under review

பாண்பாட்டு

From Tamil Wiki

பாண்பாட்டு தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று.பாணர் பாடும் பாடல் என்பது இதன் பொருள். போர்க்களத்திற்குப் படைகளுடன் செல்லும்பாணர்கள் போரில் இறந்த வீரர்களுக்குச் சாப்பண் பாடி இறுதிக்கடன் செய்யும் உரிமை படைத்தவர்கள். பாண்பாட்டுத் துறை இவ்வாறு பாணர்கள் இறுதிக்கடன் செய்வதை விளக்குகிறது. உறவினர்கள் வந்து இறுதிக் கடன் செய்ய இயலாது என்பதால் இத்தகைய ஏற்பாடு உருவாகியிருக்கலாம்.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

பாண்பாட்டு புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியரால் புதிதாகக் கூறப்பட்டது.

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் குருதியால் சிவந்த போர்க்களத்தில் பகைவரது யானைகளைக் கொன்ற பின்னர், இறந்த வீரர்களுக்கு யாழிசை வல்ல பாணர்கள் உரிமை செய்தது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

வெண்கோட்ட களிறு எறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக்
கைவல் யாழ் பாணர் கடன் இறுந்தன்று (கொளு 7.11)

வெண்பா

தளர் இயல் தாய் புதல்வர் தாம் உணராமைக்
களரிக் கனல் முழங்க மூட்டி - விளரிப்பண்
கண்ணினார் பாணர் களிறு எறிந்து வீழ்ந்தார்க்கு
விண்ணினார் செய்தார் விருந்து (137_

பொருள்: போர்க்களத்தில் பகைவரது களிற்றினைக் கொன்று தாமும் வீழ்ந்த தும்பை வீரருக்குத் துறக்கத்தே உள்ளவர்கள் (வானவர்கள்/தேவர்கள்) விருந்தளித்தனர். பாணர்களோ, தளர்ந்த இயல்பினையுடைய, அவ்வீரர்களின் மனைவியும் தாயும் புதல்வரும் தாம் அவ்வீரர் இறந்ததை அறியாததால், களத்திலே அவரது உடலுக்கு நெருப்பிட்டு விளரிப்பண்னை( சாப்பண்) பாடக் கருதினார்கள்.

உசாத்துணை

தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jul-2025, 10:46:49 IST