under review

இடையன் சேந்தன் கொற்றனார்

From Tamil Wiki

இடையன் சேந்தன் கொற்றனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

இடையன் சேந்தன் கொற்றனார் முல்லை நிலத்தவர் என்பதை அவரது பெயரால் அறியலாம். இவரது இயற் பெயர் சேந்தன் கொற்றனார். இவரது தந்தையின் பெயர் சேந்தன் எனக் கருதப்படுகிறது. இந்தச் சேந்தன் காவிரிக்கரை ஆர்க்காட்டை ஆண்ட அழிசி என்பவனின் மகன்.

இலக்கிய வாழ்க்கை

இடையன் சேந்தன் கொற்றனார் இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் 375- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. பாழி நாட்டை வடுகர்களிடமிருந்து இளஞ்சேட் சென்னி கைப்பற்றுவதை இந்தப் பாடலில் கூறியதன் மூலம் சங்க காலதமிழர் வரலாற்றினை ஓரளவு விளக்கிக்‌ காட்டிய. புலவராக இடையன் சேந்தன் கொற்றனார் விளங்குகிறார்.

பாடலால் அறியவரும் செய்திகள்

  • பாலை நிலத்தில் கல்லா இளையர் (ஆறலைக் கள்வர்) வழிப்போக்கர்களைக் கொன்று, பொருள்களைக் கொள்ளையிட்டனர். தங்கள் வில் திறமையைச் சோதித்துப் பார்க்க பொருள் இல்லை என்றாலும் வழியில் செல்லும் புதியவர்களைக் கொன்று பறவைகளுக்கும் நரிகளுக்கும் அளித்தனர்.
  • இளம் பெருஞ்சென்னி என்ற மன்னன் தன் புகழை நிலைநாட்டுவதற்காகவும், தன் குடிமக்களைக் காக்கவும், பாழிநகரில் இருந்த செங்கோட்டையை அழித்தான். அந்தக் கோட்டையில் தன்னை எதிர்த்த வடுகர் குடிமக்களின் தலைகளை யானைக் காலால் மிதிக்கச் செய்து சவட்டினான்.

பாடல் நடை

அகநானூறு 375

பாலைத் திணை பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது

சென்று நீடுநர்அல்லர்; அவர்வயின்

இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை!

அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர்

கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும்

கல்லா இளையர் கலித்த கவலை,

கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும்

நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்,

அத்த எருவைச் சேவல் சேர்ந்த

அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல்,

எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன்

விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி

குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார்,

செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,

வம்ப வடுகர் பைந் தலை சவட்டி,

கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்,

அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர்

நோய் இலர் பெயர்தல் அறியின்,

ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே.

(இகுளை! “உன்னை விட்டுச் சென்றவர் திரும்பி வருவேன் என்று சொன்ன காலத்தை நீட்டிக்க மாட்டார், வருந்தாதே” என்று கூறுகிறாய். அதற்காக நான் வருந்தவில்லை. அவர் சென்ற இடத்து நிகழக் கூடியனவற்றை எண்ணி வருந்துகிறேன். அந்த வழியில் உள்ள கல்லா இளையர் தான் கற்றதில் தனக்குள்ள வில் திறமையைச் சோதித்துப் பார்க்கக்கூடியவர்கள். புதியவர்களிடம் பெறக்கூடிய பொருள் இல்லை என்றாலும் தம்மைச் சோதித்துப் பார்த்துக்கொள்வதற்காக, வழியில் செல்லும் புதியவர்களைக் கொன்று பறவைகளுக்கு ஊட்டிக் கும்மாளம் போடுவர்.நரிக்கூட்டம் உடல் கறியைத் தின்னும். வழியில் மேயும் ஆண் கழுகுகளின் விரல்களில் இரத்தக் கறை படிந்திருக்கும்.

போர்த் திறமையும், கணைய மரம் போன்ற தோள் வலிமையும் கொண்டவர் சோழர்களின் பெருமகன் இளம் பெருஞ்சென்னி அவன் தன் புகழை நிலைநாட்டுவதற்காகவும், தன் குடிமக்களைக் காப்பாற்றும் கடமைக்காகவும், விட்டகுறை தொட்டகுறையை முடிப்பதற்காகவும் பாழிநகரில் இருந்த செங்கோட்டையை அழித்தான். அந்தக் கோட்டையில் தன்னை எதிர்த்த வடுகர் குடிமக்களின் தலைகளை யானைக் காலால் மிதிக்கச் செய்து சவட்டினான். அப்படிப் பகைவரைக் கொன்ற யானையின் கொம்பு போல் காடே அச்சம் தருமாறு தோற்றமளிக்கும். அந்தக் காட்டு வழியில் அவர் சென்றிருக்கிறார். அவர் துன்பம் ஏதும் இல்லாமல் திரும்புகிறார் என்று தெரிந்தால் என் கண் அழாது அல்லவா?)

உசாத்துணை


✅Finalised Page