under review

அழகாபுரி அழகப்பன்

From Tamil Wiki
அழகாபுரி அழகப்பன்
அழகாபுரி அழகப்பன் குடும்பம்(வாணி ஜெயராமுடன்)
அழகாபுரி அழகப்பன் திரைப்படத்துறையில்
அழகாபுரி அழகப்பன் இளையராஜாவுடன்
அழகாபுரி அழகப்பன் திரையில்

அழகாபுரி அழகப்பன் (இயற்பெயர் இராம. சுப. அழகப்பன்; ஏப்ரல் 27, 1937- 2000) பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளைத் தந்த எழுத்தாளர், திரைக்கதை மற்றும் நாடக ஆசிரியர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

அழகாபுரி அழகப்பன் தேவகோட்டையில் உள்ள அழகாபுரியில், ஏப்ரல் 27, 1937 அன்று பிறந்தார். இயற்பெயர், இராம. சுப. அழகப்பன். உயர் கல்வியை முடித்த அழகப்பன், ஆசிரியர் பயிற்சி பெற்று, கவிஞர் கண்ணதாசன் பயின்ற, கா.அப்பாத்துரை ஆசிரியராகப் பணியாற்றிய அமராவதி புதூர் சுப்ரமணியம் செட்டியார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

தனி வாழ்க்கை

திருமணமானதும் காரைக்குடியில் வசித்தார் அழகாபுரி அழகப்பன். மகள் சந்திராதேவி, மகன் வானவர்கோன் இருவரும் எழுத்தாளர்கள். சந்திராதேவி ஆனந்தவிகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர். வானவர்கோனின் சிறுகதைகள் 'கல்கி’ இதழில் வெளியாகியுள்ளன. அழகாபுரி அழகப்பனின் பேத்தி கவிஞர் அழகுநிலா (புதுச்சேரி).

இலக்கிய வாழ்க்கை

இளம் வயதில் பாப்பா மலர், பாலர் மலர், அணில், ஜிங்லி, டமாரம் போன்ற இதழ்கள் அழகாபுரி அழகப்பனின் வாசிப்பார்வத்தை வளர்த்தன. மாணவப் பருவத்தில் படித்த ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் போன்ற இதழ்கள் எழுதத் தூண்டின. முதல் சிறுகதை, 1950-ல் பள்ளி மாணவராக இருக்கும்போது வெளியானது முதல் தொடர்ந்து எழுத முற்பட்டார். குமுதம் இதழ் நடத்திய இளமைக் கதை போட்டியில் இவரது சிறுகதையான ’ஒரு பஸ் நிற்க மறுக்கிறது’ 5000/- ரூபாய் பரிசுடன், வாசகர்களின் வரவேற்பையும் பெற்றது. அதுவே மாலைமதியில் அழகாபுரி அழகப்பன் பல்வேறு நாவல்கள் எழுதக் காரணமானது.

நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதியுள்ளார். இதழ்கள் நடத்திய பல்வேறு சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் நடுவராகச் செயல்பட்டிருக்கிறார்.

அழகாபுரி அழகப்பன், 'திரை’, நீரோடை, குங்குமச்சிமிழ், நிறைமதி, ரம்யா, கார்த்திகா, கலைப்பூங்கா, இதயம், மதிமுகில், தினமணி கதிர் போன்ற இதழ்களில் எழுதியுள்ளார். கோவை உப்பிலி பாளையத்திலிருந்து வெளிவந்த 'வான்மதி’ என்ற இதழுக்குத் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

திரைப்பட முயற்சிகள்

தேவராஜ்-மோகன் இயக்கிய 'சக்களத்தி' என்ற திரைப்படத்திற்கு அழகாபுரி அழகப்பன் கதை வசனம் எழுதினார். 'கண்ணில் தெரியும் கதைகள்’ படத்திற்கும் அமுதவனுடன் இணைந்து வசனம் எழுதினார். 'சக்களத்தி’ திரைப்படத்தில் டாக்டராக நடித்தார். பல்வேறு நாடகங்களை எழுதி, இயக்கினார்.

அழகாபுரி அழகப்பன் கல்கி இதழ் முதல் பரிசுச் சிறுகதை
அழகாபுரி அழகப்பன் - குன்றக்குடி அடிகளாருடன்.

விருதுகள், பரிசுகள்

  • விண்வெளி விஞ்ஞானக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும் ராஜாஜியின் பாராட்டும்
  • 2200 எழுத்தாளர்கள் பங்கு பெற்ற அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் (1976) முதல் பரிசு ரூபாய் 1000/-
  • தினமணிகதிர் நாவல் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 3000/-
  • குமுதம் இதழ் நடத்திய இளமைக் கதைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 5000/-
  • ஆனந்த விகடன் பொன் விழா சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு
  • சிறுகதைச் செம்மல் பட்டம்
  • கிராமிய எழுத்தாளர் பட்டம்
இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைப் பரிசு
  • சத்தியத்தின் கேள்வி (1978, ஜனவரி, ஆனந்த விகடன்)
  • ஒரு பஸ் நிற்க மறுக்கிறது (1982, ஜூன், குமுதம் )
  • கீரைக்கட்டு (1984, டிசம்பர், குங்குமம்)
  • ஒளிந்திருந்த வயோதிகம் (1986, ஜூலை, குங்குமம்)

ஆய்வு

  • அழகாபுரி அழகப்பன் நாவல்களை மையமாக வைத்து ஆய்வாளர் சி.சந்திரன், "அழகாபுரி அழகப்பன் புதினங்கள்-ஓராய்வு" என்ற தலைப்பில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார் [1] .

மறைவு

2000-ல் அழகாபுரி அழகப்பன் காலமானார்.

இலக்கிய இடம்

பொது வாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர். கிராமத்து நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதில் தேர்ந்தவராக இருந்தார். இவரது சிறுகதைகள் பள்ளி மாணவர்களுக்கான தமிழ்த் துணைப்பாட நூலில் இடம் பெற்றன.

நூல்கள்

  • சக்களத்தி
  • நீலக்கொலை
  • நள்ளிரவு நாயகி
  • பூங்காற்று திரும்புமா
  • புதுப் புதுப் பெண்கள்
  • கொல்லுவதெல்லாம் உண்மை
  • அதுவந்து நிற்கிறது
  • அவள் போட்ட கோலம்
  • அத்தானைப் பார்த்தீங்களா?
  • ஒரு மனைவி ஒரு குழந்தை ஒரு சந்தேகம்
  • நள்ளிரவு நாயகி
  • அவள் தனியாய் இருக்கிறாள்
  • கார்த்திகா கடத்தப்பட்டாள்
  • ஓர் இரவு ஒரு பிணம்
  • செல்வா காதலிக்கிறாள்
  • அவள் போட்ட கணக்கு
  • இரவல் கணவன்
  • வாரத்திற்கு எட்டு நாட்கள்
  • மதுரை லாட்ஜ் மஞ்சுளா
  • ரத்தம் இனிக்குதடா
  • ஒரு ரோஜா மலர்ந்தபோது
  • கிராமத்து அநியாயம்
  • எவ்வளவோ ஆபத்துக்கள்
  • திலகா ஒரு திறந்த வீடு
  • பிச்சிப் பூ வச்ச கிளி
  • யாருக்கு யார் காவல்
  • லதா லதா பாடி வா
  • நான் அவள் அல்ல
  • திகில் மாளிகை
  • காதல் ஜன்மங்கள்
  • அகதி வாழ்க்கை

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page