under review

கார்கடல் (வெண்முரசு நாவலின் பகுதி - 20)

From Tamil Wiki
கார்கடல் ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 20)

கார்கடல்[1] ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 20) துரோணரின் மரணம் வரையிலான குருக்ஷேத்திரப் போரைப் பற்றி விவரிக்கிறது. அறம் தவறியவர்களை அழித்து, அறத்தைக் காப்பதற்காக எழுந்த குருஷேத்திரப் போர் இருதரப்பினராலும் அறத்தைக் கொல்லும் போராக மாறிவிட்டது. இரண்டு தரப்பிலும் அறம் தவறியவர்கள் படைக்கலம் ஏந்த, இடையில் அகப்பட்டுச் சிதறுகிறது பேரறம்.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் 20-ம் பகுதியான 'கார்கடல்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் டிசம்பர் 2018 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு மார்ச் 2019-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

'கார்கடல்’ கிழக்கு பதிப்பகம் வெளியீடாக ஜூன் 2020-ல் அச்சுப் பதிப்பில் வந்தது.

ஆசிரியர்

'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

'கார்கடல்’ முழுக்க நால்வரின் நோக்குநிலையில் கூறப்பெற்றுள்ளன. பார்பாரிகன் இடும்பர்களுக்கும் அரவான் நாகர்களுக்கும் ஏகாக்ஷர் பேரரசி காந்தாரிக்கும் சஞ்சயன் பேரரசர் திருதராஷ்டிரருக்கும் குருஷேத்திரக் களத்தின் நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றனர். அவர்கள் அனைவருமே தெய்வ மேறியவர்களைப் போல, போரையும் போரிடுவோரின் உளநிலையையும் சேர்த்தே பிறருக்கு உரைக்கின்றனர்.

குருஷேத்திரப் போர் ஒவ்வொருநாளும் ஓர் உச்சத்தைத் தொட்டே தணிகிறது. போர் தொடங்குவதற்கு முந்தைய நிமிடங்கள் மிக முக்கியமானவை. இருதரப்பினரும் தம் வஞ்சங்களை மீண்டுமொருமுறை திரட்டித் தொகுத்துக் கொள்ளும் தருணமது.

'கார்கடல்’ முழுக்க நிகழும் போரை முற்றிலும் நிகழ்த்துவன நாகங்களே!. நாகங்களே படைக்கலமாகின்றன. அந்தப் படைக்கலத்தை ஏந்திய வீரர்களாக நாகங்களே அமைகின்றன. இருள்செறிந்த பாதாளத்தில் அலையாடும் இருட்கடலிலிருந்து அலையலையாக நாகங்கள் வெளிப்படுகின்றன.

நாகங்கள் மண்ணுக்கு மேல் தலைநீட்டும் பசும்புல்போல நிலம்முழுக்க நிறைகின்றன. குருஷேத்திரப் போர்க்களம் முழுவதுமே நாகங்களால் ஆளப்படும் நிலமாகிவிடுகிறது. வஞ்சத்தையே தம் நஞ்சாகக் கொண்ட எல்லா வகையான நாகங்களும் கௌரவர்களின் தரப்பில் அணிவகுத்து விடுகின்றன. அவற்றுக்குத் தலைமையேற்கிறார் கர்ணன்.

நாகருலகம், கர்ணனுக்கும் நாகருக்குமான தொடர்பு, நாகநச்சு அம்பினைக் கர்ணன் பெறுதல், கர்ணனின் மனைவியை நாகினி அழைத்துச் செல்லுதல் எனக் கார்கடலில் கர்ணனுக்கும் நாகருக்குமான பிணைப்பு விரிவாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. நாகருக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு மண்ணுலகத்துக்கும் பாதாள உலகத்துக்குமான அறுக்க இயலாத தொடர்பாகக் காட்டப்பட்டுள்ளது. மரத்தின் வேரென மனிதர்களின் வஞ்சம் நாகங்களாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. விதையின் இளந்தளிரென மனிதர்களின் அகவிழைவுகள் நாகங்களாக மண்ணைக் கீறி வெளிப்படுகின்றன.

போரை முன்னின்று நிகழ்த்தும் நாகங்களை எதிர்க்க இருளுலகிலிருந்து பறந்து வருகின்றன பறவையினங்கள்!. பறவைகளுக்கும் நாகங்களுக்குமான போரில் அவற்றைத் தாங்கியிருக்கும் அடிமைகளாக மாறிவிட்டனர் மனிதர்கள். இந்தப் பறவையினங்களுக்குத் தலைமையேற்கிறார் அர்சுனன்.

அர்சுனனுக்கும் கர்ணனுக்குமான போர் என்பது, நாகங்களுக்கும் பறவையினங்களுக்குமான போராக மாறிவிடுகிறது. ஒருவகையில், பாதாள உலகத்தை ஆளும் நாகங்களுக்கும் வானத்தை அளந்துதிரியும் பறவையினத்துக்குமான போர் என்று இதனைக் கூறலாம். அவை ஒன்றையொன்று எதிர்க்கும் களமாகக் குருஷேத்திர நிலம் அமைவுகொள்கிறது.

பத்மவியூகத்தில் அகப்பட்டு வீரமரணமடையும் அபிமன்யூ, மாயத்தால் பொழுதணையச் செய்து ஜயத்ரதனைக் கொல்லுதல், அனுமதிபெற்று ஊழ்கத்தில் அமர்ந்த பூரிசிரவஸ் சாத்யகியால் படுகொலைசெய்யப்படுதல், கர்ணன் ஏவிய நாகநச்சு அம்பால் கடோத்கஜன் உயிர்விடுவது, பொய்ச்செய்தி அளிக்கப்பட்டுக் களத்தில் வீழ்த்தப்படும் துரோணர் எனக் கார்கடலில் எண்ணற்ற அறமீறல்கள் பொங்கி எழுந்துள்ளன.

பாண்டவர்கள் தொடங்கிவைக்கும் இரவுப் போர் கார்கடலில் மிகச் சிறப்பாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இடும்பர் நிகழ்த்தும் இரவுப் போரை எதிர்கொள்ள வழிதெரியாமல் கௌரவப்படை சிதறி அழிகிறது.

குருஷேத்திரப் போர்க்களத்தில் துரோணரின் நெஞ்சில் 'ஸ்வம்’ என்ற அம்பினைப் பாய்ச்சி அவரைக் களம்வீழ வைக்கிறான் அர்சுனன். அப்போது திருஷ்டத்யும்னன் அறமற்ற செயலைச் செய்கிறான். அதன் தொடர்ச்சியாக அமலையாடுகிறான்.

கார்கடலில் இடம்பெற்றுள்ள அகவயமான தருணம் யாதவ அரசி குந்திதேவிக்கும் கர்ணனுக்கும் இடையே நிகழும் உரையாடல்தான். பேரரசி சத்தியவதியையும் திரௌபதியையும்விடச் சூழ்ச்சிகளிலும் சொல்வீச்சிலும் எண்ணியதை முடிக்கும் திறமையிலும் கைத்தேர்ந்தவர் யாதவ அரசி குந்திதேவிதான் என்பதை இந்த உரையாடல் வழியாக உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது. யாதவ அரசி குந்திதேவியால் எந்த நிலையிலும் தருக்கி நிற்கவும் முடிகிறது; எந்த நிலைக்கும் தாழ்ந்து செல்லவும் முடிகிறது. அந்த இருநிலையான மனநிலைதான் அவரைத் தன்னுடைய அனைத்துச் செயல்களிலும் வெற்றிகொள்ளச் செய்கிறது.

பிருஹத்காயர், அர்சுனன், பீமன், துச்சாதனன், துரோணர், சாத்யகி, பூரிசிரவஸ், திருஷ்டத்யும்னன் ஆகியோர் தம்முடைய குருதி உறவுடைய மைந்தர்களிடம், மூத்த அல்லது ஒரே மைந்தரிடம் கொள்ளும் பற்றுறவு கார்கடலில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.

கதை மாந்தர்

துரோணர், அர்சுனன், திருஷ்டத்யும்னன், அபிமன்யூ, பூரிசிரவஸ், கடோத்கஜன் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் பார்பாரிகன், அரவான், ஏகாக்ஷர், காந்தாரி, சஞ்சயன், திருதராஷ்டிரர், துரியோதனன், லஷ்மணன், கர்ணன், சாத்யகி ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page