மாலை நிலை
மாலை நிலை பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. இறந்த கணவனோடு எரி புக மாலை நேரத்தில் மனைவி நிற்கும் நிலை
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல்ஒளி மிகுந்த வேலைக் கொண்ட கொழுநன் இறக்க அவனை இடும் ஈம நெருப்பில் புக வேண்டிப் பிறை ஒத்த நெற்றியைக் கொண்ட மனைவி, மாலைக்காலத்தில் நின்றது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
கதிர்வேல் கணவனொடு கனைஎரி மூழ்க
மதிஏர் நுதலி மாலை நின்றன்று (கொளு 11.8)
வெண்பா
சோலை மயில் அன்னாள் தன் கணவன் சொல்லிய சொல்
மாலை நிலையா மனம் கடைஇக் - காலைப்
புகை அழல் வேலோன் புணர்ப்பாகி நின்றாள்
அகைஅழல் ஈமத் தகத்து (261)
பொருள்: பகைவரைக் கொல்வேன்; அல்லது களத்தில் மாய்வேன்' என்று கூறிப் போருக்குச் சென்ற கணவன் சொன்னதை நினைத்த மனைவி, வீர மரணம் எய்திய அவனை எரிக்கும் ஈமத்தீயில் அவனுக்குத் துணையாகத் தானும் புகுந்தாள்.
உசாத்துணை
பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2025, 12:10:04 IST