மூதானந்தம்
மூதானந்தம் பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. கணவன் இறந்தபின் அவனோடு எரிபுகுந்த மனைவியின் பெருமையை வழிச்செல்வோர் கூறுவதையும் வீரன் ஒருவன், பகைவருடைய அம்புகள் தன்மீது பாய்தலால், தன் செயலை முடிக்காமல் இறந்துபோனதைக் கூறுவதையும் குறிக்கிறது மூதானந்தம்.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் இரு கொளுப்பாடல்கள் மூதானந்தத்தின் இலக்கணத்தைக் கூறுகின்றன.
கொளு 1
கயல்விழிகளையுடையாள் தன் கணவன் இறந்த உடனே தானும் இறந்துவிட அவ்வழியே போவார்கள் கண்டு வியந்து சொல்லியது
கயல்ஏர் கண்ணி கணவனொடு முடிய
வியன் எறிச் செலவோர் வியந்துரைத்தன்று(கொளு 11.9)
வெண்பா
ஓருயிராக உணர்க உடன் கலந்தார்க்கு
ஈருயிர் என்பர் இடை தெரியார் - போரில்
இடன் ஏந்தும் வேலோற்கும் வெள்வளையினாட்கும்
உடனே உலர்ந்த உயிர் (262)
பொருள்:வெண்பா, இருவரும் ஒருசேர இறந்ததனைக் கண்டோர் கூற்றாக அமைந்துள்ளது. 'வேலினை உடைய வீரன் உயிரும் அவன் மனைவி உயிரும் ஒரே நேரத்தில் பிரிந்தது கண்டு அவர்களுக்கு இரண்டு உயிர்கள் என்று சொல்லுதல் தவறு; இருவருக்கும் உயிர் ஒன்றே என வேண்டும்'
கொளு 2
வீரன் ஒருவன், பகைவருடைய அம்புகள் தன்மீது பாய்தலால், தன் செயலை முடிக்காமல் இறந்துபோனதைக் கூறுவது
கொடியான் கூர்ங்கணை குளிப்பத் தன்தொழில்
முடியான் அவிதலும் முதானந்தம் (கொளு 11.10)
வெண்பா
முந்தத் தான் மாவொடு புக்கு முனை அமருள்
சிந்தத்தான் வந்தார் செருவிலக்கி - குந்தத்தால்
செல்கணை மாற்றிக் குரிசில் சிறை நின்றான்
கொல் கணைவாய் வீழ்தல் கொடிது 263
பொருள்: போர் தொடங்கியவுடன் குதிரையில் ஏறிப் போர்க்களம் சென்று அனைவருக்கும் முன்னே நின்று பகைவர் அம்புகளை எல்லாம் தடுத்துப் படைவீரர்களுக்குக் கரை போல் நின்ற இவ்வீரன் பகைவர் அம்புகளால் விழுப்புண் பட்டு வெற்றித் தொழிலை முடிக்காமலேயே இறந்துவிட்டான்' என்று போற்றுவதாக வெண்பா அமைந்துள்ளது.
உசாத்துணை
பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Jul-2025, 18:27:14 IST