under review

தொண்டைமான் முத்தையா

From Tamil Wiki

தொண்டைமான் முத்தையா (ஏப்ரல் 22, 1879 - ஜூன் 26, 1936) தமிழ்ப்புலவர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் மற்றும் நிழற்படக்கலைஞர்.

பிறப்பு, கல்வி

தொண்டைமான் முத்தையா ஏப்ரல் 22, 1879-ல் சிதம்பர தொண்டைமானுக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக்கல்வி பயின்றார். நாசரேத்தில் மூன்று ஆண்டுகள் ஓவியக்கலை பயின்று அரசுத் தேர்வில் வென்றார். சென்னை ஓவியக்கல்லூரியில் மூன்றாண்டுகள் பயின்றார்.

தனிவாழ்க்கை

மதுரையில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினார். திருச்சூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் வேலை பார்த்தார். தென்னிந்திய ரயில்வேயில் அம்பாசமுத்திரத்தில் வேலை பார்த்தார். இந்துக்கல்லூரியில் ஓவிய ஆசிரியராக முப்பது ஆண்டுகள் பணியாற்றினார். இருபத்தி ஒன்றாம் வயதில் ஆண்டிச்சியம்மாளை மணந்தார். ஓராண்டில் மனைவி இறந்ததால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தொ.மு பாஸ்கரத்தொண்டைமான், தொ.மு. ரகுநாதன் இவரின் மகன்கள். ஓவியம், நிழற்படம் பிடித்தலில் ஆர்வமாக இருந்தார். திருநெல்வேலி டேவிஸ்துரையிடம் பாராட்டைப் பெற்றவர். திரு நெல்வேலி-திருச்செந்தூர் புகைவண்டிப்பாதையைத் திறந்து வைப்பதற்கு வந்த வில்லிங்டனுக்கு கொடுக்கப்பட்ட நிகழ்ச்சிக்குறிப்பு தாளில் திருநெல்வேலியை மையமாகக் கொண்டு வரைந்த ஓவியங்களுக்காக பாராட்டுப் பெற்றார். சைவ சமயப்பற்றாளர்.

இலக்கிய வாழ்க்கை

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் செய்யுள் எழுதினார். இரங்கற்பாக்கள், கவிதைகள் பாடினார். தொண்டைமான் பத்திரிக்கையை நடத்தினார். சமூக முன்னேற்றம் சார்ந்த கட்டுரைகளை எழுதினார். தென்காசி குருமூர்த்தித் தொண்டைமான், பாளையங்கோட்டை மனகாவலப்பெருமாள் தொண்டைமான் ஆகியோர் இவருக்கு உதவினர். புதுக்கோட்டை விஜயரகுநாத துரைராஜத் தொண்டைமானுக்கு 143 அடிகள் கொண்ட மெய்க்கீர்த்தி பாடினார். ரவீந்திரநாத் தாகூரின் கவிதைத் தொகுப்பில் ஆறு பாடல்களை மொழிபெயர்த்தார். ராஜாராம் மோகன் மீது வாழ்த்துபாடல்களைப் பாடினார். தியானச் சிந்தனைகள், இந்தியச்சிற்பம் என்பவை இவர் எழுதிய உரைநடை நூல்கள்.

பாடல் நடை

நெல்லை நாயகர் குறம்

தெருவதனில் என்னையொத்த சிறுமியரோ டன்று
சிரித் துமணல் வீடுகட்டித் திரியுமியல் பறித்து
கருவதனில் உனைக்கலந்த கண்ணாள னென்று
கைபிடித்தார் நெல்லை நகர்க் கடவுளார்நன் மாதே

மறைவு

தொண்டைமான் முத்தையா தன் ஐம்பத்தியெட்டாவது வயதில், ஜூன் 26, 1936-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • திருவொற்றியூர் தியாகேசர் காதல்
  • நெல்லை நாயகர் குறம்
  • அருள்கடன் விண்ணப்பம்
  • தனி நிலைக்கவிகள்
  • ஆட்கொண்ட பதிகம்
  • பகவத்கீதை அகவல்
  • பிரமமுக்தம்
  • தியானச் சிந்தனைகள்
  • இந்தியச்சிற்பம்

உசாத்துணை


✅Finalised Page