under review

மருதவனப் புராணம்

From Tamil Wiki
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் நன்றி:மாலைமலர்

மருதவனப் புராணம்(பொ.யு. 19-ம் நூற்றாண்டு) சோழ நாட்டில் காவிரியின் தென்கரையில் திருவிடைமருதூரில் அமைந்திருக்கும் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தைப் பாடிய தல புராணம்.

ஆசிரியர்

மருதவனப் புராணத்தை இயற்றியவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். மருதவனப் புராணம் இரண்டாம் சரபோஜி மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க இயற்றப்பட்டது.

நூல் அமைப்பு

archive.org

அர்ஜுனம் என்பது மருதமரம். மருதமரத்தை தலவிருக்ஷமாகக் கொண்ட தலங்கள் மூன்று. ஶ்ரீசைலம், திருவிடைமருதூர், திருப்புடைமருதூர்(பாண்டிய நாடு). இடையில் இருப்பதால் மத்யார்ஜுனம்(திருவிடைமருதூர்) எனப் பெயர்பெற்றது. சிவபெருமான் உமையுடன் தென்னாட்டிற்கு யாத்திரை வந்தபோது அவரது பிரிவாற்றாமையால் கயிலை மலையே இத்தலத்தில் மருத மரமாக நின்றது என்பது தலபுராணக் குறிப்பு. வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து மீட்பளித்த தலம் என்றும் தலபுராணம் கூறுகிறது.

மருதவனப் புராணத்தில் சோழ நாட்டின் சிறப்பு, மருதூரின் சிறப்பு, தலத்தின் சிறப்பு, வெவ்வேறு தீர்த்தங்களின் சிறப்பு, வசிஷ்டர், நாரதர் முதலியோர் வந்து வணங்கியது, வரகுணபாண்டியன் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து மீண்டது போன்ற விவரங்கள் காணப்படுகின்றன. மருதவனப் புராணத்தில் 1387 பாடல்கள் உள்ளன. நூலிலுள்ள சருக்கங்கள்:

  • திருநாட்டுச் சிறப்பு
  • திருநகரச் சிறப்பு
  • நைமிசாரணியச் சிறப்பு
  • தலவிசேடச் சருக்கம்
  • உபதேசச் சருக்கம்
  • சுகீர்த்திமன் சருக்கம்
  • காசிபச் சருக்கம்
  • குமாரபூசைச் சருக்கம்
  • காருண்யாமிருதச் சருக்கம்
  • பாணதீர்த்தச் சருக்கம்
  • பராசுரச் சருக்கம்
  • சோமதீர்த்தச் சருக்கம்
  • உருத்திரதீர்த்தச் சருக்கம்
  • பதுமதீர்த்தச் சருக்கம்
  • பாண்டவதீர்த்தச் சருக்கம்
  • இந்திரதீர்த்தச் சருக்கம்
  • அக்கினி தீர்த்தச் சருக்கம்
  • யமதீர்த்தச் சருக்கம்
  • நிருதிதீர்த்தச் சருக்கம்
  • வருணதீர்த்தச் சருக்கம்
  • வாயுதீர்த்தச் சருக்கம்
  • குபேரதீர்த்தச் சருக்கம்
  • ஈசான தீர்த்தச் சருக்கம்
  • கிருஷ்ணகூபச் சருக்கம்
  • கனகதீர்த்தச் சருக்கம்
  • கங்காகூபச் சருக்கம்
  • கருடதீர்த்தாதிச் சருக்கம்
  • கச்சபதீர்த்தச் சுருக்கம்
  • கௌதமதீர்த்தச் சருக்கம்
  • சேடதீர்த்தச் சருக்கம்
  • கந்ததீர்த்தச் சருக்கம்
  • ஐராவத தீர்த்தச் சருக்கம்
  • வீரசேனச் சருக்கம்
  • சித்திரகீர்த்திச் சருக்கம்
  • விஸ்வாமித்ரச் சருக்கம்
  • வரகுணதேவச் சருக்கம்
  • பிதக்கிணமகிமைச் சருக்கம்
  • வரகுணச் சருக்கம்
  • யுவனாசுவச் சருக்கம்
  • மாந்தாதா சருக்கம்
  • வசுமன்னவச் சருக்கம்
  • அஞ்சத்துவசச் சருக்கம்
  • தேவவிரதச் சருக்கம்
  • நந்தகச் சருக்கம்
  • பூசமகிமைச் சருக்கம்
  • உணங்கன் மீனுயிர் பெற்ற சருக்கம்
  • பொன்னுருவச் சோழன் சருக்கம்
  • சுணங்கன் கதிபெற்ற சருக்கம்
  • திரியம்பகச் சருக்கம்

உ.வே. சாமிநாதையர் மருதவனப் புராணத்தை மூலநூலாகக் கொண்டு 'மத்யார்ஜுன மகாத்மியம்' என்ற தலபுராணத்தை இயற்றினார்.

பாடல் நடை

பூமேவு திசைமுகன்மால் எனுமவரும்
போற்றரிதாய்ப் பொருவி லாதாய்
நாமேவு செழுமறையின் உட்பொருளாய்
அகண்டிதமாய் நளின மென்னும்
மாமேவு மலர்வாவிக் கயல்வாவிக்
கனியுதிர்க்கும் வளத்தின் நீடு
தேமேவு பொழில்புடைசூழ் இடைமருதின்
வளரொளியைச் சிந்தை செய்வாம்.

உசாத்துணை

மருதவனப் புராணம், தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page