under review

பி.ஏ. தாஸ்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected errors in article)
 
(One intermediate revision by one other user not shown)
Line 137: Line 137:
* 25 வருட பத்திரிக்கையில்‌ நான் (சுய வரலாற்றுத் தொடர்), அன்னையின்‌ அருட்சுடர்‌ இதழ், கும்பகோணம், 1973-74
* 25 வருட பத்திரிக்கையில்‌ நான் (சுய வரலாற்றுத் தொடர்), அன்னையின்‌ அருட்சுடர்‌ இதழ், கும்பகோணம், 1973-74
* [https://marinabooks.com/category/%e0%ae%aa%e0%ae%bf.%e0%ae%8f.%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d?authorid=1878-7172-5772-4536 பி.ஏ. தாஸ் நூல்கள்: மெரீனா புக்ஸ்]
* [https://marinabooks.com/category/%e0%ae%aa%e0%ae%bf.%e0%ae%8f.%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d?authorid=1878-7172-5772-4536 பி.ஏ. தாஸ் நூல்கள்: மெரீனா புக்ஸ்]
{{Second review completed}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|17-Jun-2024, 19:01:40 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 20:46, 24 June 2024

பி.ஏ. தாஸ் (பிறப்பு: ஜூன் 27, 1927) எழுத்தாளர், இதழாளர், கட்டுரையாளர், நாடக ஆசிரியர், திரைக்கதை-வசன உதவி ஆசிரியர், தெருக்கூத்து நடிகர். கிறிஸ்தவ சமயம் சார்ந்த பல படைப்புகளை எழுதினார். 'கிறித்தவ அருட் கலைஞர்' உள்ளிட்ட பல பட்டங்களைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

பி.ஏ. தாஸ், மயிலாடுதுறை அருகே உள்ள தென்னங்குடி கிராமத்தில், ஜூன் 27, 1927 அன்று, பெரியநாயகம் பிள்ளை - பாப்பாத்தி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். தொடக்கக் கல்வியை மாயவரத்தில் படித்தார். உயர்நிலைக் கல்வியை தஞ்சாவூரில் உள்ள தூய அந்தோணியார் பள்ளியில் கற்றார். 1945-ல் பள்ளி இறுதி வகுப்பை முடித்தார்.

தனி வாழ்க்கை

பி.ஏ. தாஸ், தபால் தந்தித் துறையில் பணியாற்றினார். இலக்கிய ஆர்வத்தால் பணியிலிருந்து விலகினார். சில காலம் கிராமங்களில் காலரா தடுப்பு ஊசி போடுபவராகப் பணியாற்றினார். சென்னை தூய மேரி ஐரோப்பிய உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின் இதழாளராகப் பணியைத் தொடர்ந்தார்.

பி.ஏ. தாஸ் மணமானவர். மனைவி: பிலோமினா. இவருக்கு 5 பெண், 2 ஆண் பிள்ளைகள்.

இலக்கிய வாழ்க்கை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை பி.ஏ. தாஸின் உறவினர். பி.ஏ. தாஸ் வேதநாயகம் பிள்ளையைத் தனது முன்னோடியாகக் கொண்டார். பி.ஏ. தாஸின் முதல் சிறுகதை, ’அதிர்ஷ்டம்‌,' ஏப்ரல் 15 1947-ல். சுதேசமித்திரன் ஞாயிறு மலரில் வெளியானது. அதே வாரத்தில் ‘ஆசிய ஜோதி’ இதழில் ‘என் தாயே’ என்னும் தலைப்பிலான இரண்டாவது சிறுகதை வெளியானது. அவை தந்த ஊக்கத்தால் தொடர்ந்து இதழ்களுக்கு எழுதினார்.

பி.ஏ. தாஸின் சிறுகதைகள் சுதேசமித்திரன், ஆசியஜோதி, லோகோபகாரி, தமிழ்மணி, தினசரி, காண்டீபம்‌. சக்தி, மங்கை, பிரசண்டவிகடன்‌, ஆனந்தபோதினி, தொழிலாளர்‌, பொன்னி, மதுரம்‌, ராணி முதலிய இதழ்களில் வெளியாகின. 'சத்தியபோதினி', சர்வவியாபி, நல்லாயன்‌, சற்பிரசாரதூதன், கத்தோலிக்கன், பூக்கூடை, தர்ம நீதி, அன்னையின்‌ அருட்சுடர்‌ போன்ற‌ கிறிஸ்தவ இதழ்களில் சிறுகதைகள் எழுதி கிறிஸ்தவ எழுத்தாளராக அறிமுகமானார். முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். இந்தியாவின்‌ முதல்‌ விமான ஓட்டியின்‌ வாழ்க்கை வரலாற்றை ‘ஒரு விமானியின் கதை’ என்ற தலைப்பில் தினமணி கதிர் இதழில் எழுதிப் புகழ்பெற்றார். தமிழ்நாடு தேவ அழைத்தல் பணி நிலையம் மூலம் தாஸ் எழுதிய பல நாடகங்கள் நூலாக்கம் பெற்றன. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களித்தார். பி.ஏ. தாஸ், சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் என நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

நாடகம்

பி.ஏ. தாஸ், 1962-ல், ‘வேளாங்கண்ணி நாடக மன்றம்’ என்பதை நிறுவி, அதன் மூலம் சிலுவையின் நிழல், எரிமலை முதலிய நாடகங்களை அரங்கேற்றினார். டொன்போஸ்கோ கலைமன்றம் மூலம் பி.ஏ. தாஸின் ’குருதி குடித்த ஈட்டி’ நாடகம் அரங்கேறியது. இந்நாடகம் ஐம்பதுக்கும் மேற்பட்ட தடவை மேடையேறியது. கிறிஸ்துமஸ் திருநாளின்போது இவரது நாடகங்கள் பல வானொலியில் ஒலிபரப்பாகின.

திரையுலகம்

பி.ஏ. தாஸ், ’ஸ்டெல்லா திரைப்படக் குழு’வில் திரைக்கதை ஆசிரியராகப் பணியாற்றினார். பின் அதிலிருந்து விலகி சுதந்திர திரைக்கதை ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ்த் திரைப்படங்களின் விவாதங்களில் கலந்துகொண்டு உதவி கதை, வசன ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

இதழியல்

பி.ஏ. தாஸ், கத்தோலிக்க மாத இதழான ‘நல்லாயன்’ இதழில் 1948 முதல் 1951 வரை துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1953 முதல், ’விஜயா’ இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1956-ல், ’சுதந்திரம்’ இதழில் இணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1963-ல், ‘மதுரம்’ இதழில் இணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1965-ல், தினமணி கதிர் இதழில் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1987-ல் பணி ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகும் குங்குமம், முத்தாரம் முதலிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்..

பதிப்பகம்

பி.ஏ. தாஸ், 1955-ல், ’விடிவெள்ளி’ என்ற பதிப்பகத்தை நிறுவினார். ’கவியும் ரோஜாவும்’ என்ற தனது சிறுகதைத் தொகுதியை வெளியிட்டார். தொடர்ந்து பல நூல்களை வெளியிட்டார்.

விருதுகள்

  • வி.ஜி.பி. இலக்கிய விருது
  • அருட் கலைஞர் பட்டம்
  • பாளையங்கோட்டை வீரமாமுனிவர் கழகப் பரிசு
  • வேலூர் பாரதிசோலை வாசகர் வட்டம் வழங்கிய இலக்கிய முரசு விருது
  • இலக்கிய நண்பர் வட்டம் அளித்த கிறித்தவ அருட் கலைஞர் பட்டம்

மதிப்பீடு

பி.ஏ. தாஸ் பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை, நாவல்களை, நாடகங்களை எழுதினார். பெரும்பாலான படைப்புகளில் கிறிஸ்தவச் சிந்தனைகள் மிகுதியாக இடம்பெற்றன. கலைத்தன்மையுடன் கூடிய பல சமயப் பிரசார படைப்புகளை எழுதினார். பி.ஏ. தாஸ், கிறித்தவ எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவராகவும், தனது எழுத்துக்களின் மூலம் கத்தோலிக்கக் கிறித்தவச் சிந்தனைகளை முன் வைத்த எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

சிறார் இலக்கியம்
  • இயேசுநாதர் கதைகள்
  • நவீன டார்ஜனின் காதலி
சிறுகதைகள்
  • அதிர்ஷ்டம்
  • என் தாயே
  • துன்பத்திலே பூக்கும் இன்பம்
  • கண் திறக்குமா?
  • இரு சகோதரிகள்
  • இறுதி மூச்சில்
  • சிரிப்பு
  • துடிப்பு
  • புன்னகை
  • பார்ட்டி பலே ஜோர்
  • வறுமைப்புலி
  • சைத்ரீகம் அருள்
  • சுதந்திர பூமி
  • புதுவாழ்வு
  • அபாக்யவதி சாந்தி
  • சபதம்
  • தீபம் ஏற்றினோம்
  • கவியும் ரோஜாவும்
  • கைலாச நிழலில்
  • நிர்மலா
  • செந்தாமரை
  • வேல்விழி
  • கிறிஸ்துமஸ் பரிசு
  • தண்டனை
  • குழலோசை
  • நிலத்துக்கு உரியவன்
  • ரோஜாப்பூ
  • இடியும் மின்னலும்
  • வங்காள அரன்மனையில்
  • கிரேஸியும் ஜான்சியும்
  • ஊஞ்சல்
  • நோய் + மருந்து = திருமணம்
  • கிறிஸ்துமஸ் பரிசு - நான்கு பாகங்கள்
  • மனைவி என்று ஒரு சொல்
  • மேரி - ஜோசப் பிலாஸ்
  • மானே நீ சொல்...!
  • கௌரி சங்கர்.
  • பண்டிகை அன்று
  • மலர்களிலே நீ மல்லிகை
  • எனக்கென வாழ்ந்தவள்
  • தலை கிறிஸ்துமஸ்
  • மன்னிப்பு
நாவல்கள்
  • இயேசுவின் அருள் பெற்ற மங்கை
  • கனவு
  • சிலுவைமுத்து
  • ரோஜாப்பூ
  • புனர் ஜென்மம்
  • முள்ளில் ரோஜா
  • எரிமலை (வரலாற்று நாவல்)
  • மங்கை பெற்ற மகிமை (வரலாற்று நாவல்)
குறு நாவல்
  • வண்டிக்காரன
  • என்‌ நாடே
நாடகம்
  • நம்பிக்கை நட்சத்திரம்
  • தொழுவத்தில் பிறந்த ஜோதி
  • கருணையின் முன் கடையன்
  • வாழ்வின் ஒளி
  • சிலுவையின் நிழல்
  • குருதி குடித்த ஈட்டி
  • தூரத்துப்பச்சை
  • தணியாத தாகம்
  • ஒளி பிறந்தது
  • எங்கிருந்தாலும் வாழ்க
  • சபதம்
  • ரோஜாப்பூ
  • இருதுருவம்
  • மூவரில் ஒருவன்
  • வேதியர் மகன்
  • இதய கீதம்
வாழ்க்கை வரலாறு
  • ஒரு விமானியின் கதை
சுய வரலாறு
  • 25 வருட பத்திரிகை உலகில்‌ நான்‌

உசாத்துணை

  • பி.ஏ. தாஸின் இலக்கியப் படைப்புகளும் இதழ்ப்பணியும், வி. ஆனந்தமூர்த்தி, பதினெட்டாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, தொகுதி -3, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், அண்ணாமலை நகர், முதல் பதிப்பு: 1986
  • 25 வருட பத்திரிக்கையில்‌ நான் (சுய வரலாற்றுத் தொடர்), அன்னையின்‌ அருட்சுடர்‌ இதழ், கும்பகோணம், 1973-74
  • பி.ஏ. தாஸ் நூல்கள்: மெரீனா புக்ஸ்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Jun-2024, 19:01:40 IST