under review

முருகேசப் பண்டிதர்

From Tamil Wiki

முருகேசப் பண்டிதர் (பூ. முருகேச பண்டிதர்) (1880 - செப்டம்பர் 3, 1898) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், தமிழாசிரியர், கவிஞர். பிழைகளை சுட்டிக் காட்டுவதில் வல்லவர் என்பதால் 'இலக்கணக் கொட்டர்' என்று அழைக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் பூதப்பிள்ளைக்கு மகனாக 1880-ல் பிறந்தார். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர், நீர்வேலிச் சிவசங்கரப் பண்டிதர் ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.

ஆசிரியர்கள்
  • உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர்
  • நீர்வேலிச் சிவசங்கரப் பண்டிதர்

ஆசிரியப்பணி

முருகேச பண்டிதர் கும்பகோணத்திலிருந்த கல்லூரியில் தேர்வு எழுதாமலே தலைமைப் பண்டிதராக பணியாற்றினார். சிதம்பரம், கும்பகோணம், சென்னை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தமிழாசிரியராக இருந்தார். சுன்னாகம், அளவெட்டி, கோப்பாய், சிறுபிட்டி, மல்லாகம், முதலிய இடங்களில் ஆசிரியப்பணி செய்து வந்தார். சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர், வண்ணார்பண்ணை நாவலர் கோட்டத்து ஆ. முத்துத்தம்பி பிள்ளை முதலானோர் இவரின் மாணவர்கள். இவர்களை தோடஞ்ஞர்(பிழைகளை சுட்டிக் காட்டுவதில் வல்லவர்கள்) என்றும் அழைத்தனர்.

மாணவர்கள்
  • அ. குமாரசாமிப் புலவர்
  • ஆ. முத்துத்தம்பி பிள்ளை

இலக்கிய வாழ்க்கை

முருகேச பண்டிதர் கவி புனையும் ஆற்றல் கொண்டவர். கண்டனக் கவிகள், விநோதச் சிலேடை, நடுவெழுத்தலங்காரம் முதலிய கவிகள் பலவும் பாடியுள்ளார். இலக்கிய ஆற்றலுடன் இலக்கணப் பயிற்சியுமிருந்ததாலும், பிறரின் இலக்கியப் பிழைகளை சுட்ட வல்லவரும் ஆதலால் 'இலக்கணக் கொட்டர்' என்றும் அழைக்கப்பட்டார். ஆறுமுக நாவலரின் பேரில் நிந்தாஸ்துதி பாடினார் பின்னர் இருவரும் நண்பர்கள் ஆயினர். 'மயிலணிச் சிலேடை வெண்பா', 'ஊஞ்சல், பதிகம்' எழுதினார். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார். 'நீதி நூறு', 'பதார்த்த தீபிகை' ஆகிய நூல்களை எழுதினார்.

மறைவு

முருகேச பண்டிதர் செப்டம்பர் 3, 1898-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • குடந்தை வெண்பா
  • மயிலணிச் சிலேடை வெண்பா
  • சந்திரசேகர விநாயகர் ஊஞ்சல்
  • நீதி நூறு
  • பதார்த்த தீபிகை

உசாத்துணை


✅Finalised Page