under review

பாலியர் நேசன் (இந்திய இதழ்)

From Tamil Wiki
பாலியர் நேசன் - 125வது இதழ்
பாலியர் நேசன் இதழ்கள்
பாலியர் நேசன் இதழ் - 126வது வருடம்

‘பாலியர் நேசன்’ ஒரு சிறார் இதழ். 1891 முதல் தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் இருந்து வெளிவந்தது. சிறார்களிடையே பைபிள் வாசிப்பைப் பரப்புதல், ஒழுக்கக் கல்வி, சமயக் கல்வி, நற்சிந்தனைகளை மேம்படுத்துதல் போன்றவற்றை கொள்கைகளாகக் கொண்டு இவ்விதழ் வெளிவந்தது. 125 ஆண்டுகளைக் கடந்து இன்றும் இந்த இதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது. இதன் ஆசிரியர் ரெவரெண்ட் ஆ. பாக்யராஜ்.

பிரசுரம், வெளியீடு

நற்போதகம் இதழைத் தொடர்ந்து, சிறார்கள் கிறிஸ்தவ ஒழுங்கிலும், பக்தியிலும் வளர்க்கப்பட வேண்டும் என்பதற்காக, 1891-ல் தொடங்கப்பட்ட இதழ் பாலியர் நேசன். திருநெல்வேலி C.M.S பாலியர் பக்தி விருத்தி சங்கம் இதனை வெளியிட்டது. சி.எம்.எஸ். மிஷனரியாக இருந்த பாதிரியார்கள் பலரும் இதன் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டினர். ஆரம்பத்தில் மும்மாத இதழாக வெளிவந்த பாலியர் நேசன், சிறார்களின் வரவேற்பைப் தொடர்ந்து மாத இதழானது. பாலியர் நேசன், 125 ஆண்டுகளைக் கடந்த இன்றளவும் வெளிவந்து கொண்டிருக்கிறது. Tirunelveli Diocesan Children Mission இதனை வெளியிடுகிறது. 125-வது இதழின் முகப்பு அட்டையில் இதழின் தனிப்பிரதி ரூபாய் 10/- என்றும், ஆண்டுச் சந்தா ரூபாய் 100/- என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரெவரெண்ட் ஆ. பாக்யராஜ் இதன் ஆசிரியராக உள்ளார்.

உள்ளடக்கம்

முற்கால இதழ்கள்

இதழின் வளர்ச்சியில் சாமுவேல் பாக்கியநாதன், R.V. ஆசீர்வாம், S.G. மதுரம், ஞான சிகாமணி, G. தேவதாசன், ஹெர்க் லாட்ஸ் (B, Herklorts 1899), ஆரோன்ஸ்மித் (M.E, Arrowsinith 1904), சாமுவேல் பவுல் உள்ளிட்ட பலர் பங்களித்தனர். 1949-ம் ஆண்டு முதல் தினசரி தியான நாட்குறிப்பு அட்டை அச்சடிக்கப்பட்டு சிறுவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஒழுக்கக் கல்வி, சமயக் கல்வி, நற்சிந்தனைகள் அடங்கிய செய்திகள் பாலியர் நேசனில் வெளியாகின. ‘பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்' என்ற பாடலை சாமுவேல் பாக்கியநாதன் எழுதி பாலியர் நேசனில் வெளியிட்டார். இது சிறார்களின் கிறிஸ்து கீதமானது. மாணவ, மாணவியர் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதும் படி ஊக்குவிக்கப்பட்டனர். தரமானவை பாலியர் நேசன் இதழில் பிரசரிக்கப்பட்டதுடன், எழுதியவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. சிறுவர்களின் வேதாகம அறிவை ஊக்குவிக்கும் வகையில் பாலியர் நேசன் இதழில் வெளிவரும் வேத வினாக்களுக்கு ஒழுங்காகவும், சரியாகவும் விடை எழுதுவோருக்கு, ஆண்டின் இறுதியில் சான்றிதழ் வழங்கும் முறை 1960-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்கால இதழ்கள்

கால மாற்றத்துக்கேற்ப தற்கால இதழ் வெளிவருகிறது. இதில், சிறார்களை ஊக்குவிக்கும் வகையிலான தலையங்கம், பைபிளில் இருந்து சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், பாலியர் சங்கம் மூலம் நிகழ்ந்து வரும் பணிகள், தினசரி தியானம் என்னும் பிரார்த்தனைப் பகுதி போன்றவை இடம் பெற்றுள்ளன.

வேதாகமப் பகுதி, திருவசன ஊழியம், புனிதர்கள் வரலாறு, பெற்றோர்களுக்கான அறிவுரை, குட்டிக் கதைகள் போன்றவையும் இடம் பெறுகின்றன. புதிர்கள், புள்ளிகளை இணைத்து உருவத்தை முழுமையாக்குதல், எழுத்துப் புதிர்கள், கேள்வி-பதில்கள், நடப்புச் செய்திகள் போன்றவையும் வெளியாகியுள்ளன.

பாலியர் சங்கங்கள் குறித்த செய்திகள், நிகழ்வுகள், நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள், சிறார்களின் சாதனைகள், சிறார்களுக்கான பாடல்கள், காலையும், மாலையும் வாசிக்க வேண்டிய வேதாகமப் பகுதிகள், மாதாந்திர ஜெபக் கூடுகைகள், குட்டிக் கதைகள், படக்கதைகள், சாட்சிகள், ஆயுள் சந்தாதாரர்களாக இணைந்தவர்கள் பற்றிய படங்களுடன் கூடிய குறிப்புகள் ஆகியவை இதழ்தோறும் இடம் பெற்றுள்ளன. 28 பக்கங்களில் இந்த இதழ் வெளியாகிறது.

வரலாற்று இடம்

சிறார்களுக்கு ஒழுக்கம், கல்வி, சத்தியத்தின் வழி நடத்தல் ஆகியவற்றைப் போதிக்கும் இவ்விதழ் 125 ஆண்டுகளைக் கடந்தும்வெளிவந்துகொண்டிருக்கிறது. தமிழில் நீண்ட பல ஆண்டுகளாக வெளிவரும் இதழாக ‘பாலியர் நேசன்’ மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page