under review

மரியன்னை மாலை

From Tamil Wiki

மரியன்னை மாலை (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது. இதனை இயற்றியவர் சூ. தாமஸ்.

வெளியீடு

மரியன்னை மாலை, ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று, தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார். நூலின் ஆசிரியர்: சூ. தாமஸ்.

ஆசிரியர் குறிப்பு

சூசை உடையார் தாமஸ் என்னும் சூ. தாமஸ் தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 22ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வேளாங்கண்ணித் திருத்தலத்தின் மீதும் அங்குக் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய மாதா மீதும் மிகுந்த பக்தி கொண்டு பல சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். அவை தொகுக்கப்பட்டு ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது.

நூல் அமைப்பு

மரியன்னை மாலை நூல், 33 பாடல்களைக் கொண்டது.

உள்ளடக்கம்

மரியன்னை மாலை, மரியன்னையின் புகழைக் கூறி, அன்னையின் அருள் வேண்டிப் பாடப்பட்டுள்ளது.

பாடல் நடை

அன்னையிடம் வேண்டுதல்

மரியே பெருந்தவத் தாயே
மகத்துவந்‌ தானிறறைந்த
திரியேகனுக்கொரு புத்திரியே
அண்டர்‌ தெண்டனிட்டுச்‌
சரியே தொழப்‌ பெருவான்‌
அரசாள்கின்ற சர்வ தயா.
பரியே உனைப்பணிந்‌ தேன்‌
கடைக்‌ கண்கொண்டு பார்த்தருளே

திருவுற்ற மங்கை திகழ்ஞான
மங்கைநற்‌ தெய்வமங்கை
பொருவற்ற மங்கை புகழ்பெற்ற
மங்கை புனிதமங்கை
உருவுற்ற தேவின்‌ அருள்பெற்ற
மங்கை உலகமங்கை
மறுவற்ற மங்கை மரியே!
தந்தாளுன்‌ மலர்ப்பதமே

நீயல்ல வோஎனை ஆட்கொண்ட
செல்வி நினக்கடியேன்‌
சேயல்ல வோமக னாய்வந்த
தெய்வமென்‌ சேட்டனன்றோ
நோயல்ல வோதள்ள நொந்து
வந்தே னொரு நீயெனக்குத்‌
தாயல்ல வோசொல்லவோ
மரியே என்‌ சரித்திரமே

சேயாய்‌ நடந்திலன்‌ தாயாய்த்‌
திகழ்ந்திலன்‌ செப்புமறை
வாயால்‌ மொழிந்திலன்‌ கையாலும்‌
ஒன்றை வழங்குகில்லேன்‌
நாயா அலைந்தனன்‌ நோயால்‌
மெலிந்தனன். நன்றி கெட்ட
பேயா மெனக்‌ கருள்‌ வாய்‌
மரியே! அன்பின்‌ பேரொளியே

நெஞ்சால்‌ நினைத்தும்‌ அறிவால்‌
அறிந்தும்‌ நிதம்பவமே
அஞ்சா திழைத்திடும்‌ மாபாவி
யானென்‌ றறிந்திருந்தும்‌
மஞ்சாய்ப்‌ பொழிந்து மதியாய்க்‌
குளிர்ந்தென்‌ மனத்திருந்து
துஞ்சா தளித்தனை யேமரி யே!
சிறு தொண்டனையே

மதிப்பீடு

மரியன்னை மாலை, வேளாங்கண்ணி அன்னையின் மீது பாடப்பட்ட நூல். பாவம் செய்து தவறிழைத்தோரையும், குற்றம் செய்தோரையும் வலிய வந்து ஆட்கொண்டு அன்னை அருள் செய்த விதத்தினை இனிய எளிய தமிழில் சூ. தாமஸ் பாடினார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jun-2024, 09:40:04 IST