போர்க்கெழுவஞ்சி
போர்க்கெழுவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். போர்தொடுத்துச் செல்பவர் வஞ்சிப் பூவை சூடிச்செல்வது வழக்கம். வஞ்சி என்பது ஒரு கொடிவகை.வஞ்சிப்பூ மாலை அணிந்து போருக்குச் செல்லும் மன்னனின் படை எழுச்சியின் சிறப்பை அகவற்பாவினால் கூறுவது போர்க்கெழுவஞ்சி (போருக்கு எழு வஞ்சி).
போர்க்கெழுவஞ்சியின் இலக்கணத்தைக் கூறும் நூற்பாக்கள்:
போர்க்கெழு மன்னவர் வஞ்சிப் பூந்தொடை
அணிந்து புறப்படு மடுபடையெழுச்சி
சிறப்பக வலியினால் செப்புதல் போர்க்கெழு
வஞ்சி யெனப்பெயர் வைக்கப் படுமே
முத்துவீரியம், பாடல் 110
வேற்றுமைப் பகைவர்மேற் போர்குறித்தேகுவது
வேந்தர் வஞ்சிப்பூ மாலை
வேய்ந்தெழு படைச்சிறப் பாசிரிய வகையினால்
விள்ளல் போர்க் கெழு வஞ்சியாம்
- பிரபந்த தீபிகை -15
போர்க்கெழு வஞ்சியே போற்றலர் மீதில்
வயவேந்தன் வஞ்சிமாலை யணிந்துசெல்
படையெழுச்சி அகவற் பாவால் பகர்தலே.
- பிரபந்த தீபம் - 57
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
வெளி இணைப்புகள்
✅Finalised Page