under review

மு. முருகையன்

From Tamil Wiki
மு. முருகையன் (நன்றி: மு. இளங்கோவன்)

மு. முருகையன் (மே 18, 1942 - மே 27, 2013) மலேசியப்புலவர், ஆய்வாளர், நாடக இயக்குனர், இசையமைப்பாளர். தொல்காப்பியம், திருக்குறள் சார்ந்த ஆய்வு நூல்கள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

மு. முருகையன் மலேசியாவில் சி. முத்துசாமி, இராசம்மாள் இணையருக்கு மே 18, 1942-ல் பிறந்தார். பேராக் மாநிலத்தில் தெமொ பானிர் தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். கம்பார் இடைநிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வி பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்நிலைக் கல்வி கற்றார். திண்டுக்கல் பைந்தமிழ்க் கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரி, சென்னை மாருதி திரைப்படக் கல்லூரியிகளில் பயின்றார். தென்கிழக்காசியத் திருக்கோயில் ஆய்வுக்காகப் புலவர் பட்டயம் பெற்றார். முதுகலைத் தமிழ், இளங்கலை மொழியியல் (B.O.L) பட்டங்கள் பெற்றார். கல்வெட்டுகள், ஊடகக் கல்விக்காகச் சான்றிதழ்களைப் பெற்றார் . திரைப்படத்துறையில் D.F.Tec பட்டம் பெற்றார்

தனிவாழ்க்கை

மு. முருகையன் ஜெயபத்மினியை மணந்தார். மகள் கவிதா, மகன் வினோத் கண்ணா. பேராக், சுங்கைப் பட்டானி, கெடா ஆகிய ஊர்களில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

இதழியல்

மு. முருகையன் ஐம்பதாண்டுகள் மலேசியாவில் இதழியல்துறையில் பங்களிப்பு செய்தார். 1976-1990 ஆண்டுகளில் 'தமிழ்நேசன்' நாளிதழில் ஞாயிறுமலரின் ஆசிரியராகப் பணியாற்றினார். 2005 முதல் 2006 வரை மலேசிய நண்பன் இதழில் ஞாயிறுமலர் ஆசிரியராகவும் பணியாற்றினார். 2006 முதல் 2010 வரை 'விடியல்' வார இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 2010 முதல் 11 வரை 'ஆலமரம்' மாத இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 2011 முதல் 2013 வரை 'ஒளிவிளக்கு' என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார் .

இசை வாழ்க்கை

மு. முருகையன் ஒலிப்பேழை, குறுவட்டுகள் வெளியீட்டு முயற்சிகள் செய்தார். பல்வேறு ஒலிவட்டுகளையும், குறுவட்டுகளையும் வெளியிட்டார். பாடல்கள் இயற்றி, இசை அமைத்தார். 'பத்துமலை முருகன்', 'கோலாலம்பூர் மாரியம்மன்', 'ஒன்பது தெய்வங்கள்', 'மலாக்கா திரௌபதி அம்மன்', 'சீரடி சாய்', 'ஒரு மலர் கனலாகிறது', 'மலேசிய மலர்கள்', 'சாதனைத் தலைவர் சாமிவேலர்', 'களம் கண்ட கலைஞர்', 'அவசர அழைப்பு', 'சித்தார்த்த நாடகம் '(தமிழ் , தெலுங்கு), 'நினைவலையின் ஓசையில்', 'கூட்டுறவுப் பாடல்கள்' குறிப்பிடத்தக்கன. மு. முருகையனின் இசையமைப்பில் வாணி ஜெயராம், உமா ரமணன், டி.எல்.மகாராஜன், சுரேந்தர் சிவசிதம்பரம், சிந்து, அமிர்தா, வீரமணி கர்ணா, எம்.ஆர். விஜயா உள்ளிட்ட தமிழகக் கலைஞர்கள் பாடினர். வீ. சாரங்கபாணி, சுசிலா மேனன், சுசிலா திருச்செல்வம், எம். மாரிமுத்து, வி.ஜெயந்தி, சந்திரிகா உள்ளிட்ட உள்நாட்டுக் கலைஞர்கள் பாடினர்.

நாடக வாழ்க்கை

மு . முருகையன் நாட்டிய நாடகங்கள் இயற்றினார். 1986-ல் மு . முருகையன் உருவாக்கிய 'சித்தார்த்தா' நாட்டிய நாடகம் கோலாலம்பூரில் அரங்கேறியது. இசை, இயக்கம், பாடல்கள் அனைத்திற்கும் பொறுப்பேற்று இயக்கிய இந்த நாட்டிய நாடகம் இவரரின் அன்னை புரடெக்ஷன்ஸ் சார்பில் உருவானது. இது தமிழ்நாடு, இலங்கை, தாய்லாந்து, பினாங்கு, கோலாம்பூர், ஈப்போவிலும் அரங்கேறியது. ஐம்பதிற்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை இவர் இயற்றினார். தமிழகத் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இலக்கிய இலக்கண ஆய்வுகள் குறித்து மு. முருகையன் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். 'உலகத்தின் ஒளிவிளக்கு - பெற்றோரும் பிள்ளைகளும்', 'மொழியியல்', 'உலகத் தமிழர்களும் தொல்காப்பியமும்', 'உலகத் தமிழர்களும் திருக்குறளும்' ஆகிய நூல்களை எழுதினார்.

விருதுகள்

  • 1988-ல் உலகத் தமிழ்க் கவிஞர் இயக்கத்தின் தலைவர் சுரதாவும் க.த. திருநாவுக்கரசுவும் இணைந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 'இலக்கியச் சித்தர்' விருது வழங்கினர்.

நூல் பட்டியல்

  • உலகத்தின் ஒளிவிளக்கு - பெற்றோரும் பிள்ளைகளும்
  • மொழியியல் (ஆய்வுநூல்)
  • உலகத் தமிழர்களும் தொல்காப்பியமும் (ஆய்வுநூல்)
  • உலகத் தமிழர்களும் திருக்குறளும் (ஆய்வுநூல்)

உசாத்துணை


✅Finalised Page