முரசொலி மாறன்
முரசொலி மாறன் (ஆகஸ்ட் 17, 1934 - நவம்பர் 23, 2003) கணினித்தமிழுக்குப் பங்காற்றியவர்களில் முக்கியமானவர், அரசியல்வாதி, முரசொலி வார இதழின் ஆசிரியர். 1999-ல் நடந்த தமிழ் இணைய மாநாட்டை நடத்த முயன்றவர்களில் முக்கியமானவர்.
வாழ்க்கைக் குறிப்பு
முரசொலி மாறன் திருவாரூர் மாவட்டத்தில்(இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம்) உள்ள திருக்குவளையில் ஆகஸ்ட் 17, 1934-ல் சண்முகசுந்தரம், சண்முகசுந்தரி இணையருக்கு முதல் மகனாக பிறந்தார். தாயாரான சண்முகசுந்தரி மு. கருணாநிதியின் இரண்டாவது சகோதரி.
தனிவாழ்க்கை
முரசொலி மாறன் மல்லிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு மகன்கள். தயாநிதி மாறன், கலாநிதி மாறன். மகள் அன்புக்கரசி.
அரசியல் வாழ்க்கை
முரசொலி மாறன் மூன்று முறை நடுவண் அமைச்சராக இருந்தார். முப்பத்தியாறு ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார். 2001 தோஹா மாநாட்டில் பன்னாட்டு வணிக விலை பேரங்களில் (GATT) இந்தியாவிற்கு சாதகமான நிலைப்பாடுகளை எடுத்தார்.
இதழியல்
மு. கருணாநிதி நடத்தி வந்த முரசொலி பத்திரிக்கையில் மேலாளாராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றினார். அங்கு மாறன் என்ற புனைபெயரில் எழுதினார்.
தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்
- தமிழ் இணைய மாநாட்டை 1999-ம் ஆண்டு நடத்த பெரும் முயற்சி எடுத்தவர்களில் முரசொலி மாறன் முக்கியமானவர்.
- ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழியில் அமைக்கப்பட்ட ‘தாப்‘ என்ற எழுத்துருவும், தமிழில் மட்டுமே தட்டச்சு செய்யும் வகையில் அமைக்கப்பட்ட ‘தாம்‘ என்ற எழுத்துருவும் 1999-ம் ஆண்டு மாநாட்டில் கொணர வழிவகை செய்தார்.
- தமிழர்களிடம் மென்பொருட்களின் தரப்படுத்துதலுக்கான முயற்சியை வற்புறுத்தினார்.
- தமிழ் மென்பொருள் உற்பத்தியாளர்களிடையே பல்வேறு மென்பொருள்களை உருவாக்க ஊக்குவித்தார். தமிழகத்தில் மென்பொருள் உற்பத்தியாளர்களுக்கு அரசு மூலமாக நிதியுதவிகள் பல செய்து தமிழ்மென்பொருள்களை உருவாக்க முயற்சி எடுத்தார்.
திரைப்பட வாழ்க்கை
முரசொலி மாறன் திரைப்படங்களுக்கு கதை, உரையாடல் எழுதினார். இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.
எழுதிய திரைப்படங்கள்
- குலதெய்வம் (1956)
- அன்னையின் ஆணை (1958)
- அன்பு எங்கே (1958)
- தலை கொடுத்தான் தம்பி (1959)
- சகோதரி (1959)
- நல்ல தீர்ப்பு (1959)
இயக்கிய திரைப்படங்கள்
- மறக்க முடியுமா (1966)
- வாலிப விருந்து (1967)
தயாரித்த திரைப்படங்கள்
- பிள்ளையோ பிள்ளை (1972)
- மறக்க முடியுமா (1966)
மறைவு
முரசொலி மாறன் நவம்பர் 23, 2003-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- அபாய விளக்கு
- ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்? (முத்துவேல் பதிப்பகம், 1957)
- நாளை நமதே
- திராவிட இயக்க வரலாறு
- மாநில சுயாட்சி
- வால் நட்சத்திரம் (திராவிடப்பண்ணை, 1956)
உசாத்துணை
- தமிழ்க் கணிப்பொறி வல்லுனர்கள்- இணையத்தமிழ் பங்களிப்பாளர்கள்: மணிவானதி தளம்
- ஒரு மந்திரி ஆகணும்னு ஆசைப்பட்டதே இல்ல!” - முரசொலி மாறன்: விகடன்
✅Finalised Page