under review

மலர் வழிபாடு

From Tamil Wiki
மலர்கள்
அன்னை

பாண்டிச்சேரி அன்னை வலியுறுத்திய வழிபாட்டு முறையே ‘மலர் வழிபாடு’. எண்ணூறுக்கும் மேற்பட்ட மலர்களைப் பற்றி, அவற்றைக் கொண்டு வழிபடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அன்னை சாதகர்களிடம் விளக்கியுள்ளார். “ஒவ்வொரு மலரும் தனித்தனி குணாதிசயங்களைக் கொண்டவை; ஒவ்வொரு மனிதனும் மலர்களைப் போலத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்” என்று அன்னை சாதகர்களிடம் வலியுறுத்தினார்.

அன்னையின் ‘மலர்கள்’ பற்றிய நூல்

மலர்கள் பற்றி அன்னை

"இந்தியர்கள் மலரினைப் பற்றியும், அதன் சூட்சுமமான குணங்கள், பயன்கள் பற்றியும் நன்கு அறிந்திருந்தனர்" என்று கூறியிருக்கும் அன்னை, மலர்களின் தன்மை பற்றி மிக விரிவாக விளக்கியுள்ளார். “மலர்கள் இயற்கை அன்னையின் எழில் மிகு வடிவங்கள். கண்களுக்கும் கருத்திற்கும் அவை நமக்கு விருந்து படைப்பது மட்டுமில்லாமல், இயற்கைக்கும் தன்னைப் பரிபூரணமாக அர்ப்பணித்துக் கொண்டவை. மலர்கள் நமக்கு எத்தனையோ இரகசியங்களை, ஆன்மிகத் தத்துவங்களை, வேதத்தின் உட் பொருளைத் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மனிதரும் மலரைப் போல திறந்த நிலையில், வெளிப்படையாக இருக்க வேண்டும்.

ஒரு மலர் தனக்கு என்று எதுவும் இல்லாமல், யாரையும் பாகுபடுத்திப் பார்க்காமல், எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாருக்கும் பொதுவாக இருக்கிறது. அன்பு, இனிமை, மென்மை என அனைத்தையும் நமக்கே தருகிறது. ரோஜா தன்னிச்சையாகவே மலர்கிறது. தன் அழகையும் மணத்தையும் பரப்புவதில் அதற்கு ஓர் எல்லையில்லா மகிழ்ச்சி. அது யாரிடமிருந்தும் எந்த லாபத்தையும், பிரதி பயனையும் எதிர்பார்ப்பதில்லை. இவ்வாறு எவன் ஒருவன் மலரின் உண்மைப் பண்புகளைப் பெறுகிறானோ, அவனே மிகவும் மகிழ்ச்சியானவன். இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவன்.” என்கிறார். அரவிந்தரும் அன்னையின் மலர் வழிபாட்டை ஆதரித்தார்.

மலர்களும் குணங்களும்

மலர்களுக்கும் மனித மனத்துக்கும் தொடர்பு உண்டு. மனம் சம்பந்தமான நோய்கள் பலவற்றைப் மலர்கள் சரிசெய்கின்றன என்று மலர் மருத்துவம் கூறுகிறது. மனித வாழ்க்கைச் சிக்கல்களுக்குப் பரிகாரமாக, ஆலயங்களில் குறிப்பிட்ட மலர்களால், குறிப்பிட்ட கிரகத்துக்கு அர்ச்சனை செய்தால் சங்கடம் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே சமயம், குறிப்பிட்ட மலர்களைக் கொண்டு குறிப்பிட்ட தெய்வங்களைப் பூஜிப்பதிலும் விலக்கு இருக்கிறது. இதற்கு மலர்களின் தனித்தன்மையே காரணமாகிறது. இத்தகைய மலர்களின் தூய்மை, புத்துணர்ச்சி, அழகு, சுயநலமின்மை பற்றி அன்னை விரிவாக விளக்கிக் கூறியுள்ளார். அந்தத் தன்மையை அனைவரும் பெறுவதற்காகச் சாதகர்களிடம் அவர் அறிமுகப்படுத்தியதே ‘மலர் வழிபாடு’

அன்னை மலர் வழிபாடு
அன்னை - அரவிந்தர் சமாதி மலர் வழிபாடு

மலர் வழிபாடு

அன்னைக்கு மலர்களின் மீது அளவற்ற விருப்பம் உண்டு. அரவிந்தர் ஆசிரமத்தில் தானே ஒரு தோட்டத்தை உருவாக்கி அதில் அழகான பல மலர்ச் செடிகளை வளர்த்தார். எண்ணூறுக்கும் மேற்பட்ட மலர்களைப் பற்றி, அவற்றைக் கொண்டு வழிபடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அன்னை சாதகர்களிடம் விளக்கியுள்ளார். அவற்றில் இருந்து சில இங்கே:

மலர்கள் பலன்கள்
1 மல்லிகை சோதனைகள் நீங்கும். மனத்தூய்மை உண்டாகும். இன்பம் பெருகும்.
2 மரமல்லி திருவுருமாற்றத்திற்கு வழிவகுக்கும்.
3 துளசி மனத்தூய்மை பெருகும். பக்தி சிறக்கும்.
4 சூரிய காந்தி மன இருளைப் போக்கும். வாழ்க்கையில் ஒளி உண்டாகும்.
5 சாமந்தி வலிமை, புது சக்தி உண்டாகும். பகைகள் விலகும்.
6 துளிர்க்கும் சாமந்தி முன்னேற்றம், மனதில் புதிய தெம்பு ஏற்படும்.
7 அரளிப்பூ தவறினை நேர்ப்படுத்தும். ஒழுங்கு உண்டாகும்.
8 வெள்ளை ரோஜா குறைகள் விலகும். தடைகள் அகலும். வெற்றி தரும்.
9 இளஞ் சிவப்பு ரோஜா தன்னம்பிக்கை வளரும். வலிமை பெருகும்.முன்னேற்றம் தரும்.
10 சிவப்பு ரோஜா எதிர்மறை எண்ணங்கள் அகலும். குறைகள் நீங்கும்.
11 மஞ்சள் ரோஜா இல்லறம் சிறக்கும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். பிரிவினை அகலும். மனவேறுபாடு நீங்கும்.
12 தும்பைப் பூ வாழ்க்கை உயர்விற்கும் வழிவகுக்கும்.
13 தாழம்பூ தெய்வீகத் தொடர்புகள் வலுவடையும். தெய்வீகப் பாதுகாப்பு கிடைக்கும்.
14 செம்பருத்தி தெய்வீக அன்பு கிடைக்கும். ஜீவனைத் தூய்மையாக்கும்.
15 நித்திய கல்யாணி முன்னேற்றம் தரும்.
16 நாகலிங்கப் பூ செல்வம் பெருகும். வளம் உண்டாகும்.
17 மனோரஞ்சிதம் மனத் தெளிவு, சிந்தனைத் தெளிவு ஏற்படும்.
18 விபூதிப் பச்சை வாழ்வில் ஒழுங்கு ஏற்படும். பிரச்சனைகள் அகலும்.
19 எருக்கம்பூ வலிமை, தைரியம், மன உறுதி தரும்.
20 செந்தாமரை தெம்பு, வலிமை, புத்துணர்ச்சி, உயர்வு தரும்.
21 வெண்தாமரை தெய்வீக உணர்வு மேம்படும். மன மாசுக்கள் அகலும்.
22 காகிதப்பூ பாதுகாப்பு உணர்வு மிகும். தெய்வத் துணை கிடைக்கும்.
23 வாடாமல்லி நோயற்ற தன்மை, ஆயுள் விருத்தி, ஆபத்துக்கள் விலகும்.
24 கொடிரோஸ் நட்பும், இணக்கமும் தரும்.
25 பிச்சிப்பூ முன்கோபம் குறையும்.
26 குரோட்டன்ஸ் தவறான எண்ணங்கள் அகலும்.
27 செவ்வரளி தவறுகள் விலகி, ஒழுங்குகள் ஏற்படும்.
28 மரிக்கொழுந்து வெற்றியைத் தரும்.
29 பூசணிப்பூ செயலூக்கம் உண்டாகும்.
30 சம்பங்கி அனுபவத் தெளிவும், ஆற்றலும் ஏற்படும்.
31 அல்லிப்பூ உடல்நலம் மேம்படும். நோயற்ற வாழ்வு உண்டாகும். செல்வ வளம் உண்டாகும்.
32 பவழ மல்லி நியாயமான ஆசைகள் நிறைவேறும்.
33 மகிழம் பூ செயலாற்றல் மேம்படும். தடை உணர்ச்சிகள் நீங்கும்.
34 மயிற்கொன்றைப் பூ காரிய சித்தி கிடைக்கும். வெற்றி உண்டாகும்.
35 நந்தியாவட்டை புத்துணர்ச்சி தரும். மனத்தூய்மை உண்டாகும்.
36 பன்னீர் பூ உணர்வில் சாந்தமும், செயல்களில் பொறுமையும் உண்டாகும்.
37 பூவரசம் பூ நோயற்ற வாழ்வு உண்டாகும்.
38 மாம் பூ அறிவில் மேன்மை உண்டாகும். சிந்தனை மேம்படும்.
39 கொய்யாப் பூ பொறுமையும், சாந்த குணமும் உண்டாகும்.
40 விருட்சிப் பூ அமைதியையும் ஒழுங்கும் ஏற்படும்.
41 ஆவாரம் பூ கவனமான மனமும் சிந்தனைத் தெளிவும் உண்டாகும்.
42 கத்திரிப் பூ ஆற்றல் மிக்க செயல்பாடுகள் ஏற்படும்.
43 வேப்பம் பூ ஆன்மிகச் சூழல் உண்டாகும். மனத் தெளிவு ஏற்படும்.
44 டிசம்பர் பூ பொறாமை, கண் திருஷ்டி அகலும். விழிப்புணர்ச்சி தரும்.
45 கனகாம்பரம் காரியத் தடைகள் அகலும். கல்வித் தடைகள் நீங்கும்.
46 புன்னைப்பூ அமைதி, உடல் நலம் மேம்பாடு
47 ஊமத்தை தவ ஆற்றல் மேம்படும்.
48 கள்ளி தனம், செல்வ வளம் மேம்படும்.
49 அசோகப் பூ சோகமின்மை, நிம்மதி உணர்வு தரும்
50 மந்தாரை உணர்வின் வலு சிறக்கும்

உசாத்துணை


✅Finalised Page