.கல்கி, கி.வா.ஜகந்நாதன், ரா.பி. சேதுப்பிள்ளை, வாணிதாசன் போன்றவர்கள் இவரது ஆதர்ச எழுத்தாளர்கள். சிங்கப்பூர் – மலேசிய நாளிதழ்களாக தமிழ் முரசு, தமிழ் நேசன், தமிழ் மலர் உள்ளிட்ட நாளிதழ்களிலும் மாதவி, இந்தியன் மூவி நியூஸ், கலைமலர் உள்ளிட்ட பல மாத இதழ்களிலும் மற்றும் தமிழக, இலங்கை இதழ்களிலும் எழுதியுள்ளார்.1935 முதல் 1960 வரை கிட்டத்தட்ட 50 சிறுகதைகள் எழுதியுள்ளார்.
ஏற்பு
ந.பழநிவேலுவின் கவிதைகள் சிங்கப்பூர் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூர் புனைகதைத் தொகுப்பு தொகுதிகள் II, IIa & III - ஆசியான் இலக்கியத் தொகுப்பு (1990), சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் கலைகள் மன்ற வெளியீடான சிங்கா (SINGA) இதழ், SingaPoetry: an anthology of Singapore poems (2015) உட்பட பல தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. 2003-ம் ஆண்டில் இவரது படைப்புகள் குறித்து தமிழாசிரியர்கள் கருத்தரங்கம் நடத்தினர். இவரது படைப்புகள் குறித்து தமிழக பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமைப்புப் பணிகள்
ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ந.பழநிவேலு இலக்கியம், நாடகங்கள் சீர்த்திருத்தக் கொள்கைகளைப் பரப்பினார். 1933-ல் தமிழர் சீர்திருத்தச் சங்க நாடகக் குழுவில் இணைந்த ந.பழநிவேலு, 1933-ல் குழுவின் தலைவரானார். 1949 வரையில் அப்பதவியில் நீடித்த அவர், தமிழர் சீர்த்திருத்தச் சிந்தனையை வலியுறுத்தி கவிதைகள், கதைகள், மேடை நாடகங்கள் எழுதினார். சீர்திருத்தச் சங்கத்தின் தொடக்ககால உறுப்பினராக சங்கத்துக்கு நிதி திரட்ட, மற்ற பல பணிகளுடன் நாடகம் போடத் தொடங்கினார். நாடங்களை எழுதி, இயக்கியதுடன், சங்க உறுப்பினர்களுக்கு பெரும்பாலும் தொழிலாளர்களுக்கு நடிப்பு, பாட்டு போன்றவற்றில் அளித்து நடிகர்களை உருவாக்கினார். சிங்கப்பூர் கலைஞர்களாலேயே நடத்தப்பட்ட முதல் நாடகம் என்ற பெருமையைத் தன்னுடைய நாடகம் பெறுகிறது என்று பழநிவேலு குறிப்பிட்டுள்ளார். நாடகங்கள் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் சங்கத்துக்கு பேருதவியாக இருந்துள்ளது. பல நாடகக்குழுக்களில் நாடகம் எழுதுவது, பாடல் எழுதுவது, நடிப்பது என தொடர்ந்து பங்காற்றியுள்ளார். இயல்பாகவே இசை ஞானம் பெற்றிருந்த ந.பழநிவேலு பல பாடல்களை எழுதி, இசையமைத்துள்ளார். மற்றவர்கள் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். சீர்திருத்தக் கொள்கையாளராக இருந்தபோதிலும் பிற்காலத்தில் பக்திப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
மறைவு
ந. பழநிவேலு தனது 92-ம் வயதில் நவம்பர் 11, 2000 அன்று இயற்கை எய்தினார்.
இலக்கிய இடம்
சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய, மூத்த கவிஞராக இடம்பெறுவர் ந.பழநிவேலு. சிங்கப்பூரில்தமிழ் இலக்கியம் உருவாகி வந்த தொடக்க காலகட்டத்தில் இயன்ற எல்லா ஊடகங்களிலும் எல்லா இலக்கிய வடிவங்களிலும் தீவிரமாக எழுதி வழிகாட்டியவர். அடுத்த தலைமுறையை பயிற்சி அளித்து உருவாக்கியவர். மரபார்ந்த இலட்சியவாதம் வெளிப்படும் அவருடைய படைப்புகள் அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கையூட்டி இலக்கிய வாழ்க்கைக்கு தூண்டுதல் அளித்தன.
’எளிமையான மொழியில் அறசிக்கல்களைப் பேசும் நீதிக்கதைகள் இவை என்று பொதுவாக வரையறுக்கலாம். இங்கு இலக்கியத்தின் அடிப்படைக் கவலைகளும் நிலைபாடுகளும் உருவாகிவந்த வரலாற்றைக் காட்டும் படைப்புகள் இவை ’என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்
விருதுகள்
- 1978 - சிங்கப்பூர் நாட்டியப் பள்ளியின் நாடக சிகாமணி
- 1980 - முத்தமிழ்ச் செம்மல் தமிழர் சங்கத்தின் பட்டம்
- 1987 - இலக்கியப் பங்களிப்புக்காக சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் அளிக்கப்பட்டது.
- 1987 - சிங்கப்பூர் இந்திய நுண்ககலைக் கழகத்தின் கலா ரத்னா விருது
- 1997 - சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தமிழவேள் விருது
நூல் பட்டியல்
- கவிதை மலர்கள் - 1947-ல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அணிந்துரையுடன் சிங்கப்பூர் தமிழ் முரசின் வெளியீடாக வந்தது.
- காதற்கிளியும் தியாகக் குயிலும் (சிறுகதைத் தொகுப்பு, 1976)
- கலியின் நலிவு (நாடக நூல், 1981)
- பாப்பா பாடல்கள் (சிறுவர் பாடல்கள், 1990)
- கவிஞர் ந பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (இரு தொகுப்புகள்) 1997, 1999
- பாவலர் ந பழநிவேலுவின் கவிதைத் தொகுப்பிலிருந்து சில முத்துக்கள் (ஆங்கில மொழியாக்கத்துடன் தேசிய
- நூலகம் வெளியிட்ட நூல், 2013)
உசாத்துணை
- N. Palanivelu, Tamil-Language Playwright, Poet, Essayist and Novelist; Esplanade.com Oct 2016
- N. Palanivelu | Singapore Infopedia, nlb.gov.sg
- N Palanivelu, Cultural Medallion 1986, artshouselimited.sg
- Palanivelu Natesan, Communities of Singapore (Part 2), Accession Number 000588, Reel/Disc 1-13’
- திராவிட இயக்கம் அளித்த முதல்விதை | எழுத்தாளர் ஜெயமோகன்
- சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும் | எழுத்தாளர் ஜெயமோகன்
- Abstract: Voices of Singapore Tamil Writers, Maalan
- Raman, "Living By His Pen."
- Irene Hoe, "Cultural Medallion for 7," Straits Times, 10 February 1987, 1. (From NewspaperSG)
- Prabhavathi Dass, "Jewel Award for Two Fine Arts Pioneers," Straits Times, 25 September 1987, 10. (From NewspaperSG)
- "தமிழவேள் விருது," சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், accessed 25 October 2018.
- "Obituary," Straits Times, 12 November 2000, 48. (From NewspaperSG)
- சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
- திராவிட இயக்கம் அளித்த முதல் விதை ஜெயமோகன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:35 IST