under review

பூசல்மயக்கு

From Tamil Wiki

பூசல்மயக்கு பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. குலமுதல்வனான புதல்வன் இறந்தது குறித்துச் சுற்றம் அரற்றுவதையோ அல்லது மன்னன் இறக்க, அவனது சுற்றம் அரற்றுவதையோ குறிக்கிறது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் இரு கொளுப்பாடல்கள் இத்துறையின் இலக்கணத்தைக் கூறுகின்றன.

கொளு 1

மழைபோல் குளிர்ந்த அழகிய பூப் போன்ற கண்களையுடைய சிறுவன் இறந்ததால் பெரிய சுற்றத்தினர் கொண்ட துயரப் புலம்பலைக் கூறுதல்.

பல்லிதழ் மழைக்கண் பாலகன் மாய்ந்தெனப்
புல்லிய பெருங்கிளைப் பூசல் கூறின்று (கொளு 11.6)

வெண்பா

அலர்முலை அஞ்சொல் அவணொழிய அவ்இல்
குலமுதலைக் கொண்டு ஒளித்தல் அன்றி - நிலம்உறப்
புல்லிய பல்கிளைப் பூசல் பரியுமோ
கொல்லிய வந்தொழியாக் கூற்று (259)

பொருள்: பிள்ளைக்காகத் தன்னிடத்தே பாலையும் கொஞ்சும் சொற்களையும் கொண்ட தாய் இருக்க, அவ்வீட்டின் மூலமாகிய குழந்தையைக் கைப்பற்றிய கூற்றுவன், பிரிவால் புலம்பும் உறவினரின் துயரத்திற்கு இரங்குவானோ?'

கொளு 2

மன்னன் இறக்க அந்நாட்டிலுள்ளோர் வருந்துவது.

வேந்தன் மாய்ந்தென வியலிடம் புலம்பினும்
ஆய்ந்த புலவர் அதுஎன மொழிப (கொளு 11.7)

வெண்பா

எண்ணின் இகல் புரிந்தோர் எய்யாததுஇல் போலும்
கண்ணின் ஒளிர் வேலார் கரந்த பின் - அண்ணல்
புகழொடு பூசல் மயங்கிற்றால் பொங்கும்
அகழ்கடல் வேலி அகத்து (260)

பொருள்: ஒளிபொருந்திய வேற்படையினை உடைய நம் மன்னன் போர்க்களத்தில் இறந்த பின்னர், கடலினை வேலியாகவுடைய இப் பூமியினின் ஆரவாரமெல்லாம், அத் தலைமையாளனின் புகழைக் கூறுவதாகவே உள்ளன. போரினை விரும்பிய வீரர்கள் பெறாத பேறுதான் ஒன்றுமில்லை போலும்!

உசாத்துணை

பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jul-2025, 11:53:00 IST