under review

தாட்சாயணி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Added First published date)
 
Line 43: Line 43:


[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF தாட்சாயணியின் நூல்கள் நூலகத்தில்]
[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF தாட்சாயணியின் நூல்கள் நூலகத்தில்]


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|29-May-2023, 14:19:52 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]

Latest revision as of 12:05, 13 June 2024

தாட்சாயணி

தாட்சாயணி (இயற்பெயர் : பிரேமினி; பிறப்பு: மே 7, 1975 ) ஈழ எழுத்தாளர், கவிஞர். ஈழத்திலிருந்து 1994 முதல் புதிய தலைமுறை பெண் எழுத்தாளராக பல்வேறு துறைகளிலும் தொடர்ச்சியாக இயங்கிவருகிறார். தாட்சாயணியின் 'தீ நிழல்' 2022-க்கான ஸீரோ டிகிரி குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்கள் தொகுப்பில் இடம் பெற்றது.

பிறப்பு - கல்வி

தாட்சாயணி இலங்கையின் வட. மாகாணத்தின் சாவகச்சேரி என்ற இடத்தில் சபாரத்தினம் - யோகாம்பிகை இணையருக்கு மே 7, 1975 அன்று பிறந்தார். தாட்சாயணியின் இயற்பெயர் பிரேமினி. தனது ஆரம்பக் கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவிலும் உயர் கல்வியை யாழ். இந்து மகளிர் கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியவற்றிலும் நிறைவு செய்தார். பின்னர், விஞ்ஞானமாணிக்கான படிப்பினை (இளங்கலை அறிவியல்) யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திலும் பிராந்தியத் திட்டமிடல் துறையில் முதுமாணிப் படிப்பினை (முதுகலை) யாழ். பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் பூர்த்திசெய்தார்.

தனி வாழ்க்கை

தாட்சாயணி 2003-ல் பொது முகாமைத்துவ உதவியாளராக அரசாங்கப் பணியில் நுழைந்து, 2005-ல் ஆசிரியராகி, 2006-ல் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து, தற்போது பிரதேச செயலாளராகக் கடமையாற்றுகிறார். தாட்சாயணியின் கணவர் பெயர் இரட்ணசபாபதி பொன்னம்பலம்.

இலக்கிய வாழ்க்கை

உயர்கல்வி கற்கும்காலத்தில் கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகியவற்றின் மூலம் தாட்சாயணி எழுத்துத் துறைக்குள் நுழைந்தார். 1994 -ல் சுபமங்களா ஈழச் சிறப்பிதழில் சபா.பிரேமினி எனும் பெயரில் இவரது முதல் கவிதை பிரசுரமாகியது. அதேஆண்டு, கல்லூரி இதழான தாமோதரனில் 'இரத்தப் பூமாலை' எனும் முதற் சிறுகதை வெளியானது. 1997-ல், தினகரன் வாரமஞ்சரியில் வெளியான 'ஓ... என் அழகிய கிராமமே' எனும் சிறுகதையே 'தாட்சாயணி' எனும் புனைபெயரோடு எழுதப்பட்ட முதல் சிறுகதை ஆகும். அதன் பிறகு, தொடர்ச்சியாக இப்புனைபெயரையே பயன்படுத்தி வருகிறார்.

தினகரன், உதயன், சஞ்சீவி, தினக்குரல்,நமது ஈழநாடு, சுதந்திரப் பறவைகள், சுடர் ஒளி, சங்குநாதம், ஈழநாதம், தீம்புனல் ஆகிய பத்திரிகைகளிலும் சுபமங்களா, அம்பலம், ஞானம், அமுது, கலைமுகம், தாயகம், ஏகலைவன், மல்லிகை, வெளிச்சம், நங்கூரம், உள்ளம், புதிய தரிசனம், ஜீவநதி, சிறுகதை மஞ்சரி, யாத்ரா, வியூகம் ஆகிய சிற்றிதழ் சஞ்சிகைகளிலும் தமிழோசை, சக்கரம், அறிவியல் ஊற்று, தாமோதரன் ஆகிய கல்வி நிறுவன சஞ்சிகைகளிலும் நடு, ஊடறு, வல்லினம், சொல்வனம், அகழ், கலகம், பதாகை, வாசகசாலை, வனம் ஆகிய இணைய இதழ்களிலும் தாட்சாயணியின் படைப்புகள் வெளியாகியுள்ளன.

தாட்சாயணி இதுவரை சுமார் 150 சிறுகதைகளும், 120 கவிதைகளும், 30 கட்டுரைகளும் ஒரு குறு நாவலும் எழுதியுள்ளார்.

இலக்கிய இடம்

தாட்சாயணியின் எழுத்துக்கள் ஈழத்தில் போர் உக்கிரமுற்றிருந்த காலப்பகுதியில் வாசகர்களுக்கு அறிமுகமானவை. இவரது புனைவுகளும் கவிதைகளும் ஆரம்பத்தில் போர் நிகழ்ந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் பற்றியதாயிருந்தன. இவரது கதைகள் போர் ஏற்படுத்திய அகவயமான காயங்கள் பற்றிய புறச்சித்தரிப்புக்களை அதிகம் பேசின. பிரதிகளில் இலட்சியவாத அணுகுமுறையும் வாசகர்களுடன் நேரடியாகப் பேசும் தன்மையும் செறிவாக இருந்தது.

தாட்சாயணியின் சிறுகதைகள் குறித்து எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் குறிப்பிடும்போது - "வாழ்க்கையில் காணப்படும் பலதரப்பட்ட அம்சங்களையும் பல்வேறு கோணங்களில் பார்க்கும் தன்மை தாட்சாயணியிடம் இயல்பாகவே இருக்கின்றது. போரின் வடுவினை பதிவு செய்யும் தாட்சாயணியின் கதைகள் அழுத்தத்துடன் கூடிய தனித்துவமானவை" - என்கிறார்.

எழுத்தாளர் தெணியான் தனது மதிப்பீட்டின்போது "தாட்சாயணியிடம் தெளிவான சமூகப் பார்வையிருக்கின்றது. சமதரையில் ஆற்றுநீர் ஓடுவதுபோன்ற மொழி ஓட்டம், வீச்சு வெற்றுச் சலசலப்பின்றி ஓடிக்கொண்டிருக்கிறது. தமது ஆக்க இலக்கியப் பரப்புக்களை சராசரி வாசகர்களும் வாசித்து விளங்கிக்கொள்ளவேண்டுமெனும் இலக்கிய - சமூக - அக்கறை இவரது எழுத்துக்களில் புலப்படுகின்றது" - என்று குறிப்பிடுகிறார்.

நூல்கள்

சிறுகதை

  • ஒரு மரணமும் சில மனிதர்களும் (2005)
  • இளவேனில் மீண்டும் வரும் (2007)
  • தூரப் போகும் நாரைகள் (2008)
  • அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும் (2011)
  • ஒன்பதாவது குரல் (2019)
  • வெண்சுவர் (2021)
  • ராணியம்மா (2021)

குறு நாவல்

தீ நிழல் - (2022)

ஆன்மிக உரைநடை

கடவுளோடு பேசுதல் (2009)

கவிதை

யாருக்கோ பெய்யும் மழை (2021)

பிறமொழிகளில்

'ரங்கநாதனும் ரஞ்சித் பெரேராவும்', 'ஒரு மரணமும் சில மனிதர்களும்', 'சோதனைகள்' ஆகிய சிறுகதைகளும், சில கவிதைகளும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

விருதுகள்

  • வடமாகாண சிறந்த சிறுகதை நூல் விருது (2007) - 'இளவேனில் மீண்டும் வரும்'
  • கலைச்சுடர் விருது - கலைஞர்களுக்கான அரச விருது - இந்து கலாசாரத் திணைக்களம் (2019)
  • அரச இலக்கிய விருது (2019) - 'ஒன்பதாவது குரல்'
  • ஸீரோ டிகிரி குறுநாவல் போட்டி விருது (2022) -'தீ நிழல்'

உசாத்துணை

தாட்சாயணியின் வலைத்தளம்

தாட்சாயணியின் நூல்கள் நூலகத்தில்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-May-2023, 14:19:52 IST