under review

வடபத்ரசாயி ஆண்டாள் கோயில்

From Tamil Wiki
ஆண்டாள் கோயில் கோபுரம் (1868)

வடபத்ரசாயி ஆண்டாள் கோயில் (பொ.யு 8-15-ம் நூற்றாண்டு) ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்த கோயில். 108 வைணவ திவ்ய தேசங்களில் 90-ஆவது திருத்தலம். இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இடம்

வடபத்ரசாயி கோவில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது மதுரைக்குத் தெற்கே 77 கி.மீ. தொலைவில் உள்ளது.

கோவில் பற்றி

கோவில் வளாகத்தில் வடபத்ரசாயிக்கென தனிக் கோயிலும், ஆண்டாளுக்கென தனிக் கோயிலும் உள்ளன. சிறுகோயிலாக இருந்த வடபத்ரசாயி கோயிலில் பெரியாழ்வார் பூஜை செய்துவந்தார். பெரியாழ்வார் ஆண்டாளைக் கண்டெடுத்த நந்தவனம் உள்ளது. திருப்பாவை பாடப்பட்ட தலம். பழங்காலச் சுவடிகளில் 'வராகஷேத்ரம்' என்று இத்தலம் அழைக்கப்பட்டது.

ஆண்டாள்

தொன்மம்

புராணகாலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் 'செண்பகவனம்', 'புதூர்' என்று அழைக்கப்பட்டது. பெருமாள் வராக அவதாரம் எடுத்தபோது லட்சுமியுடனும், பூமிபிராட்டியுடனும் செண்பகவனத்தில் இளைப்பாறியதால் “வராகஷேத்ரம்” என்று இவ்விடம் அழைக்கப்பட்டது. இவ்வனத்தில் வேடுவ அரசர்களான வில்லி, கண்டன் ஆகியோர் வேட்டையாட வரும்போது கண்டனை புலி கொன்றது. வில்லி கண்டனைத்தேடி களைத்து உறங்கும் வேலையில் பெருமாள் அவன் முன் பள்ளி கொண்ட சயன நிலையில் தோன்றி கண்டன் இறந்த செய்தியும், அவன் உடல் இருக்கும் இடத்தையும் சொன்னார். வில்லி பெருமாளின் ஆணைக்கிணங்க கோயில் எழுப்பினார். வில்லியின் நினைவாக இவ்வூர் வில்லிபுதூர்/வில்லிபுத்தூர் என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தெய்வங்கள்

மூலவராக வடபத்ரசாயி, ரங்கமன்னார், ஆண்டாள் (கோதை நாச்சியார்) உள்ளனர். தலமரம் துளசி. திருக்குளமாக திருமுக்குளம், கண்ணாடித் தீர்த்தம் ஆகியவை உள்ளன.

கல்வெட்டு / செப்பேடு

ஆண்டாள் கோயில் பொ.யு 788-ல் கட்டப்பட்டது. இங்குள்ள நரசிம்மர் சன்னதி, கல்வெட்டுகளில் ஒன்றான, சோழனின் தலைகொண்ட வீரபாண்டியன் (பொ.யு. 946 -966) கல்வெட்டில், இக்கோயில் 'ஜலசயநாட்டுக் கிடந்தருளின பரமசுவாமி கோயில்' என்றழைக்கப்பட்டதாக உள்ளது. சோழமன்னன் முதலாம் குலோத்துங்கன் (பொ.யு. 1070-1120) ஆட்சியில் இந்த ஊர் 'விக்கிரமசோழ சதுர்வேதிமங்கலம்' என்றழைக்கப்பட்டது. பிற்கால பாண்டியர் கல்வெட்டில், இக்கோயில் வடபெருங்கோயில் பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயிலாக இருந்தது. பொ.யு. 13-ம் நூற்றாண்டில் இந்த ஊர், 'பிரம்மதேய குலசேகர சதுர்வேதி மங்கலம்' என்ற பெரிய நகரமாக பிற்கால பாண்டியர்களால் விரிவுபடுத்தப்பட்டது. திருமலைநாயக்கர் (பொ.யு 1623-1659) மற்றும் இராணி மங்கம்மாள் (பொ.யு 1689-1706) ஆட்சிக் காலத்தில், இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. பொ.யு 8-15-ம் நூற்றாண்டு / பாண்டியர் விஜயநகர, நாயக்கர் கல்வெட்டுக்களில் ஆண்டாள் கோவில் 'சூடிக் கொடுத்த நாச்சியார் கோவில்' என்று குறிப்பிடப்பட்டது.

வரலாறு

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து இராமநாதபுரத்திற்கு மாறித் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் உள்ளது. சங்க காலத்தில் மல்லி நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. புதியதாகக் குடியிருப்புகள் எழுந்தவுடன், புத்தூர்(புதூர்) எனப் பெயர் பெற்றது. ஆண்டாள் கோவிலுக்கு அருகில் வடபத்ரசாயி கோவில் உள்ளது. ஆண்டாள் கோவிலின் தோற்றத்திற்கு முன்பே இக்கோவில் தோன்றியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இக்கோவிலின் சில பகுதிகள் பொ.யு. 9-ம் நூற்றாண்டில் பெரியாழ்வாரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.பொ.யு. 15-ம் நூற்றாண்டில் மாவெலி வாணாதிராயர் இக்கோவிலைப் புதுப்பித்தும், விரிவுபடுத்தியும் திருப்பணிகள் செய்தார். மதுரைப் பாண்டிய மன்னர்கள், திருமலை நாயக்கர் மன்னர் முதலிய மதுரை நாயக்க மன்னர் இக்கோயிலில் திருப்பணிகள் செய்தனர். திருமலை மன்னர் இக்கோவிலில் சிவகாமி அம்மனை இறைவியாகக் கொண்ட ஒரு மண்டபத்தைக் கட்டினார்.

வடபத்ரசாயி கோயில் விமானம்

ஆலய அமைப்பு

வடபத்ரசாயி கோயில்

இக்கோவிலின் கோபுரம் 60 மீட்டர் உயரமுடையது. இது விஜயநகர் காலப் பாணி. இரு அடுக்குகளைக் கொண்டது. முதலாவது அடுக்கில் பச்சை நிறத்தில் லட்சுமி நரசிம்மர் சிலை உள்ளது. மேல்தளத்தில் கருவறையில் மூலவரான வடபத்ரசாயி கருவறையில் ஸ்ரீதேவியுடனும் பூதேவியுடனும் அனந்தசயனநிலையில் உள்ளார். இந்தத்தளத்தில் உள்ள கூடத்தில் ராமாயணம், மகாபாரதம், ஆண்டாளின் வாழ்க்கை தொடர்பான மரச்சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. இந்த சந்நிதிக்கு அருகில் பெரியாழ்வார் சந்நிதியும், ஆண்டாள் பிறந்த இடத்தைக் குறிக்கும் சந்நிதியும் உள்ளன. வடபத்ரசாயி கோயிலிலுள்ள கருடாழ்வார் மண்டப மரச்சிற்பங்கள் வேலைப்பாடுமிக்கவை.

ஆண்டாள் கோயில்
வடபத்ரசாயி சன்னிதி

வடபத்ரசாயி கோவிலுக்குச் சிறிது வடக்கில் ஆண்டாள் கோவில் உள்ளது. நாச்சியார் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் கருவறை கல்லினால் ஆனது. வேலைப்பாடுமிக்கது. கருவறையில் ரெங்கமன்னார் ஆண்டாளுடன் கல்யாண கோலத்தில் உள்ளார். பெருமாளின் அருகில் கருடன் கூப்பிய வண்ணம் நின்ற நிலையில் உள்ளார். கருவறை மேலுள்ள விமானத்தில் ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாசுரங்களின் கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. கருவறை முன்னுள்ள மண்டபத்தில் திருமலை மன்னர், அவரது குடும்பத்தினரின் சிலைகள் உள்ளன. தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடுகள் இச்சிலைகள்மீது உள்ளன. இக்கோவிலின் கல்யாண மண்டபம், துவஜஸ்தம்ப மண்டபம், ஏகாதசி மண்டபம் ஆகியவை சிற்ப, கட்டடக் கலைச் சிறப்புமிக்கவை. கல்யாண மண்டபத்திலுள்ள பன்னிரெண்டு தூண்களில் காணப்படும் யாளிகளின் சிற்ப அமைப்பு நேர்த்தியானது. துவஜஸ்தம்பத்தின் இரு பக்கங்களிலும் பின்புறம் பெயர்களைக் கொண்ட சிற்பப் படைப்புகள் உள்ளன. கண்ணாடி மாளிகை உள்ளது. இக்கோவிலின் மண்டபத்தில் ஹயக்ரீவருக்கென தனி சந்நிதி உள்ளது.

சிற்பங்கள்

ஆண்டால் கோவிலில் வேணுகோபாலன், ஸ்ரீராமர், விஸ்வகர்மா, நடன மாது, லட்சுமணன், சூர்ப்பனகைக் காட்சி, கலைவாணி, அகோர வீரபத்திரன், ஜலந்தர், மோகினி, சக்தி ஆகிய சிற்பங்கள் ஒற்றைக் கல்லினாலான மிகப்பெரிய தூண்களில் அமைந்துள்ளன. துவஜஸ்தம்பத்தை அடுத்துள்ள ஏகாதசி மண்டபத்தில் கர்ணன், அர்ஜீனன், குகன், சாத்யகி, ஊர்த்துவமுக வீரபத்திரன், நீர்த்தமுக வீரபத்திரன், மன்மதன், ரதி ஆகிய சிற்பங்கள் உள்ளன. இந்தச் சிற்பங்கள் யாவும் பொ.யு. 16-ம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர் வீரப்பர் ஆட்சியில் அமைக்கப்பட்டிருக்கலாம்.

ஆடிப்பூரம் தேர் திருவிழா

ஆண்டாள் கோயில் தேர்

இக்கோவிலைச் சேர்ந்த மிகப்பெரிய தேர் மரச்சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. கோவில் சன்னிதியை ஒட்டிய பிரதான சாலையில் இந்தத் தேர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் எட்டாவது நாளில் பூரம் நட்சத்திரத்தில் வடபத்ரசாயி கோயில் தோட்டத்தில் துளசிச் செடியின் அருகில் கண்டெடுத்த ஆண்டாளின் நினைவாக வருடம் ஒரு முறை ஆடிப்பூரத் தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது.

காலையில் கோவிலில் பூஜைகள் முடிந்தபின் ஆண்டாள், ரங்கமன்னாரின் உருவச் சிலைகள் பல்லக்கில் வைத்து எடுக்கப்பட்டு வந்து தேரில் நிறுவப்படுகின்றன. ரதவீதி முழுவதுமாக சுற்றியபின் தேர் நிறுத்தப்படுகிறது. 2000-க்கு முன் தேர் சுற்றிவருவது நிறுத்தி வைக்கப்பட்டது. வானமாமலை ஜீயரின் முயற்சியின் பேரில் தேரின் சக்கரங்கள் நவீனமயமாக்கப்பட்டு ஒரு நாளில் ரதவீதியை தேர் சுற்றி வரும்படி மாற்றியமைக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு சின்னம்

  • அருள்மிகு ஆண்டாள்-ரங்கமன்னார் திருக்கோயிலின் இராஜகோபுரம் தமிழ்நாடு அரசின் அரசுச் சின்னமாக உள்ளது.

அரையர் சேவை

ஆண்டாள் கோயிலில் எழுபது வருடங்களாக அரையர் ஸ்ரீநிவாசரங்காச்சாரியார் அரையர் சேவை செய்து வருகிறார். நூற்றியெட்டு திவ்விய தேசங்களில் ஆண்டாள் கோயில் உட்பட மூன்று கோயில்களில் மட்டுமே அரையர் சேவை செய்யப்பட்டு வருகிறது.

வழிபாடு

திறந்திருக்கும் நேரம்
  • காலை 6:30 முதல் மதியம் 1 வரை
  • மாலை 4 முதல் 9 வரை
பூஜைகள்
  • வைணவத்தின் தென்கலைப் பிரிவைச் சார்ந்தவர்கள் வழிபடும் முறைகளைக் கொண்டது.
  • கோவில் வழிபாடு ஒரு நாளில் ஆறுமுறை செய்யப்படும். வழிபாட்டின் போது அலங்காரம், நெய்வேத்தியம், தீப ஆராதனை காண்பிக்கப்படும். விஸ்வரூப தரிசனம், கால சாந்தி பூஜை, உச்சிகால பூஜை, நடை திருக்காப்பிடுதல், நடை திறப்பு, சாயரக்ஷை, அத்தாழம், அரவணை ஆகியவை அன்றாடம் நிகழும்.
விழாக்கள்
  • ஆண்டாள் பிறந்ததாகக் கூறப்படும் ஆடி மாதத்தில் இக்கோவிலில் முக்கிய விழாவான ஆடிப்பூரம் தேர்த்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.
  • புரட்டாசி பெரிய பெருமாள் உற்சவம்
  • மார்கழியில் நீராட்டு எண்ணெய்க் காப்பு உற்சவம்
  • பங்குனியில் ஆண்டாள்-ரங்கமன்னார் திருக்கல்யாணம்
  • வைகுண்ட ஏகாதசி

உசாத்துணை


✅Finalised Page