வெ. வேதாசலம்
To read the article in English: V. Vedachalam.
முனைவர் வெ. வேதாசலம் (பிறப்பு: டிசம்பர் 20, 1950) தொல்லியல் ஆய்வாளர், கல்வெட்டு ஆய்வாளர், அருங்காட்சியகக் காப்பாட்சியர். கீழடி முதல் கட்ட அகழாய்வில் பங்கேற்றவர். தமிழகக் கல்வெட்டு, தொல்லியல் இடங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து பதிப்பிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறார். மதுரையைச் சுற்றியுள்ள சமணக் குன்றுகளை ஆய்வு செய்து 'எண்பெருங்குன்றம்' என்ற நூலை எழுதினார். தமிழகத் தொல்லியல் துறையின் முதுநிலைக் கல்வெட்டாய்வாளர், அகழாய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஐம்பது ஆண்டுகளாக தொல்லியல், கலை, வரலாற்றுப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
பிறப்பு, கல்வி
வெ. வேதாசலம் டிசம்பர் 20, 1950 அன்று மதுரை மாவட்டம் மதிச்சியத்தில் வெள்ளைச்சாமி, வேலம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் பதிமூன்று பேர். மதுரை ஷெனாய்நகர் அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை பயின்றார். 1969-70-ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.யு.சி. பயின்றார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
சென்னையிலுள்ள தமிழகத் தொல்லியல் துறையில் ஒரு வருடம் தொல்லியல் பயின்று 1975-ல் தமிழகத் தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். டில்லி நேஷனல் மியூசியத்தில் அருங்காட்சியியல் (மியூசியாலஜி) பயின்றுள்ளார். 'பாண்டிய நாட்டுச் சமுதாயமும் பண்பாடும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து மதுரை காமராஜர் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
வெ. வேதாசலம் 1980-ம் ஆண்டு கலாவதியை திருமணம் செய்துக் கொண்டார். வேதாசலம் - கலாவதி தம்பதியருக்கு திருநம்பி, திருநங்கை என இரண்டு குழந்தைகள். தற்போது குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருகிறார். கலாவதி கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றார்.
ஆய்வு பணி
வெ. வேதாசலம் பொ.யு. 1975-ம் ஆண்டு தமிழக தொல்லியல் துறையில் பணியில் இணைந்த பின் சென்னையில் கல்வெட்டுகளைப் படியெடுத்துப் பதிப்பிக்கும் பணியையும், அருங்காட்சிய அமைப்பு பணியும் மேற்கொண்டார். தொல்லியல் அகழாய்வுகளிலும் பங்கெடுத்தார். ஓய்வுக்குப் பின்னும் தனிப்பட்ட ஆர்வத்தால் தொல்லியல், கல்வெட்டு ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். 25-க்கு மேற்பட்ட புத்தகங்களும், நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
தொல்லியல் ஆய்வு
வேதாசலம் கரூர், மதுரை கோவலன்பொட்டல், தொண்டி, அழகன்குளம், திருத்தங்கல், மாங்குடி பகுதிகளில் நிகழ்ந்த தொல்லியல் ஆய்வுகளில் பங்கெடுத்துள்ளார். மதுரை கீழடியில் மத்திய தொல்லியல் துறையின் கீழ் நிகழ்ந்த முதற்கட்ட தொல்லியல் துறை அகழாய்வில் அமர்நாத் ராமகிருஷ்ணனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஐராவதம் மகாதேவனுடன் இணைந்து நான்கு ஆண்டுகள் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு செய்தார். பேரா. நொபுரு கரஷிமாவுடன் இணைந்துப் பணியாற்றியுள்ளார்.
வேதாசலம் ஓய்வுக்கு பின் சிந்து சமவெளிக்குச் சென்று தன்னார்வத்தால் அங்கே ஆய்வுகள் மேற்கொண்டார். இந்தியாவிலுள்ள வரலாற்று இடங்களுக்கு நேரடியாகச் சென்று அவற்றை பதிவு செய்து வருகிறார். கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலை நாட்டு வரலாற்று இடங்களுக்கும் பயணங்கள் மேற்கொண்டு வருகிறார்.
கல்வெட்டு பதிப்பு பணி
வேதாசலம் தமிழ் பிராமி, வட்டெழுத்து, தமிழ், கிரந்த எழுத்துகளில் கிடைத்த கல்வெட்டுகள், செப்புத் தகடுகளை தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் படித்து பதிவேற்றியுள்ளார்.
1974-ல் வெ. வேதாசலம் மாணவராக இருந்த போது திருவெள்ளறை கல்வெட்டுகள் பற்றி ஆய்வு செய்து நூலாக வெளியிட்டார். இதுவே வெ. வேதாசலத்தின் முதல் நூல். பின் தமிழக தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராக பணியாற்றிய போது மாவட்ட வாரியாக கல்வெட்டு பற்றிய தகவல்கள் சேகரித்து தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். தன் பணிக் காலத்தில் திருவாரூர், திண்டுக்கல், மதுரை மாவட்ட தொல்லியல் கையேட்டை உருவாக்கினார். விருதுநகர் மாவட்டம் பற்றி ஆங்கிலத்தில் தனியாக நூல் ஒன்றும் எழுதியுள்ளார்.
வரலாற்று ஆய்வு
வெ. வேதாசலம் தென்தமிழ்நாட்டுப் பகுதிகளை மதுரையையும் அதனை சுற்றியுள்ள பகுதியையும் தன் முதன்மை ஆய்வுக் களமாக கொண்டவர். பாண்டியர் காலத்து சமூக நிலவியல், பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு, அதன் சமுதாயமும், பண்பாடும் போன்றவற்றை ஆய்வு செய்து நூலாக்கியுள்ளார். 2000-க்கு முன் இவர் எழுதிய 'பராக்கிரம பாண்டியபுரம்' என்னும் நூல் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது. மதுரையிலுள்ள திருமலை நாயக்கர் அரண்மனை, ராமநாதபுரம் அரண்மனை பற்றிய தகவல்களை தொல்லியல் துறையின் நூலாக வெளியிட்டுள்ளார். பணி நிறைவுக்குப் பின் இவர் எழுதிய 'பாண்டியநாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல்' என்னும் நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது கிடைத்துள்ளது.
எண்பெருங்குன்றம்
வெ. வேதாசலம் பாண்டிய நாட்டில் சமண சமயம் பற்றி களஆய்வு மேற்கொண்டு 'பாண்டிய நாட்டில் சமண சமயம்' என்னும் பெருநூலை எழுதியுள்ளார். மதுரையைச் சுற்றியுள்ள சமணப் பள்ளிகளுக்கு நேரில் சென்று அங்கே சமணர்கள் வாழ்ந்த படுகைகள், சமணச் சிற்பங்கள், தமிழ் பிராமி கல்வெட்டுகளை ஆய்வு செய்து அவற்றை பற்றிய குறிப்புகளை எண்பெருங்குன்றம் என்னும் நூலாக்கியுள்ளார். தென்னிந்தியாவிலேயே சமணர்கள் பற்றிக் கிடைக்கும் பழைமையான கல்வெட்டுகள் சில மதுரை பகுதியில் வெ. வேதாசலத்தால் கண்டுபிடிக்கப்பட்டவை. வெ. வேதாசலம் சங்ககால மலைப்பள்ளிகள் முதல் சமகாலத்தில் எஞ்சியிருக்கும் சமணப்பள்ளிகள் வரை தொல்லியல், கல்வெட்டு, இலக்கிய ஆதாரங்களுடன் கள ஆய்வு செய்து தகவல்களைத் தொகுத்தார்.
பயிற்சி வகுப்பு
இலங்கை அரசின் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் சார்பாக இலங்கையில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தொல்லியல் கல்வெட்டு பயிற்சி வகுப்புகள் நிகழ்த்தியுள்ளார். தமிழகத்திலும் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொல்லியல், கலை, கல்வெட்டுப் பயிற்சி அளித்து வருகிறார்.
இதழியல் பணி
தொல்லியல் கழகம் வெளியிடும் 'ஆவணம்' என்னும் ஆண்டு இதழின் ஆசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
பாரம்பரிய நடைப்பயணம்
தானம் அறக்கட்டளை சார்பாக கிராமங்களுக்குச் சென்று கல்வெட்டு, தொல்லியல் சார்ந்த ஊர் வரலாறு கூறும் கூட்டங்களை கடந்த பதினைந்து ஆண்டுகளாக நிகழ்த்தி வருகிறார். ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் இதுவரை .
அமைப்புப்பணிகள்
'தொல்லியல் கழகம்' என்கிற அமைப்பில் பேராசிரியர்கள் சுப்பராயலு, நாச்சிமுத்து, டாக்டர் இரா.கலைக்கோவன், ராஜகோபால் ஆகியோரோடு வேதாசலமும் இணைந்து பணியாற்றினார்.
நூல்
வெ.வேதாசலம் 2025 ஆண்டுக்கான தமிழ் விக்கி- தூரன் விருது பெற்ற விழா 16 ஆகஸ்ட் 2025 அன்று நிகழ்ந்தது. விழாவில் அவரைப் பற்றி விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் 'வெ.வேதாசலம், மதிப்பீடுகள் வாசிப்புகள் எனும் நூல் வெளியிடப்பட்டது.
விருதுகள்
- தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது 'பராக்கிரமபாண்டியபுரம்'
- தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது 'பாண்டியநாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல்'
- தமிழ் ஹெரிடேஜ் டிரஸ்ட் வழங்கும் வி. வெங்கையா கல்வெட்டியல் விருது - 2024[1]
- திருச்சி இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய சிறந்த கல்வெட்டாய்வாளர்
- Friends of Heritage Sites விருது, 2022[2]
- தமிழ் விக்கி- தூரன் விருது 2025
ஆய்வு இடம்
வெ. வேதாசலம் பாண்டிய நாடான தென் தமிழ்நாட்டுப் பகுதிகளைத் தன் முதன்மை ஆய்வுக் களமாக கொண்டு மேற்கொண்ட சமணபள்ளிகள் பற்றி கள ஆய்வுகள் முதன்மையானவை. தென்னிந்தியாவில் சமணம் சார்ந்து கிடைக்கும் பழமையான கல்வெட்டுகள் வெ. வேதாசலத்தால் கண்டுபிடிக்கப்பட்டவை.[3] மதுரையில் தற்போது எஞ்சியுள்ள சமணக் குன்றுகளுக்கு நேரடியாக சென்று கல்வெட்டு ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றை ஆவணப்படுத்தி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அவற்றை கொண்டு வந்தவர்.
வெ. வேதாசலம் பாண்டியர் ஆட்சி கால மதுரை நாகரீகம் பற்றி முழுமையாக ஆய்வு மேற்கொண்டவர். பாண்டியர் ஆட்சியில் பாண்டியநாட்டுச் சமூக நிலவியல், ஊர்களின் வரலாறு, சமுதாயம், பண்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்து தொகுத்தவர். 2500 க்கும் மேற்பட்ட களஆய்வு செய்துள்ளார்.
நூல்கள்
- பாண்டிய நாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல்
- பாண்டியன் நின்றசீர் நெடுமாறன்
- பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு
- பாண்டிய நாட்டு சமுதாயமும், பண்பாடும்
- பாண்டிய நாட்டில் சமணசமயம்
- பாண்டிய மண்டலத்தில் வாணதிராயர்கள்
- பராக்கிரம பாண்டியபுரம்
- எண்பெருங்குன்றம்
- கழுகுமலைச் சமணப்பள்ளி
- இந்தியக் கலைவரலாற்றில் அறுவகைத் தெய்வ வழிபாடு
- பாண்டியநாட்டில் வணிகம் வணிகர் வணிகநகரங்கள்
- பாண்டியநாட்டு ஊர்களின் வரலாறு (ஊர், பிரமதேயம், வணிகநகரம், படைப்பற்று)
- வரலாற்றில் ஜேஸ்டாதேவி மூதேவி வழிபாடு
- Virudhunagar District - An Archaeological Sourcebook, V. Vedachalam, G. Sethuraman, Madhuca Krishnan
- The Sculptural Splendours of Meenakshi Temple, Dr. V. Vedachalam, Dr. G. Sethuraman
- இயக்கி வழிபாடு
- மதுரை மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி
- விருதுநகர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி
- திருமலை நாயக்கர் செப்பேடுகள்
- மதுரை மாவட்டத் தொல்லியல் கையேடு
- திருவாரூர் மாவட்டத் தொல்லியல் கையேடு
- திண்டுக்கல் மாவட்டத் தொல்லியல் கையேடு
- ராமேஸ்வரம்
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
- தஞ்சாவூர் பெருவுடையார் கோவில்
பதிப்பாசிரியர்
- தொல்லியல் சுவடுகள், ச. டெக்லா, வெ. வேதாசலம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
உசாத்துணை
- குருகு.இன் - வேதாசலம் சிறப்பிதழ், ஆகஸ்ட் 2025
- சாதனையாளர் - முனைவர் வெ. வேதாசலம், தென்றல் ஆன்லைன், ஆகஸ்ட் 2025
- 'இலக்கியவாதி வரலாற்றை வாசித்தல் - வேதாசலம்', ஜெயமோகன் எழுதிய கட்டுரைத் தொடர், ஆகஸ்ட் 2025
- 'வரலாற்றில் பொற்காலம் இருண்டகாலம் என்பது கிடையாது! -தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம் பேட்டி, அந்திமழை.காம், ஜூலை 2025
- ஆய்வாளர் வெ.வேதாசலம் வாழ்க்கைக்குறிப்பு, ஹெரிடேஜர்.இன், 2024
- இருமொழிக் கொள்கைக்கு வயது 2000: வெ.வேதாசலம் பேட்டி, சு. ராஜகோபாலன், அருஞ்சொல், மே 18, 2023
- மதுரை மாவட்டத் தொல்லியல் கையேடு, தமிழிணையம் - மின்னூலகம்
- நூல் வெளி: ஊரும் பேரும், வெ. வேதாசலம், தமிழ் இந்து, மார்ச் 18, 2023
- தமிழ்நாட்டின் வரலாற்றை அறிய உதவும் வைரச் சுரங்கம்!, டி.எஸ். சுப்பிரமணியன், தமிழ் இந்து, ஆகஸ்ட் 21, 2021
- தென்தமிழகத்தில் அகழாய்வுகள், மேற்பரப்புத் தொல்லியல் ஆய்வுகள் - முனைவர் வெ. வேதாசலம், யூடியூப்.காம், அக்டோபர் 13, 2020
- மதுரைப்பகுதியில் தொல்லியல் ஆய்வுகள், வெ. வேதாசலம், கீற்று.காம், செப்டம்பர் 2011
- மதுரையில் சமணம், சித்திரவீதிக்காரன், மார்ச் 18, 2011
வெளி இணைப்புகள்
- ராமநாதபுரம் அரண்மனை அருங்காட்சியகக் கையேடு, ஆசிரியர் வெ. வேதாசலம்
- திருமலை நாயக்கர் செப்பேடுகள், தொகுப்பாசிரியர்கள்: நடன. காசிநாதன், சு. இராசகோபால், வெ. வேதாசலம்
- ஆவணம்.ஆர்க், தொல்லியல் கழகத்தின் இணையதளம்
அடிக்குறிப்புகள்
- ↑ Tamil Heritage Trust, வெ. வேதாசலம் அவர்களுக்கு வி வெங்கய்யா கல்வெட்டியல் விருது 2024 - நிகழ்வுக் குறிப்பு & காணொளி
- ↑ வெ. வேதாசலம் அவர்களுக்கு Friends of Heritage Sites அமைப்பு வழங்கும் விருது, 2022
- ↑ பொ.யு.மு. 2, 1-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் மதுரை எண்பெருங்குன்றத்தில் கிடைத்துள்ளன. பார்க்க: எண்பெருங்குன்றம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
14-Nov-2023, 08:00:34 IST