மக்கள் சக்தி இயக்கம்
- சக்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சக்தி (பெயர் பட்டியல்)
மக்கள் சக்தி இயக்கம் சுய வளர்ச்சி, சுயப் பொருளாதார மேம்பாடு, சமுதாய ஈடுபாடு ஆகியவற்றை முன்னோடி கொள்கைகளாகக் கொண்டு, டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியால், 1988-ல் தொடங்கப்பட்டது. நதி நீர் இணைப்பு , கிராம சுயாட்சி, கல்வித்தர மேம்பாடு, சுயப் பொருளாதார மேம்பாடு, சிறுதொழில் வளர்ச்சி, பெண்களின் நலவாழ்வு, தொழில் முன்னேற்றம், சமுதாய விழிப்புணர்வு, இளைஞர் முன்னேற்றம் போன்றவற்றை லட்சியமாகக் கொண்டு மக்கள் சக்தி இயக்கம் செயல்பட்டது.
மக்கள் சக்தி இயக்கத் தோற்றம்
பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நல்லுறவும் நட்பும் கொண்டிருந்த எம்.எஸ்.உதயமூர்த்தி, எந்த ஒரு அரசியல் இயக்கத்தையும் சாராமல், தனித்ததொரு சமூக இயக்கத்தினை உருவாக்க விரும்பினார். கார்போரண்டம் நிறுவனத்தில் நிர்வாகியாகப் பணியாற்றிய ஆபிரகாம், அதற்கு உறுதுணையாக இருந்தார். 1988-ல், சென்னை பாரதீய வித்யா பவனில் மக்கள் சக்தி இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
மக்கள் சக்தி இயக்கத்தின் கொள்கைகள்
சுயவளர்ச்சி, சுய பொருளாதார மேம்பாடு, சமுதாய ஈடுபாடு ஆகியவை மக்கள் சக்தி இயக்கத்தின் மூன்று முக்கியமான கொள்கைகள்.
மக்கள் சக்தி இயக்கத்தின் லட்சியம்
மக்களை அதிகாரப்படுத்துதல், மனிதவளத்தை மேம்படுத்துதல், விவசாய முன்னேற்றம், மதுவிலக்கு, விரைவான அரசு நிர்வாகம், மருத்துவ வசதிகள், தொழில், பொருளாதார முன்னேற்றம் - போன்றவை மக்கள் சக்தி இயக்கத்தின் பணி சார்ந்த லட்சியங்கள்.
மக்கள் சக்தி இயக்கப் பணிகள்
1988, ஜுலையில், திருப்பூரில், மதுவிலக்கிற்காக, மக்கள் சக்தி இயக்கத்தினரின் முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 1991-ல் மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக, நதிகளைத் தேசியமயமாக்க வேண்டி, எம்.எஸ். உதயமூர்த்தி, தன் குழுவினருடன் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை பாதயாத்திரை மேற்கொண்டார். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக 1993 முதல் பாத யாத்திரை, பொதுக்கூட்டம், கையெழுத்து இயக்கம் போன்றவற்றை நடத்தினார்.
மக்கள் சக்தி இயக்கம், அர்ப்பணிப்புள்ள இளைஞர்களைக் கொண்டு கிராம மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக வேலை வாய்ப்பு, சிறுதொழில்கள் வாயிலாக மக்கள் வருமானத்தைப் பெருக்குதல், இரவுப் பள்ளி மற்றும் நூலகம் அமைத்தல், கிராம மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, அச்சேமிப்புப் பணத்தைக் கொண்டு பலரும் தொழில் தொடங்க உதவிப் பயிற்சி அளித்தல், சுகாதாரம் - கழிப்பறை வசதி, பூரண மதுவிலக்கு, பெண்கள் முன்னேற்றம், பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து செயலாற்றியது. பல்வேறு மக்கள் நலப் பணிகளை முன்னெடுத்தது.
எம்.எஸ்.உதயமூர்த்தி தமிழகம் முழுதும் பயணப்பட்டு பல்வேறு பள்ளி, கல்லூரிகளில், தன்னம்பிக்கைச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். மக்கள் சக்தி இயக்கத்தை மாணவர்களிடம் அறிமுகம் செய்தார். தமிழ்நாடு முழுவதும் மக்கள் சக்தி இயக்கக் கூட்டங்களை நடத்தி, அவ்வியக்கத்தின் கொள்கைகளை மக்களிடையே பரப்பினார்.
மக்கள் சக்தி இயக்கத்திற்கு தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, விகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்பிரமணியன், இதழாளர், பத்திரிகையாளர் மணியன், திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர், பதிப்பாளர் வானதி திருநாவுக்கரசு, வித்வான் வே. லட்சுமணன் உள்ளிட்ட பலர் உறுதுணையாக இருந்தனர். மக்கள் சக்தி இயக்கக் கொள்கைகளை வலியுறுத்தி கே. பாலசந்தர் 'உன்னால் முடியும் தம்பி' என்ற படத்தை இயக்கினார். இத்தலைப்பு, எம்.எஸ். உதயமூர்த்தி எழுதிய கட்டுரைத் தொடரின் தலைப்பு. படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த நடிகர் கமல்ஹாசனுக்கு, உதயமூர்த்தி என்று பெயரிட்டிருந்தார் பாலசந்தர்.
தற்காலச் செயல்பாடுகள்
'நம்புங்கள் நம்மால் முடியும்' என்பதை லட்சிய வார்த்தையாகக் கொண்டு மக்கள் சக்தி இயக்கம் இயங்கி வருகிறது. இளைஞர் ஒருவர் முரசறைவது போன்ற படம் இந்த இயக்கத்தின் சின்னம். உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துதல், தகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல், பூரண மதுவிலக்கு, கல்வி மற்றும் விவசாய மேம்பாடு-இவற்றில் அக்கறையுடன் மக்கள் சக்தி இயக்கத்தினர் செயல்படுகின்றனர். மரம் நடுதல், அது பற்றிய விழிப்புணர்வு, மூளைச் சாவு அடைந்தோரின் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வியக்கத் தலைமையகம் சென்னையில் உள்ளது. இராசலிங்கம் இவ்வியக்கத்தின் மாநிலத்தலைர். மாநில துணைத் தலைவர் ஆக முனைவர் பெரியசாமி, மாநிலப் பொருளாளர் ஆக கே.சி. நீலமேகம், மாநிலப் பொதுச் செயலாளர் ஆக எல்.பாஸ்கரன், துணைச் செயலாளர் ஆக ஆர்.இளங்கோ ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு முழுதும் கிளைகள் கொண்ட இந்த இயக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினராக இருந்து சமூக நற்பணிகளை முன்னெடுக்கின்றனர்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 04:18:26 IST