under review

கோ. நடேசய்யர்

From Tamil Wiki

To read the article in English: K. Natesa Iyer. ‎

கோ. நடேசய்யர் (1887 - 1947)
வெற்றியுனதே 1947

கோ. நடேசய்யர் (ஜனவரி 14, 1887 - நவம்பர் 7, 1947) தமிழகத்தில் பிறந்து இலங்கை மலையகத்தில் வாழ்ந்த தமிழறிஞர், பதிப்பாளர், அரசியல்வாதி, இதழாசிரியர், எழுத்தாளர். இலங்கைத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி.

பிறப்பு, கல்வி

கோதண்டராம நடேசய்யர் தமிழ்நாடு விழுப்புரம் (அப்போதைய தென்னாற்காடு) மாவட்டம் வளவனூரில் கோதண்டராம ஐயர் - பாகீரதம்மாள் தம்பதியருக்கு 14 ஜனவரி 1887 -ல் பிறந்தார். அரசுப்பள்ளியில் ஆங்கில பொதுக்கல்வி கற்றவர், 1907 -ல் வங்கப்பிரிவினை காலத்தில் ஏற்பட்ட தேசிய உணர்வால் ஆங்கிலப் படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார். சென்னை அரசுப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து கைத்தொழில் பயிற்சி பெற்றார். சிலகாலம் நெசவுத்தொழில் மேற்கொண்டார். பின் வியாபாரம் குறித்த படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார். தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் தொழில்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ், மற்றும் ஆங்கில மொழிகளில் நல்ல தேர்ச்சியுடையவர்.

நடேசய்யர் மனைவி மீனாட்சி

தனிவாழ்க்கை

கதிர்காமம்

தனது முதல் மனைவி இறந்த பின் மீனாட்சி அம்மையை மனைவியாக ஏற்றுக்கொண்டார். மனைவி மீனாட்சியம்மாள், மலையகத் தமிழ் கவிஞர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். குறிப்பாக இலங்கை பெண்களின் வாக்குரிமைக்காக செயல்பட்டவர். 1920--ம் ஆண்டு இலங்கைக்கு தனது மனைவி மீனாட்சி அம்மையாருடன் வந்த நடேசய்யர் மலையகத் தொழிலாளரின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அறிந்து இலங்கையிலேயே நிரந்தரமாகத் தங்கி மலையகத்தமிழர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டார்.

நடேசய்யரின் முயற்சியால் 1914, 1915--ம் ஆண்டுகளில் இந்தியாவில் தென்னிந்திய வியாபாரிகள் சங்கம், தென்னிந்திய மில்காரர்களின் சங்கம், தஞ்சை மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் போன்றவை ஆரம்பிக்கப்பட்டன. 'வர்த்தக மித்திரன்’ பத்திரிகைக்காக இலங்கையிலும் சந்தா சேர்த்தார். தென்னிந்திய வர்த்தகர்களின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள 1919--ம் ஆண்டு கொழும்புக்கு சென்றார் நடேசய்யர். அதன்பின் அவர் வாழ்க்கை கொழும்பில் கழிந்தது.

தொழிற்சங்கப்பணி

1930-ல் மலையகத்தின் தோட்ட அடிவாரத்தில், ஹட்டன் நகரில் குடியேறிய நடேசய்யர் தொடர்ந்து தோட்டங்கள் தோறும் சென்று மக்களிடையே உரையாற்றினார். தோட்டங்களில் அன்று அன்னியர் அனுமதிக்கப்படாத காரணத்தால் புடவை வியாபாரியாக தோட்டங்களுக்குள் ஊடுருவிச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்தார். நடேசய்யருடன் அவர் மனைவி மீனாட்சி அம்மையாரும் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக செயலாற்றினார். தொழிலாளர்களுக்காக இருவரும் பாடிய "தொழிலாளர் சட்டக்கும்மி' பாடல்கள் புகழ்பெற்றவை.

தோட்டங்களில் வேலைசெய்பவர்களின் துயர்களை ஆவணப்படித்தி அச்செய்திகளுடன் இந்தியாவுக்கு சென்று இலங்கை வாழ் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வு பற்றி பிரசுரமொன்றை 1919-ல் வெளியிட்டார்.

சிம்லா கூட்டம்

மலேசியா, இலங்கை, பர்மா, மேற்கிந்திய தீவுகள், பிஜி, கிழக்காபிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆங்கிலேயர்களின் தோட்டங்களில் வேலை செய்வதற்காக குடியேற்றப்பட்ட இந்தியர்களின் நிலை பற்றி அறிவதற்காக 1922 ஆண்டு இந்தியாவில் சிம்லாவில் ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெற்றது. இலங்கையில் இருந்து சென்ற தூதுக்குழுவில் வில்லியம்ஸ், வில்கின்சன் ஆகிய ஆங்கிலேயர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் இலங்கையில் வேலை செய்வதற்காக மேலும் இந்தியர்களை கொண்டு வருவதை தூண்டும் எண்ணத்தை கொண்டிருந்தனர். சென்னையில் தொழில் மந்திரியாக இருந்த பி. என். சர்மாவின் அழுத்தத்தினால் நடேசய்யர் அந்தக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டார்.

நடேசய்யர் 500 தோட்டத் தொழிலாளர்களிடம் அவர்களின் அவல நிலைகளை விளக்கும் வாக்குமூலங்களை ரகசியமாக பெற்றுக் கொண்டு சிம்லா சென்று அக்கூட்டத்தில் சமர்ப்பித்தார். இவ்வாக்குமூலங்களை இந்திய அரசாங்கம் ஏற்கக்கூடாதென தோட்ட உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டனர். 'நடேசய்யர் ஒரு விரும்பத்தகாத கிளர்ச்சிக்கார்’ என்றும் அவரது சாட்சியங்களை ஏற்க கூடாதுதென்றும் கேட்டு தந்தியொன்றை இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பியது. சாட்சியங்கனை பதிவு செய்வதற்கு பொறுப்பாக இருந்த சர்மா 'கிளர்ச்சிகாரர்கள் உண்மை பேசக்கூடும்’ என்று கூறி நடேசய்யரின் சாட்சியங்களை பதிந்து கொண்டார். 500 வாக்கு மூலங்களும் தொழிலாளர்களின் கண்ணீர் கதையென கூறி அவர் அவற்றை சமர்பித்தார். அத்துடன் 'சிட்டிசன்’ பத்திரிக்கையில் வெளிவந்திருந்த தோட்டத் தொழிலாளர் வாழ் நிலை பற்றிய ஆசிரியர் தலையங்கங்களை சான்றாக சமர்பித்தார்.

இதன் விளைவாக இந்தியர்களை இங்கு கொண்டு வருவதில் கட்டுபாடுகளையும் சில ஒழுங்குகளையும் கொண்ட குடியகல்வு சட்டவிதிகள் இலங்கையிலும் இந்தியாவிலும் ஆக்கப்பட்டன. இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின் விவகாரங்களுக்கு பொறுப்பாக தொழில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

தோட்டத்தொழிலளார்கள் மதுவுக்கும், சூதாட்டத்துகு;கும் அடிமையாவதை எதிர்த்து பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை நடேசையர் மேற்கொண்டார். தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இதையடுத்து தோட்டங்களில் இராப் பாடசாலைகள் நடாத்தப்பட்டன.

இலங்கை தொழிலாளர் யூனியன்

1920 ல் ஏ.ஈ.குணசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தொழிலாளர் யூனியன் நடவடிக்கையில் நடேசய்யர் ஈடுப்பட்டு குணசிங்கவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு உதவினார். 1927-ம் ஆண்டு நடைபெற்ற துறைமுக வேலைநிறுத்தத்தில் பணியாற்றினார். 1928-ம் ஆண்டு ஏ. ஈ குணசிங்க இலங்கையில் தொழில் செய்த மலையாளிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தபோது அதை கண்டித்தமையால் நடேசய்யரை குணசிங்க இலங்கை தொழிலாளர் யூனியனில் இருந்து வெளியேற்றினார்.

அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சம்மேளம்

1931-ல் நடேசய்யர் அகில் இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை அமைத்தார்.

அரசியல் வாழ்க்கை

நடேசய்யர் இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவாளர். 1930களில் அன்னி பெசன்ட், திலகர் போன்ற இந்திய சுதந்திர இயக்க தலைவர்களை இலங்கைக்கு அழைத்து சுதந்திர போராட்ட கருத்துகளையும் பரப்பினார். 1921-ம் ஆண்டு இலங்கைக்கு வந்த மணிலாலை இங்கே தங்க வைத்து பிரித்தானிய காலனிக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சித்தார்

1924--ம் ஆண்டு இலங்கை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். 1929 -ம் ஆண்டு நடைபெற்ற சபைக்கான தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. பின்னர் 1936--ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஹட்டன் தொகுதியில் வெற்றிபெற்றார். 1947--ம் ஆண்டு வரை இலங்கை இந்தியக் காங்கிரசின் சார்பில் அங்கம் வகித்தார். 1947--ம் ஆண்டு ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்..

1940களில் மாக்சியம் பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் நடேசையர் கவனம் செலுத்தியதாக அறிய முடிகிறது ஆனால் தன்னை அவர் மாக்சியராக செல்லிக்கொள்ளவில்லை என்று அவர் வரலாற்றுக் குறிப்பை எழுதிய சட்டத்தரணி இ. தம்பையா கருதுகிறார்.

தேசபக்தன் இதழ்

இதழியல்

ஆங்கிலேயரின் வணிக ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர்கள் எழவேண்டுமென்ற நோக்கில் 1914-ல் வணிகர்களுக்காக ’வர்த்தகமித்திரன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி, நடத்தினார். 1920-ல் இலங்கைக்கு வந்த அவர் இலங்கை தேசிய காங்கிரஸ் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அருளானந்தன், டாக்டர் ரட்ணம் ஆகியோரினால் வெளியிட்டப்பட்ட தேசநேசன் என்ற தமிழ் தினசரிக்கு 1921 ஆண்டு முதல் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தினார். இது இலங்கையின் முதல் தமிழ் தினசரியாகும். அத்துடன் லாரி முத்துகிருஷ்ணாவுடன் த சிட்டிஷன் (1922)என்ற ஆங்கில பத்திரிகையையும் வெளியிட்டார். தேசபக்தன் (1924), போர்வாட் (1926), தொழிலாளி (1929), இந்தியன் எஸ்பேட் லேபர் (1929), இந்தியன் ஒப்பினீயன் (1936), தோட்டத் தொழிலாளி (1947) மற்றும் உரிமை போர், சுதந்திர போர், வீரம், சுதந்திரன் (1947) (தமிழரசுக்கட்சியின் இதழாக தொடர்ந்தது) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

கொழும்பு கண்ணாரதெருவில் 'தொழிலாளர் அச்சுக்கூடம்’ என்னும் அச்சகத்தை நிறுவி இதழ்களை வெளியிட்டார். . அவருக்கெதிராக இந்தியன் (1924), சத்தியமித்திரன் (1927) ஆகிய பத்திரிகைகள் கடுமையான கருத்துக்களை வெளியிட்டன. தோட்ட உரிமையாளர்ளின் நிதியுதவியுடன் 'ஊழியன்’ (1931) என்ற பத்திரிக்கை அவருக்குகெதிராக நடத்தப்பட்டது. இப்பத்திரிகைகளில் வெளி வந்த கருத்துகளுக்கு எதிராக தன் வாதங்களை முன்வைத்தார். தினகரன், வீரகேசரி பத்திரிகைகளிலும் எழுதினார்.

நடத்திய இதழ்கள்
  • வர்த்தகமித்திரன் (1914)
  • தேசநேசன் (1922-23)
  • தேசபக்தன் (1924-29)
  • தொழிலாளி (1929)
  • தோட்டத்தொழிலாளி (1947)
  • உரிமைப்போர்
  • சுதந்திரப்போர்
  • வீரன் சுதந்திரன்
  • சிட்டிசன் (1922)
  • ஃபார்வர்ட் (1926)
  • இந்தியன் ஒப்பினியன் (1936)
  • இந்தியன் எஸ்டேட் லேபர் (1929)

இலக்கியப் பணி

மலையக இலக்கியத்தின் பிதா என்று கோ. நடேசய்யர் குறிப்பிடப்படுகிறார். இலங்கை மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்களை தொகுப்பது, புதிய நாட்டுப்புறப் பாடல்களை உருவாக்குவது ஆகியவற்றை நடேசையர் ஓர் இலக்கியச் செயல்பாடாகவே நிகழ்த்தினார். இலங்கை மலையக மக்களின் துயர்களை ஆவணப்படுத்தவும், அவர்களிடையே விழிப்புணர்வை உருவாக்கவும் கதைகளையும் நாவல்களையும் எழுதினார். தன் இதழ்களில் நடைச்சித்திரங்களையும் விமர்சனக்கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டார். 1914ல் ஒற்றன் என்னும் நாவலை நடேசையர் எழுதியிருக்கிறார். ஹட்டன் நகரில் சகோதரி என்ற அச்சகத்தை நடத்தினார். இதன் மூலம் தொடர்ந்து தன்னுடைய நூல்களையும் மனைவியின் நூல்களையும் வெளியிட்டுவந்தார்.

முதல் மலையகச் சிறுகதை

1931ல் 'நீ மயங்குவதேன்?’ என்ற பெயரில் நடேசையர் தன் சகோதரி பிரஸில் அச்சிட்டு வெளியிட்ட பதினொரு கட்டுரைகள் கொண்ட நூலில் ராமசாமி சேர்வையின் சரிதம் என்னும் கட்டுரை அதன் முன்னுரை பின்னுரைகளை நீக்கினால் ஒரு முழுமையான சிறுகதை என்றும், மலையக மக்களின் வாழ்க்கை பற்றிய முதல் இலக்கியப்பதிவு அது என்றும் தெளிவத்தை ஜோசப் தன் மலையகச் சிறுகதை வரலாறு என்னும் நூலில் குறிப்பிடுகிறார். 1992ல் வீரகேசரி இதழில் எழுதிய கட்டுரையில் ராமசாமிச் சேர்வையின் சரிதம் என்னும் கதையே மலையக இலக்கியத்தின் முதல் சிறுகதை என நிறுவியவர் மு.நித்தியானந்தன் என தெளிவத்தை ஜோசப் குறிப்பிடுகிறார்.

பிற நூல்கள்

கோ.நடேசையர் 1947ல் வெளியிட்ட வெற்றியுனதே என்னும் நூலில் அது நீ மயங்குவதேன் என்னும் நூலின் தொடர்ச்சி என்று குறிப்பிடுகிறார். அதிலுள்ளவை அக எழுச்சி நூல்கள் என்று சொல்கிறார். நடேசையர் எழுதிய இறுதி நூல் இது. இந்தியாவின் பாட்டியாலா மகாராஜாவின் செயல்களை ஆவணப்படுத்தும் புபேந்திரசிங்கள் அல்லது நரேந்திரபதியின் நரக வாழ்க்கை எனும் நூலை இரண்டு பாகங்களாக 1933-ல் வெளியிட்டார். இந்நூல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

மறைவு

கோ. நடேசய்யர் நவம்பர் 7, 1947 -ல் மாரடைப்பால் இலங்கையில் காலமானார்.

இலக்கிய இடம்

நடேசையர் முதன்மையாக தொழிற்சங்கவாதியும் அரசியல்வாதியுமாவார். அவருடைய இலக்கியப் பணி என்பது அந்த அரசியல்பணியின் ஒருபகுதியாக அவரால் செய்யப்பட்டது. மலையக வாழ்க்கையைச் சித்தரிக்கும் முதல்கட்ட சிறுகதைகள், நாவல் ஆகியவற்றை அவரே எழுதி பின்னர் வந்தவர்களுக்கு வழிகாட்டினார். நடேசையர் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையை இலக்கியத்தில் நேரடியாக பதிவுசெய்த முன்னோடி என சி.வி.வேலுப்பிள்ளை கொழுந்து காலாண்டிதழில் 19988 ஜனவரி -மார்ச் இதழில் எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார். மலையக இலக்கியத்தின் முதல்படைப்பு என்று சொல்லப்படும் ராமசாமிச் சேர்வையின் சரிதம் நடேசையருக்கு இலக்கிய முன்னோடியின் இடத்தை அளிக்கிறது.

நூல்கள்

வெளியீடு 1941
எழுதியவை
  • இன்சூரன்ஸ் (1910)
  • ஆயில் இன்ஜின்கள் (1910)
  • வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் முறைகளும் (1910)
  • கணக்குப்பதிவு நூல் (1914, தஞ்சாவூர்)
  • ஒற்றன் (நாவல், 1914)
  • வெற்றியுனதே
  • நீ மயங்குவதேன் (கட்டுரைத் தொகுப்பு, 1931)
  • இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம் (1941, இரண்டாம் பதிப்பு: 2018)
  • இந்தியா இலங்கை ஒப்பந்தம் (1941)
  • தொழிலாளர் சட்டப் புத்தகம் (1942)
  • அழகிய இலங்கை (1944)
  • Indo Ceylon Crisis (1941)
  • கதிர்காமம் (1946)
பதிப்பித்த நூல்கள்
  • இந்தியத் தொழிலாளர் துயரங்கள் - பாடல் தொகுப்பு (1933). மீனாட்சி அம்மையார்
  • இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை (1940) - மீனாட்சி அம்மையார்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page