அல்லங்கீரனார்
அல்லங்கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
கீரனார் என்பது புலவரின் பெயர். அல்லம் என்பது கேரளத்தில் வழங்கும் அல்லனம் என்ற ஊராக இருக்கலாம் என புலவர் கா. கோவிந்தன் கருதினார்.
இலக்கிய வாழ்க்கை
அல்லங்கீரனார் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் 245-ஆவது பாடலாக உள்ளது. தோழிக்கும் தலைவிக்கும் இடையே நடக்கும் உரையாடலாக பாடல் அமைந்துள்ளது.
பாடல் வழி அறிய வரும் செய்திகள்
- முண்டக மலர்களில் சிறந்தனவற்றை ஆராய்ந்து பறித்து, கருமணி போன்ற கூந்தலின் ஐம்பால் (கூந்தல்) ஒப்பனையில் சூடிக்கொண்டு, தனிமைப் பட்டிருக்கும் நீரலையில் தோழியருடன் சேர்ந்து கடற்கரையில் விளையாடும் தலைவி.
- மெல்லிய இடையும், அகன்ற அல்குலும் கொண்டவளாய், தெளிவாக, இனிமையாகப் பேசும் தலைவி என சிறப்புரைக்கப்பட்டது.
- அணிகலன் பூட்டப்பட்ட தேரில் குதிரைகளை ஓட்டிக்கொண்டு வந்த தலைவன் தலைவியின் அழகில் மயங்கி அவளைக் காண வீட்டிற்கு வருகிறான்; அவனை முன்னரே கண்டு மயங்கிவிட்டிருந்த தலைவி அவன் அதை அறியாயதைக் கண்டு நகைக்கிறாள்.
பாடல் நடை
- நற்றிணை: 245 (நெய்தல்)
துறை: குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது
நகையாகின்றே தோழி! "தகைய
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ,
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி,
ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல்,
தெளி தீம் கிளவி! யாரையோ, என்
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?" என,
பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி,
தான் நம் அணங்குதல் அறியான், நம்மின்
தான் அணங்குற்றமை கூறி, கானல் 10
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி,
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-Nov-2023, 02:04:54 IST