under review

ஜோதி (இதழ்)

From Tamil Wiki
ஜோதி இதழ் (பர்மா)

பர்மாவில் இருந்து வெளிவந்த தமிழ் இதழ் ’ஜோதி’. வெ. சாமிநாத சர்மா இதன் ஆசிரியராக இருந்தார். ஆகஸ்ட் 1937-ல் முதல் இதழ் வெளியானது. பிப்ரவரி 1942 வரை வெளிவந்தது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக இதழ் நின்று போனது.

எழுத்து, பிரசுரம்

ஜோதி, ஆகஸ்ட் 1937 முதல் பிப்ரவரி 1942 வரை பர்மாவிலிருந்து வெளியான தமிழ் இதழ். கண. முத்தையா இதன் நிர்வாகியாக இருந்தார். வெ. சாமிநாத சர்மா இதன் ஆசிரியர். இலக்கியம், அரசியல், பொருளாதாரம், அறிவியல் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விதழ் வெளிவந்தது.

'ஜோதி’ - பெயர்க் காரணம்

'ஜோதி’ என்னும் பெயர்க் காரணம் பற்றி அதன் முதல் இதழில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. "பெய்ஸ்பூர் காங்கிரஸின் போது, அணையாத அமர ஜோதியை ஏற்றி வைத்தார் பண்டித ஜவஹர். 'நமது ராஷ்டிரபதியினால் ஏற்றி வைக்கப்பெற்ற இந்த ஜோதி எப்பொழுதும் அணையாது’ என்று மகாத்மா ஆசீர்வாதம் செய்தார். அதையே நாமும் நமது 'ஜோதி’க்கும் பொருத்தமாக எடுத்துக் கொள்கிறோம். ஏனென்றால் நாம் சர்வாநுகூலவாதிகள். ராஷ்டிரபதியின் ஆசீர்வாதமாகிற ரட்சாபந்தனத்துடன் நாம் வெளியே புறப்படுகிறோம். எனவே, இடர்ப்படோம், அவர் தம் ஆசிச் செய்தியில் நமக்கு வழிகாட்டியிருக்கிறார். அவ்வழியிலேயே செல்வோம்..." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோதி இதழ் தொடங்கப்பட்டதற்காக பண்டித ஜவஹர்லால் நேரு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார். அதில், "ஜோதி என்ற புதிய சித்ரசகிதமான மாதப்பத்திரிகை, பாமர ஜனங்களின் முன்னேற்றத்திற்காகவும், பூரண சுயராஜ்யத்திற்காகவும் உழைக்கும் என்று அறிகிறேன். ஆதலின் அதற்கு எனது நல்லாசி. இந்தியா - பர்மா ஒத்துழைப்புக்காகவும், இந்தியர்களுக்கும் பர்மியர்களுக்கும் இடையே சினேக மனப்பான்மை அதிகரிக்கவும் அது வேலை செய்யும் என்று நம்புகிறேன். என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உள்ளடக்கம்

ஜோதியின் முதல் இதழ் 104 பக்கங்களுடன் வெளியானது. டிசம்பர் 1937-ல் வெளியான இதழ் 112 பக்கங்கள் கொண்டிருந்தது. பிப்ரவரி 1938-ல் 120 பக்கங்களுடன் வெளியானது. ஆனால், 1940-ல் போர்ச்சூழல் நிலவிய நேரத்தில் பக்கங்களின் எண்ணிக்கை 60 ஆகக் குறைந்திருக்கிறது. இதழ் ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் முதல் வாரத்தில் வெளி வந்தது. 'சித்ரசகிதமான’ என்று கூறியிருப்பதற்கேறவாறு, படங்களுடனும், கேலிச் சித்திரங்களுடனும் இதழ் வெளியானது. ஆண்டு சந்தா பர்மாவுக்கு ரூபாய் நான்கு; இந்தியாவுக்கு நான்கு ரூபாய் எட்டு அணா. மலேசியா மற்றும் பிற நாடுகளுக்கு ஆறு ரூபாய். ஜோதி இதழுக்கென்று தனி அச்சகமும் இருந்தது. ஆரம்பத்தில் 1000 பிரதிகள் மட்டுமே வெளியாகி நஷ்டத்தை எதிர்கொண்டது ஜோதி. அதன் பின் ஜோதி இதழின் நிர்வாக ஆசிரியராக கண. முத்தையா பொறுப்பேற்றார். அவர், பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி இதழின் விற்பனையை அதிகரித்து நஷ்டத்திலிருந்து மீட்டார்.

ஜோதி இதழ் வெளியீடு பற்றி கண. முத்தையா

ஜோதி இதழ் வெளியீடு பற்றி கண. முத்தையா, "ஜோதி ஓர் அரசியல் மாத இதழ். வெ. சாமிநாத சர்மா அவர்களின் அரசியல் கருத்துகளைப் பரப்புவதை மட்டுமே கவனத்தில் கொண்டு வெளியாகியது. சுமார் 40 பேர் முதலீட்டில் 1939-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பத்திரிகை ஆயிரம் பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்படும். அந்த ஆயிரத்திலும் அறுநூறுக்கு மேல் விற்காது. இதனால் ஒரு வருடத்துக்குள்ளாகவே நஷ்டம் ஏற்பட்டது. முழுக்க முழுக்க ஓர் அரசியல்வாதியின் கருத்துகளை மட்டுமே வெளியிடும் தமிழ்ப் பத்திரிகையை யார்தான் வாங்கிப் படிப்பார்கள்?

'ஜோதி’ பத்திரிகையில் நானும் ஒரு முதலீட்டாளன். பத்திரிகையின் போக்கை என்னால் சகிக்க முடியவில்லை. 'பத்திரிகையில் சீர்திருத்தம் செய்யவேண்டும். அரசியலுடன் இலக்கியத்தையும் சேர்த்து வெளியிட வேண்டும். மக்களின் விருப்பத்திற்கேற்ப ஜனரஞ்சகமான Light reading கொடுத்தால்தான் அதிக விற்பனையை எதிர்பார்க்க முடியும்’ என்றெல்லாம் கருத்து தெரிவித்தேன். முதலீட்டாளர்கள் யாருக்கும் இலக்கியச் சிந்தனையோ, இலக்கியத்தின் மீது ஈடுபாடோ விருப்பமோ கிடையாது; வெறும் விற்பன்னர்கள் அவ்வளவுதான். நான் என் கருத்தைச் சொன்னதும், கோபமடைந்த எல்.நடேசன் தனது இயக்குநர் பொறுப்பை ராஜினாமா செய்தார். பத்திரிகையை என்னிடம் ஒப்படைத்து 'லாபகரமாக நடத்திக்காட்டுங்கள் பார்க்கலாம்’ என்று சவால் விட்டார்.

நான் 'ஜோதி’ இதழ் இயக்குநரான பிறகு நிர்வாகத்திலும், இதழ் அமைப்பிலும், செய்திகளிலும் நிறைய மாற்றங்களைச் செய்தேன். பர்மாவில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கிடைக்காது. அதனால், முழுக்க முழுக்க விற்பனையை மட்டுமே நம்பி செயல்பட்டேன். 'ஜோதி’ பத்திரிகைக்கென்று தனி அச்சகமே இருந்தது. அதில் மாதத்தில் ஆறு நாட்களுக்கு மட்டுமே பத்திரிகை வேலை நடக்கும். மீதமுள்ள 24 நாட்களும் பூட்டியேதான் இருக்கும். அந்த நாட்களில் வெளி வேலை செய்ய ஏற்பாடு செய்தேன். அதில்கூட தமிழ் வேலை அதிகம் கிடைக்காது. ஆங்கிலம்தான். இது போன்ற என்னுடைய சில சீர்திருத்தங்களால் 'ஜோதி’ இதழ் நஷ்டத்திலிருந்து மீண்டு லாபகரமாக இயங்கத் தொடங்கியது. [1]" என்று குறிப்பிட்டுள்ளார்.

பங்களிப்புகள்

ஜோதி இதழில் வெ. சாமிநாத சர்மா, வறுமைப் புலவன், தேவகவி, சரித்திரக்காரன், குயில், வி.தேவாச்சாரி, குடியேறியவன், ஓர் அரசியல் மாணாக்கன், பரணன், வி.எம். நாகேஸ்வர சாஸ்திரி, வருணன், தேவதேவன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், வ. பார்த்தசாரதி, வெங்கைக்கிழான், ஓர் உபாசகன், ஸ்ரீவத்சன், துரோணன், ச.முனிசாமிபிள்ளை, வியாசன், குடியேறியவன், தேவாச்சாரியார், கணக்காயன், ஒரு காங்கிரஸ்வாதி, சாமி, கு. ராஜாராம், வழிப்போக்கன், வெ.சா, புதுமாப்பிள்ளை, சரசா, ஓர் ஆசிரமவாசி, ஜோதி எனப் பல புனை பெயர்களில் எழுதியுள்ளார்.

ஆரம்பத்தில் அரசியலுக்கும், அரசியல் கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளியான ஜோதி, பின்னர் சிறுகதைகள், கட்டுரைகளுக்கு அதிக முக்கியம் அளிக்க ஆரம்பித்தது. மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் 'ஜோதி’யில் இடம் பெற்றன. 'துலாக்கோல்’ என்னும் தலைப்பில் நூல் மதிப்புரைகளும் வெளியாகின.

நூல் மதிப்புரை

நவயுகப் பிரசுராலயம் வெளியிட்ட 'புதுமைப்பித்தன் கதைகள்’ நூல் பற்றிய விமர்சனம் பின்வருவது. இதை எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. "புதுமைப்பித்தனின் கற்பனைகள் உயர்ந்த ரகத்தில் இல்லை. இதனால்தான் இவருடைய கதைகளுக்கு அமையும் பாத்திரங்களும், இவர்களுக்கேற்பட்ட சூழல்களும் உண்மையான ரஸாநுபவத்திற்கு முரணாயிருக்கின்றன. 'கவந்தனும் காமனும்’, 'பொன்னகரம்’ முதலிய கதைகளை நம்மால் சகிக்கவே முடியவில்லை. நவீன தமிழ் இலக்கியத்திற்கு, இந்த சிறுகதைத் தொகுதி சோபையைக் கொடுக்கும் என்று யாராவது கருதுவார்களானால், அவர்களைக் குறித்தும் தமிழ் இலக்கியத்தைக் குறித்தும் நாம் அநுதாபப்படுகிறோம்." (ஜோதி இதழ் மே, 1940, பக்-84)

ஆனால், இதே புதுமைப்பித்தனின் கதைகள் 'ஜோதி’ இதழில் வெளியாகத் தொடங்கும் போது, அவரைப் பற்றி வெளியான குறிப்பு : "சிறுகதைகள் படித்து மன உற்சாகம் பெறுகிற தமிழன்பர்களுக்கு 'புதுமைப்பித்தன்’ புதியவரல்லர். இவருடைய சிறுகதைகள் ஆழமானவை; கருத்து நிரம்பியவை. இவரை 'ஜோதி’ வாசகர்கள் அடிக்கடி சந்திப்பார்கள் என்பதைச் சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்."

புதுமைப்பித்தனின் ஆறு சிறுகதைகள் 'ஜோதி’யில் வெளியாகியுள்ளன. அவை: பூச்சாண்டியின் மகள் (லூயி கெனப்பிரசின் மொழி பெயர்ப்பு), அபிநவ ஸ்நாப், நியாயந்தான். உபதேசம், புரட்சி மனப்பான்மை, விபரீத ஆசை என்பனவாகும்.

கடித இலக்கியம்

'கடித இலக்கியம்’ என்னும் துறையை வளர்ப்பதிலும் 'ஜோதி’யின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. வெ. சாமிநாத சர்மா, 'கனகாவின் கடிதங்கள்’ என்னும் தலைப்பில், ஏழு சிறுகதைகளை 'சரசா’ என்னும் புனை பெயரில் எழுதினார். 'மகனே உனக்கு’ என்ற தலைப்பில், வ. பார்த்தசாரதி என்ற புனைபெயரிலும் கட்டுரைத் தொடரை எழுதியுள்ளார் மேலும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

'ஜோதி’யில் வெ.சாமிநாத சர்மா எழுதிய பல கட்டுரைகளை, தலையங்கங்களைத் தொகுத்து பின்னர் பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் நூல்களாக வெளியிட்டது.

தமிழ்ப் பிரயோகங்கள் - ஒரு வேண்டுகோள்

மேற்கண்ட தலைப்பில் கீழ்காணும் அறிவிப்பு ஜோதியில் வெளியாகியுள்ளது.

"அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலிய முக்கிய துறைகளில் வழங்கப்பெறும் சொற்கள், தமிழிலே சரியாகக் கொண்டு வரப்படவில்லை. அப்படியே கொண்டு வரப்பட்டாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பிரயோகம் செய்து வருகின்றனர். சில சமயங்களில் பல ஆங்கிலப் பதங்களுக்கும் ஒரே தமிழ் வார்த்தையைத் தான் உபயோகிக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக, (Constitution, Act, law) என்ற ஆங்கில பதங்களனைத்திற்கும் 'சட்டம்’ என்ற ஒரே சொல்லைத்தான் உபயோகிக்கிறோம். அப்படியே Dominion என்பதற்கும் Colony என்பதற்கும் 'குடியேற்ற நாடு’ என்றுதான் சொல்கிறோம். இங்ஙனம் பல உதாரணங்களைக் காட்டலாம். இதனால் பொது ஜனங்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்தச் சிரமத்தினின்று அவர்களை விடுவிப்பது அறிஞர்களுடைய முக்கிய கடமையாகின்றது."

மேற்கண்டவாறு குறிப்பிட்டத்தோடு நில்லாமல் ஆங்கிலக் கலைச் சொற்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்களைக் கண்டறியும் வகையில் அவ்வப்போது அது குறித்து எழுதியும் வந்தது.

சிறுகதைகள், கட்டுரைகள், சுற்றுலா, வரலாறு, அறிவியல், இலக்கியம், அரசியல் எனப் பல பகுதிகளுக்கும் 'ஜோதி’ இதழ் முக்கியத்துவம் கொடுத்தது.

ஜோதியின் இறுதி இதழ்

இரண்டாவது உலகப் போரின் காரணமாக, பர்மாவின் தலைநகர் ரங்கூன், ஜப்பானிய விமானங்களால் தாக்கப்பட்டது. அத்தகைய போர்ச் சூழலிலும் பல வகைகளில் முனைந்து 'ஜோதி’யைக் கொண்டு வந்தார் சாமிநாத சர்மா. ஆனால், அது தொடரவில்லை. குண்டு வீச்சில் அச்சகங்கள் பாதிக்கப்பட்டன. தபால் நிலையங்களும் செயல்படாமல் போயின. 1942, பிப்ரவரி இதழோடு 'ஜோதி’ முற்றுப்பெற்றது.

வரலாற்று இடம்

அயல்நாட்டில் தமிழ் வளர்த்த இதழ்களுள் ஜோதி முக்கியமானது. அரசியல், கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல் என்று அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட்டது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page