under review

மெலிதல்(கைக்கிளை)

From Tamil Wiki

புறப்பொருளில் அமைந்த கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. தலைவனைக் கண்டு காதல் கொண்ட பெண் காதலாலும், பிறர் கூறும் அலராலும் மெலிந்து வாடுதலைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் பிறர் கூறும் அலருக்கு நாணி மென்தோள்களையுடைய பெண் வாடியிருத்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

ஒன்றார் கூறும் உறுபழி நாணி
மென்தோள் அரிவை மெலிவொடு வைகின்று(கொளு 15.4 )

வெண்பா

குரும்பை வரிமுலைமேல் கோல நெடுங்கண்
அரும்பிய வெண்முத்து உகுப்பக் - கரும்புடைத்தோள்
காதல் செய் காமம் கனற்ற
ஏதிலாளற்கு இழந்தன் என் எழிலே (297)

பொருள்: குரும்பை போன்ற மார்புகளின் மீது என் கண்ணீர் முத்துக்கள் சிந்துகின்றன; காமன் எனக்குக் காதல் நோய் தந்து வாட்ட, எனக்கு இரங்கி என் காதலை ஏற்றுக் கொள்ளாத இவனுக்காக என் அழகெல்லாம் அழிகிறது.

உசாத்துணை

கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Jul-2025, 18:28:09 IST